01

E   |   සි   |  

2025-06-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2011ஆம் ஆண்டு வடமத்திய மாகாண சபையினால் 117 கோடி ரூபா மிகை மதிப்பீட்டின் அடிப்படையில் 53 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன – அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

  • ஒரே வீதிக்கு ரூ. 5 மில்லியனுக்குக் குறைவான திட்டங்கள் பலவற்றின் கீழ் ஒதுக்கீடு – 53 வீதிகள் 741 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையளிப்பு
  • ரூ. 2934 மில்லியன் மதிப்புள்ள 629 திட்டங்கள் (42 வீதிகள்) கேள்விப்பத்திரங்கள் கோரப்படாமல் ஒரு ஒப்பந்ததாரிடம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டமையும் தெரியவந்தது
  • ரூ. 11 மில்லியன் மதிப்பீட்டுப் பெறுமதியைக் கொண்ட 1 கிலோமீற்றர் வீதிக்கு ரூ. 45 மில்லியன் வரை செலுத்தப்பட்டுள்ளது
  • இரஜரட்டையிலுள்ள அப்பாவி விவசாயிகளின் வரிப் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டமை துரதிஷ்டமானது – வீதி அபிவிருத்தி வரலாற்றில் மிகப்பெரிய மோசடி – கோபா குழுவின் தலைவர்
  • 500ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையில் 54 கோடி ரூபா பெறுமதியான கேட்போர்கூடமொன்றை அமைப்பதற்காகச் செலுத்தப்பட்ட 100 மில்லியன் ரூபா முற்பணம் விரயமானது – தற்பொழுது காடாகியுள்ளது

 

2011ஆம் ஆண்டு வடமத்திய மாகாணசபையினால் 1170 மில்லியன் ரூபா (1.17 பில்லியன் அல்லது 117 கோடி) மிகை மதிப்பீட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் அண்மையில் (ஜூன் 18) தெரியவந்தது. 2013 ஆம் ஆண்டில், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு நடத்திய விசாரணையில் இது தெரியவந்திருப்பதுடன், குறிப்பிட் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் உரிய தரத்தில் இல்லையென்பதால் ஒப்பந்ததாரர்களுக்கான பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

வடமத்திய மாகாண சபை தொடர்பான 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (18) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமத்திய மாகாண பிரதம செயலாளர் மற்றும் வடமத்திய மாகாண சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 53 வீதிகளில் 3592 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட ஒரே வீதி, 5 மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டைக் கொண்ட பல திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 741 திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட ஒப்பந்தகாரர்களிடமிருந்து விலைமதிப்புக் கோரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அப்போதைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரின் அனுமதியுடன் குறிப்பிட்ட திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற காரணத்தினாலேயே ரூ.5 மில்லியனுக்கும் குறைவான தொகை மதிப்பீட்டைக் கொண்ட திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இங்கு புலப்பட்டது.

இந்தத் திட்டங்கள் பகிரங்க விலைமனுக்கள் எதுவும் கோரப்படாமல் ஏழு ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.2934 மில்லியன் மதிப்புள்ள 629 திட்டங்கள் (42 வீதிகள்) அவர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஒப்பந்ததாரரின் நிதி நிலைமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து அவருக்கு ரூ.300 மில்லியன் முதல் ரூ.600 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மாத்திரமே வழங்கியிருக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த  ஒப்பந்த நிறுவனம் அப்போது வடமத்திய மாகாணத்தில் ஆட்சியில் இருந்த ஒரு அரசியல்வாதியுடன் தொடர்புடையது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, ரூ.11 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட 1 கிலோமீற்றர் வீதிகளுக்கு ரூ.45 மில்லியன் வரை மிகவும் ஊழல் நிறைந்த முறையில் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இவ்வளவு அதிக செலவில் புனரமைக்கப்பட்ட வீதிகள் சரியான தரத்தைப் பூர்த்திசெய்யாமையால் குறுகிய காலத்திற்குள் பழுதடைந்திருப்பதும் குழுவில் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய அதிகாரியான அப்போதைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பதில் பொது முகாமையாளர் தற்பொழுது உயிருடன் இல்லையென்பதும், அவர் மகாவலி அதிகாரசபையில் பணியாற்றியபோது புதையல் தேடிய குற்றச்சாட்டுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.  அதன் பின்னர், குறித்த சம்பவத்திற்கு எதிராகச் செயற்பட்ட அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும், ஒப்பந்தகாரர்களுக்கு பணம் செலுத்துவது நிராகரிக்கப்பட்டமையால் 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சரினால், பின்னர் நியமிக்கப்பட்ட வீதிப் போக்குவரத்து அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரை ஓய்வுபெறச்செய்துள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

ஒரு மாகாண சபையின் வீதி அபிவிருத்திக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது ஒரு பிரச்சினையாக இருப்பதாக நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதில் அப்போதைய பொருளாதார விவகார அபிவிருத்தி அமைச்சரின் செல்வாக்குக் காணப்பட்டதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வடமத்திய மாகாணத்தின் கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் வரிப் பணத்தை மோசடி செய்த சம்பவம் மிகவும் துரதிஷ்டமானது என்றும், இச்சம்பவம் நாட்டின் வீதி அபிவிருத்தி வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்ததொரு சம்பவமாக அடையாளம் காண முடியும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து பணத்தை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றில் முறையீடு செய்யவும், இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவுறுத்தியது.

2017 ஆம் ஆண்டு பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடம் கட்டுவதற்காக ஒரு கட்டுமான நிறுவனத்துடன் ரூ. 542,019,300 (542 மில்லியன்/54.2 கோடி) தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒப்பந்ததாரருக்கு ரூ. 100 மில்லியன் முற்பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் கட்டுமானப் பணிகள் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டு திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரியவந்தது. எந்தவொரு சாத்தியக்கூற்று ஆய்வும் இல்லாமல் ஐநூறுக்கும் குறைவான குழந்தைகள் படிக்கும் பாடசாலைக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது நியாயமில்லை என்றும், அப்போதைய வடமத்திய மாகாண முதலமைச்சரின் சொந்த விருப்பப்படி இது முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகளுடன் ஒப்பந்ததாரர்கள் கொண்டிருந்த தொடர்புகளே இதற்குக் காரணம் என்பதும் இங்கு தெரியவந்தது. தற்போது இழுபறியில் உள்ள இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, பணத்தை மீட்டு, ஏதேனும் தவறு நடந்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. மேலும், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமறும் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, சாமரச சம்பத் தசநாயக்க, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டி.கே. ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன, சுனில் ரத்னசிறி மற்றும் தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-03

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன

பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.


2026-06-03

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-02

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 1000 மில்லியன்

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-29

இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன

அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks