பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-08-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச இளைஞர் தினத்துடன் இணைந்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 அங்கத்தவர்களுக்கு விசேட பாராட்டு நிகழ்வு நேற்று (ஆக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பங்குபற்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித்தவிசாளர் ஹேமாலி வீரசேகர, இளைஞர் விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சரும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களை முதலாவதாக சபா மண்டபத்தில் கௌரவ சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்து வரவேற்றார். அதனை அடுத்து அவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதனையடுத்து, அவர்களுக்கான விசேட பாராட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்கள் வரவேற்கப்பட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, வரலாற்றில் முதன்முறையாக தேசிய சம்மேளனத்துக்கு பெண் அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், இளைஞர்கள் தொடர்பில் வரலாற்றில் கட்டியெழுப்பப்பட்டுள்ள கதையை மாற்றி புதிய அணுகுமுறையில் கதையைக் கட்டியெழுப்பும் தேவையை வலியுறுத்திய கௌரவ பிரதமர் அதற்கு தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, 1993 ஆம் ஆண்டின் பின்னர், அதாவது 32 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாண்டில் தேசிய இளைஞர் மாநாடொன்றின் மூலம் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2025 - 2027 தேசிய சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்கால பரம்பரையான இந்நாட்டின் இளைஞர்கள் சமூகத்துக்கு தலைமைத்துவத்தை வழங்குதல் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் இந்த புதிய அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் எனவும் கௌரவ சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்நிகழ்வில் இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் அங்கத்தவர்களின் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. அதனையடுத்து, அவர்களுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரினால் பாராட்டுச் சின்னக்களும் வழங்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளரும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளருமான எம். ஜயலத் பெரேரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் (சட்டத்தரணி) சுபுன் விஜேரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks