logo

E   |   සි   |  

2025-09-01

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாராளுமன்ற உணவுகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்குக் குழு

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கௌரவ சபாநாயகரின் வேண்டுகோளுக்கு அமைய, பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வளாகத்தில் உணவு தயாரிக்கும் சமையலறை உட்பட பல இடங்களை ஆய்வு செய்தனர். அதற்கமைய, இந்த ஆய்வின் அவதானிப்புகள் அடங்கிய விரிவான அறிக்கை பொது சுகாதார பரிசோதகர்களால் சபைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி வை.பி. இந்திக்க தெரிவிக்கையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் சுமார் 150 அரச நிறுவனங்களின் உணவுப் பாதுகாப்பை ஆய்வு செய்திருந்தாலும், பாராளுமன்றத்தின் உணவுப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். இதற்காகத் தலையிட்ட சபாநாயகருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, பாராளுமன்றத்தின் உணவுப் பொருட்களைப் பெறுவது முதல் உணவு உற்பத்தி, களஞ்சியம் மற்றும் பரிமாறுவது வரையிலான ஆய்வின் அறிக்கை கௌரவ சபாநாயகருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய பணியாளர்களுக்குப் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கௌரவ சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார். அதற்கமைய, பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்படுவதாக கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார். அதற்கமைய, பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் சமையலறை தொடர்பான நிபுணத்துவம் பெற்ற பொறியியலாளர் அல்லது கட்டடக் கலைஞர், பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பாராளுமன்றத்தின் இணைப்புப் பொறியியலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்க வேண்டும் என இங்கு முன்மொழியப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் வழங்கப்படும் சேவைகள், பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அது தொடர்பாகக் காணப்படும் குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ சபாநாயகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks