E   |   සි   |  

2025-04-09

செய்தி வகைகள் : செய்திகள் 

உஸ்பெகிஸ்தான், தஷ்கெத் நகரில் நடைபெறும் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தானின் தஷ்கெத் நகரில் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாடு, சர்வதேச உறவுகள், சமூக அபிவிருத்தி மற்றும்  ஆளுகை போன்றவற்றில்  தாக்கத்தைச் செலுத்தும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கெடுத்துள்ள கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் அடங்கிய அமர்வுகளில் தமது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மிகவும் அழுத்தமான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை வகுக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் தளமாகவும் இது அமைந்துள்ளது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி மாண்புமிகு ஷவ்கத் மேசியோயெவ், நடைமுறைகளில் முக்கியத்துவமான தருணங்களைக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்றங்களுக்கு இடையில் உயர் மட்டத்திலான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சமூக அபிவிருத்தி மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு கூட்டப்பட்டது. ஏப்ரல் 06ஆம் திகதி நடைபெற்ற பொது விவாதத்தில் உரையாற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற முற்போக்கான மாற்றங்களை வலியுறுத்தினார். சமூகப் பாதுகாப்பை விஸ்தரிப்பது, பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவது, இலவசக் கல்வியை நவீனமயப்படுத்துவது, பாலின உள்ளடக்கத்தை மேம்படுத்தல் மற்றும் அரச ஆளுகையை வலுப்படுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சபாநாயகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். மேலும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டள்ளது போல, ஊழல்கள் தொடர்பில் சகிப்புத் தன்மை இல்லையென்ற பாராளுமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சிகள் நாட்டின் சமூக வளர்ச்சி மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

சமாதானம் மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான நிலைக்குழு அமர்வில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி “பலஸ்தீனத்தில் இருநாட்டுத் தீர்வுகளை முன்னெடுப்பதில் பாராளுமன்றத்தின் வகிபாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை சமாதானம், பாதுகாப்பு மற்றும் இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடுகளுக்கு இராஜதந்திர தீர்வுகளுக்கான அவசர தேவை குறித்து தற்பொழுது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களுக்குப் பங்களிக்கும் விதத்தில் அமைந்தது.

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன இம்மாநாட்டில் கலந்துகொண்டதுடன், இவர் நிலைபேறான அபிவிருத்தி குறித்த நிலைக்குழுவில் பங்கெடுத்தார். “நிலைபேறான அபிவிருத்தியில் ஆயுத மோதல்கள் உள்ளிட்ட மோதல்களால் காணப்படும் நீண்டகாலத் தாக்கத்தை குறைப்பதற்கான பாராளுமன்ற உத்திகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மோதலுக்குப் பிந்தைய சமூகங்களில் நீண்டகால சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் அனுபவங்கள் மற்றும் கொள்கைகளை அவர் இங்கு எடுத்துக் கூறினார்.

எப்ரல் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, சட்டவிரோத சர்வதேச தத்தெடுப்பால் பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்து,  ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் இந்த நடைமுறைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களின் உரிமைகளுக்காக் குரல்கொடுப்பது மற்றும் சர்வதேச தத்தெடுத்தல்முறை நெறிமுறையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்குப் பங்களிக்கும் வகையில் அவருடைய இந்தத் தலையீடு அமைந்தது.

பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தினுடைய கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கலந்துகொண்டதுடன், இயலாமை உடைய நபர்கள் பாராளுமன்றத்தை அணுகும் வசதி தொடர்பில் முன்மொழிவொன்றை மேற்கொண்டார். இலங்கையின் கண்ணோட்டத்தில் பாராளுமன்றத்தின் சபை செயற்பாடுகள் மற்றும் குழு நடைமுறைகளுக்கான அணுகல் குறித்து அவருடைய இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இயலாமை போன்ற விடயங்களைக் கருத்தில் கொள்ளாது அனைத்துப் பிரஜைகளையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாடானது பரந்தளவிலான உலகளாவிய பிரச்சினைகள் குறித்த உரையாடலுக்கான ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன், சமாதானம், பாதுகாப்பு மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் இலங்கையின் தூதுக் குழுவினர் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினர். இந்த மாநாடு 9ஆம் திகதி நடைபெற்ற ஆட்சிக்குழுவின் கூட்டத்துடன் முடிவுக்கு வந்தது.



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரில்

கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை  ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு  பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.


2026-08-28

பாராளுமன்றம் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஆக. 20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய செப்டெம்பர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.அதன் பின்னர், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை, .ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்த்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறும்.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 11 வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைநலீன் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுக்ள ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவருதல்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்இலங்கை பைத்துல்மால் நிதியம் என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்அஜித் பி.பெரேராஇலங்கை குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்ஹர்ஷ.த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்சுஜீவ திசாநாயக்கபிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்ததல்நந்த பண்டாரமலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்ரீ.கே.ஜயசுந்தரகித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-28

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் புதுடில்லியில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது  திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர்   ஸ்ரீ ஓம்  பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற  அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை  பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.  சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.


2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks