E   |   සි   |  

2025-10-14

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குரிய பொறிமுறையைத் தயாரிக்கவும் – கொழும்பு மாநகரசபைக்கு கோபா குழு அறிவுறுத்தல்

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கொழும்பு மாநகரசபைக்கு அறிவுறுத்தியது.

மதிப்பீட்டு வரியைப் பராமரித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்காக KOICA திட்டத்தின் மூலம் ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்க எதிர்பார்ப்பதாக கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கோபா குழுவிடம் தெரிவித்தனர்.

இதற்கு அமைய, KOICA திட்டத்துடன் கலந்துரையாடி மதிப்பீட்டு வரியை அறவிடும் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்க தயாரிக்கும் தரவுத்தள அமைப்பைப் பயன்படுத்தி அடையக்கூடிய முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் கொழும்பு மாநகரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலிப்பதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) 2025.10.08 ஆம் திகதி கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தினால் இதுவரை சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நிலுவைத் தொகையை 6 மாதங்களுக்குள் வசூலிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் கோபா குழு கேள்வியெழுப்பியது. 

இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ரூ.610.96 மில்லியன் நிலுவைத் தொகையில், இதுவரை ரூ.148 மில்லியன் அறவிடப்பட்டுள்ளதாகக் கூறினர். எஞ்சியுள்ள தொகையை அறவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அறவிட வேண்டிய இந்த நிலுவை வருமானத்தை முறையாக அறவிடுவதற்கான திட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையை குழுவுக்குச் சமர்ப்பிக்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும், கொழும்பு மாநகர சபைக்குக் கிடைக்கும் ஏனைய வருமான வழிகளைச் சேகரிப்பதற்காக ஒரு முறையான தரவு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டம் மற்றும் அடையாளம் காண முடியாத சொத்துக்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் கோபா குழுவின் தலைவர் கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அத்துடன், மோதறை பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட எலி ஹவுஸ் காணி தொடர்பாக கோபா குழு முன்னர் வழங்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது கோபா குழுவினால் அதுவரையில் குறித்த காணியை சட்டவிரோதமாக அனுபவித்துவரும் நபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பில் கௌரவ ஆளுனருடன் கலந்துரையாடலை நடத்தி, குறித்த சொத்து கொழும்பு மாநகரசபையினால் மீளப்பெற்றுக்கொள்வதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அத்துமீறியுள்ள நபர்கள் நிலுவைக் குத்தகை மற்றும் அபராதங்களைச் செலுத்த ஒப்புக்கொண்ட போதிலும், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். இதன்போது, காணியின் மொத்த அளவு 140 பேர்ச்சஸ் ஆக இருந்தாலும், 1992 ஆம் ஆண்டு முதல் 40 பேர்ச்சஸ் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்தது. அந்த ஒப்பந்தமும் 2022 ஆம் ஆண்டில் காலாவதியாகிவிட்டது என்று கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், காணியில் ஒரு தொண்டு நிறுவனம் இயங்கி வருவதால், அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிலுவைக் குத்தகை மற்றும் அபராதப் பணத்தை அறவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினர். அத்துடன், ஒப்பந்தம் செய்யப்படாத எஞ்சிய 50 பேர்ச்சஸை மீண்டும் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கைகளால் பல சிக்கல்கள் எழும் என்று சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், நிதி மற்றும் பொது நிர்வாக ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதன்படி, பயன்படுத்தப்படும் எஞ்சிய பேர்ச்சஸ் காணிக்கான நிலுவை அபராதத் தொகை குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார், மேலும் அந்த அறிக்கையை டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்க முடியும் என்று அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.

அத்துடன், பொரள்ளை கணத்தை நிர்வாகியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதற்குரிய காணியைத் தவறாகப் பயன்படுத்தி அங்கீகாரம் பெறப்படாது அமைக்கப்பட்ட மலர்சாலை தொடர்பில் குழு முன்னர் வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் குழு வினவியது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அதுவரை குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது குறித்து குழு அதிருப்தி தெரிவித்தது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அரவிந்த செனரத், தினிந்து சமன் ஹென்னாயக்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ரோஹித அபேகுணவர்தன, ஜே.சி.அலவத்துவல, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ருவன்திலக ஜயக்கொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சந்தன சூரியாரச்சி மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலீ பல்தசார் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.


2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks