logo

E   |   සි   |  

2025-03-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் பிரதியமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த மற்றும் நிதி, கொள்கை வகுத்தல் கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கடந்த காலத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் போது இலங்கை சுங்கத்தினால் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கேள்வியெழுப்பினர். இது அரசாங்கத்தின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாக சிலர் அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், இனவே இது பற்றி சரியான விளக்கம் அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம், கொள்கலன்களை விடுவிக்கையில் இதுபோன்று நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப நடவடிக்கையாக இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் இதுபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஆராய்வதற்காக திறைசேரியின் உதவிச் செயலாளரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விடயத்தைக் குழுவிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், இதன் உண்மை என்ன என்பது தெளிவுபடுத்தப்படுவதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் இதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிரச்சினை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கான தகவல்களைத் திரட்டும்போது அரசாங்க அதிகாரிகள் அதற்கு தயக்கம் காண்பித்தமையால், பல்வேறு தரப்பினர் தரவுச் சேகரிப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் தரவு சேகரிப்பில் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார். ஏறத்தாழ 8 இலட்சம் விண்ணப்பப் பத்திரங்கள் கிடைத்ததாகவும், இதில் ஏறத்தாழ 7 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் முன்னர் காணப்பட்ட குறைபாடுகளைப் பூர்த்திசெய்து எதிர்வரும் யூலை மாதத்தில் இந்த நடவடிக்கையைப் பூரணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். உண்மையிலேயே சலுகைகளைப் பெறத் தகுதியுள்ள நபர்கள் இந்தக் கணக்கெடுப்பிலிருந்து விலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அவதானமாக இருக்க வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மாற்றங்களைச் செய்வது போன்ற சிறிய புதுப்பிப்புகளை பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பயனாளிகளுக்கு அது கிடைக்காமல் குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்கொன்றுக்கு வழங்கப்படுவதன் ஊடாகப் பிரச்சினையான நிலைமை ஏற்படுவதாகவும், குறித்த தொகையை தபால் நிலையங்களின் ஊடாக மாத்திரம் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.

உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் 15% சேவை ஏற்றுமதி வரியை அறவிடுவது தொடர்பில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். நியாயத்தன்மை கொள்கையைப் பயன்படுத்தி, அதிகபட்சமாக 15% என்ற எல்லைக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பிரதியமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், 15% என்ற இந்தத் தொகை ஈட்டப்படும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகின்றது என்ற தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது வருமானத்தில் அன்றி பெறப்படும் இலாபத்திற்கு விதிக்கப்படும் வரியென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஒரு நாட்டில் வரி செலுத்தப்படும்போது இரட்டை வரிவிதிப்பு அல்லது மீண்டும் வரி விதிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கமளித்தனர்.

அத்துடன், 36% அதிகபட்ச எல்லையின் கீழ் ஏனைய தனி நபர்கள் வருமான வரி செலுத்தும் பின்புலத்தில் இந்த வரி அறவீட்டு அதிகபட்ச எல்லை 15% ஆக வரி அறவிடப்படுகின்றது. இதனை முன்னர் மேற்கொண்ட 30% மதிப்பை 15% ஆகக் குறைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கமைய அனைவரையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தும் சமூக நீதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, யாருக்கும் பாதகமாக இருக்காது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 40,000 அதகாரிகள் பயிற்சியின் பின்னர் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகவும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து முடிவுகளும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதால், துல்லியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பழைய சட்டங்களுக்குப் பதிலாக ஒரு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டவரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அமைய எதிர்காலத்தில் மிகவும் நம்பகமான தரவு சேகரிப்புக்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks