01

E   |   සි   |  

2025-04-23

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

  • இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு
  • பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது
  • பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல்

 

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது.

இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில்  2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர்.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை  நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும்.

இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks