பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) மேற்பார்வைக்கு உள்ளாகும் 457 அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளைத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வொன்று நேற்று (செப். 02) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. கோப் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் 457 நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர் நாயகங்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் அல்லது முக்கிய பொறுப்பை வகிக்கும் அதிகாரிகள் ஏறத்தாழ 800 பேர் மூன்று குழுக்களாக அழைக்கப்பட்டு இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வில் வளவாளர்களாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, அரசாங்க தொழில்முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.வி.சீ.தில்ருக்ஷி, தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எஸ்.எம்.டி.சில்வா, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.கருணாரத்ன மற்றும் ஆர்.கே.ஜயலத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, அரசாங்க நிறுவங்கள் மற்றும் கோப் குழு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய பொறுப்பு அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கோப் குழுவுக்குக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்கு அமைய இச்செயலமர்வின் மூலம் பெறப்படும் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் இதற்கான ஆரம்பமாக அமையும் என்றும், ஏற்கனவே காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த நிறுவனங்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் ஒரே நேரத்தில் அழைத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கு இணங்காத சந்தர்ப்பங்கள், சட்ட திட்டங்களைப் பிழையாகப் புரிந்துகொண்டு செயற்படும் சந்தர்ப்பங்கள், காலத்திற்கு ஏற்ற வகையில் விடயங்களைப் புதுப்பிக்கத் தவறுகின்றமை போன்ற பலவீனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சமரவீர அவர்கள் தெரிவித்தார். சட்டத்தில் உள்ள காலாவதியான உபபிரிவுகளை நிகழ்காலத்திற்கு பொருத்தமானதாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கோப் குழுவில் வெளிப்படும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் வகையில் நிலையியற் கட்டளைகளைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு வருட காலத்திற்குள் ஒவ்வொரு நிறுவனத்தையும் வரவழைக்க முடியாது என்பதால், இந்த 457 நிறுவனங்களின் செயற்பாட்டையும் ஒவ்வொரு வருடமும் கண்காணிக்க புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் கோப் குழுவிற்கு அழைக்கப்படும் நிறுவனங்கள் விஞ்ஞான ரீதியான அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வகிபாகம் குறித்து பதில் கணக்காய்வாளர் நாயகம் விளக்கினார். அத்துடன், பெருநிறுவனத் திட்டம், செயற்பாட்டுத் திட்டம், நிறுவனக் கட்டமைப்பு, வருடாந்த அறிக்கை, பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள், வரவுசெலவுத்திட்ட முகாமைத்துவம், பணியாளர்களை இணைத்துக் கொள்ளல், வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற விடயங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடைமுறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவை தொடர்பான முன்மொழிவுகளை குழுவிற்குச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிறுவனத் தலைவர்களின் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை எழுத்துமூலம் குழுவிற்குத் தெரிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இந்த நிறுவனங்களின் சட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும் வகையில் மேலும் செயலமர்வுகளை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செயலமர்வில் கோப் குழுவின் கௌரவ உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அசித நிரோஷன ஏகொட விதான, சந்திம ஹெட்டிஆரச்சி, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப் மற்றும் கோபா குழுவின் ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே, கோப் குழுவின் ஆலோசகரும், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியுமான பியசேன ரணசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks