E   |   සි   |  

2025-03-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மனித – விலங்கு மோதல்கள் குறித்து சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

  • வரலாற்றில் முதல் தடவையாக சுற்றாடல் தொடர்பான சகல நிறுவனங்களும் ஒரு அமைச்சின் கீழ் – கௌரவ உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டு
  • ஒவ்வொரு நிறுவனங்களின் வகிபாகம் தொடர்பில் தனித்தனியாகக் கலந்துரையாடப்பட்டது

 

மனித – விலங்கு மோதல்கள் தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான தீர்வுகளுக்குச் செல்ல வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.  குறிப்பாக அந்தந்த நிறுவுனங்களின் வகிபாகங்கள் குறித்து இங்கு வெவ்வேறாகக் கலந்துரையாடப்பட்டதுடன், காட்டு விலங்குகளின் பிரச்சினைகள், போதுமான மனித மற்றும் பௌதீகள வளங்கள் இல்லாமை போன்றவை அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் என்பனவும்  இதில் அடங்கும்.

யானை – மனித மோதல்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்படும் ஏனைய உயிரினங்களான செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும், இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயத்துறை பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவது கடினம் என்றாலும், விரைவில் தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

அத்துடன், யானை மனித மோதல்களை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், யானைகள் நடமாடும் எல்லைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார்.  மேலும், யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்கும் வகையிலான கமரா அமைப்புக்கள் பொருத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் அண்மையில் (மார்ச் 05) கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சின் கீழ் உள்ள அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தமது நிறுவனங்கள் குறித்து குழுவிற்கு விளக்கமளித்ததுடன், வரலாற்றில் முதன்முறையாக சுற்றாடல் தொடர்பான சகல நிறுவனங்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் பாராட்டைத் தெரிவித்தனர்.

அத்துடன், மார்ச் 15ஆம் திகதி நடைபெறவிருப்பது விலங்குகளின் தொகைமதிப்பீடு இல்லையென்றும், எளிய முறையிலான கணக்கெடுப்பு மாத்திரமே என்றும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி இங்கு தெரிவித்தார். இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லாத பின்னணியில், ஏதாவது ஒரு சில தரவுகளையாவது பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்பு மாத்திரமே இது என்றார்.  இவ்வாறான நிலையில், இந்த முயற்சியை கேலி செய்வது பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இடம்பெறுகின்ற பெரும்பாலான மணல் அகழ்வுகளில் 50 வீதமானவை சட்டவிரோதமானவை என கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுவில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வனவிலங்குத் திணைக்களத்திற்குக் காணப்படும் மனிதவளம் போதுமான அளவில் இல்லாமை குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். பயிர் காப்புறுதி, ஆயுட் காப்புறுதி மற்றும் சொத்துக்களுக்கான காப்புறுதி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்தும் அவர் குழுவில் கேள்வியெழுப்பினார்.  இதற்குப் பதிலளித்த, கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, இழப்பீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், உயிர் மற்றும் சொத்து இழப்புக்களைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-05-15

அரசுடமை நிறுவனங்களின் (SOEs) உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்களுக்கு கோப் குழுவினால் செயலமர்வு

அரசுடமை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உள்ளகக் கணக்காய்வு நடைமுறை அவசியமானது – அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய கோப் குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தெரிவிப்புஅரசுடமை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உள்ளகக் கணக்காய்வு நடைமுறைகள் அவசியம் என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தெரிவித்தார். அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறை தலைவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார். அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித்துறைத் தலைவர்களை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் ஸ்ரீ ஜயவரத்தனபுர கோட்டே மொனாக் இப்பீரியல் ஹோட்டலில்  இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இங்கு கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர், அரசுடமை நிறுவனத்துறையில் காணப்படும் ஒழுங்கீனங்களைத் தவிர்ப்பதற்கான தலையீடு அவசியம் என்றும், அரசுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் என்ற ரீதியில் உயர்ந்த செயல்திறன் காண்பிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். சகல அரசுடமை நிறுவனங்களின் தலைவர்களையும் வரவழைத்து வெற்றிகரமான செயலமர்வு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நிதி ஒழுக்கம் மற்றும் உள்ளகக் கணக்காய்வு செயன்முறையை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நிதித் துறைத் தலைவர்களை அழைத்து விளக்கமளிக்கத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன், 457 அரசுடமை நிறுவனங்கள் காணப்படுவதால் அனைத்து நிறுவனங்களையும் கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை நடத்துவது நடைமுறைச் சாத்தியம் இல்லையென்பதால்,  அந்நிறுவனங்களின் செயலாற்றுகையைப் பரிசீலனை செய்ய டிஜிட்டல் முறைமையொன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினர்.“அரசாங்க கணக்காய்வு மற்றும் அரசாங்க நிறுவனங்களின் வகிபாகம், பொறுப்பு மற்றும் ஒத்துழைப்பு” தொடர்பில் கணக்காய்வாளர் தலைமையதிபதி சமுத்திகா ஜயரத்ன இங்கு விளக்கமளித்தார். அரசுடமை நிறுவனங்களின் நிதியங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதால் அவை தொடர்பில் உரிய நிதி ஒழுக்கம் மற்றும் உள்ளகக் கணக்காய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் கணக்காய்வுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.குறும்பலாப்பிட்டிய, “பொது மக்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த உள்ளகக் கணக்காய்வின் வகிபாகம்” எனும் தலைப்பில் விளக்கமளித்தார். கோப் மற்றும் கோபா குழுக்களின் ஆலோசகர், முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி சரத் மாயாதுன்னே அவர்கள், “பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறுவதில் அரசுடமை நிறுவனங்களின் பங்கு” எனும் தலைப்பில் விளக்க உரை நிகழ்த்தினார். அரசுடமை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான அவகாசமும் இங்கு வழங்கப்பட்டது. உள்ளக கணக்காய்வாளர் பதவியை குறித்த நிறுவனத்தின் தலைவரின் கீழ் நியமிப்பதற்கு பதிலாக, அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடும் சுயாதீன பதவியாக மாற்றுவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா, 300ற்கும் அதிகமான அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.


2026-04-29

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் விசேட குழு முன்னிலையில் அழைப்பு

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.இந்தக் குழு அதன் தலைவர் கௌவர அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் கூடியபோதே அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சம்பத் கொத்துவேகொட உள்ளிட்ட அதிகாரிகள் இக்குழுவில் கலந்துகொண்டனர்.இயற்கை அனர்த்த சூழ்நிலையின் போது வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன செயற்படும் முறை குறித்து இங்கு விளக்கம் கோரப்பட்டது.நடைமுறையில் உள்ள பொறிமுறையின் குறைபாடுகளையும், தொடர்புடைய தொழில்நுட்ப சாதனங்களின் குறைபாடுகளையும் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கிக் கூறினர்.அத்துடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை எதிர்காலத்தில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், இந்த நிறுவனங்கள் முதலில் செயற்படும் முறைகள் குறித்து விளக்கம் கோருவதற்கும், தேவை ஏற்படின் இந்த நிறுவனங்களைத் தனித்தனியாக அழைத்து தித்வா சூறாவளி தாக்கம் குறித்து வினவுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன, மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அன்டன் ஜயக்கொடி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். 


2026-04-28

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்,  2024/2025-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 143 இயலாமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும்,  இந்த எண்ணிக்கை 2025/2026-ஆம் ஆண்டில் 203 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 25 முதல் 50 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த வருமானம் கொண்ட இயலாமையுடைய மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மேலதிக உதவித்தொகையை வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. மேலும், பல பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் இயலாமையுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான முன்னோட்ட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமான சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும், விபத்துகள் காரணமாக இயலாமையுடைய நபர்களாக்கப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற உதவி சாதனங்களை வழங்கும் திட்டத்தை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.  இயலாமையுடைய நபர்கள் மத வழிபாட்டுத் தலங்களை அணுகுவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஒன்றியத்தின் தலைவர், அமைச்சின் அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கமைய சமய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இயலாமையுடைய நபர்கள் அணுகக் கூடிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.வீடு, கட்டுமானம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு மேல்மாகாணத்தில் இயலாமையுடைய நபர்களின் வீட்டு வசதிகளுக்காக ரூ.500 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு 9,700 வீடுகளை அமைப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும், இயலாமையுடைய நபர்களுக்காக விசேட கடன் திட்டமொன்றை கடைப்பிடிக்கவும், அவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு 'மாதிரித் திட்டத்தை'த் தயாரிப்பதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.இயலாமையுடைய நபர்களின் விசேட தேவைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மாதிரியில் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வங்கிகளுக்கும், இயலாமையுடைய தொழில்முனைவோருக்கும் இடையில் நம்பிக்கை தொடர்பான இடைவெளி காரணமாக கடன்பெறுவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டனர்.  இதற்கு அமைய இயலாமையுடைய நபர்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு ஒன்றியத்தின் தலைவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.புதிய தயாரிப்புகளை வணிகமயமாக்குவதில் இயலாமையுடைய நபர்களுக்கு உதவும் ஆய்வுகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கவனம் செலுத்துவாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவையான சாதனங்களைத் தயாரிக்க ஆராய்ச்சி குழுக்களை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இதற்கு மேலதிகமாக, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு பாராளுமன்ற விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்ற அமைச்சுக்களின் அதிகாரிகளும் ஒன்றியத்தில் தமது அமைச்சுசார்ந்த திட்டங்களை முன்வைத்தனர்.ஒவ்வொரு அமைச்சினாலும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களில் மீண்டும் மீளாய்வு செய்யவும் ஒன்றியம் தீர்மானித்தது.இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  டி.கே. ஜெயசுந்தர, ஜகத் மனுவர்ண ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இயலாமையுடைய பெண்களின் தேசிய ஒன்றியம், இலங்கை செவிப்புலனற்றோர் சங்கம், இயலாமையுடைய இளைஞர்களுக்கான வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும்,  தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-04-10

இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2017 பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் ஆராய்வு 2021-2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்களும் ஆராய்வுஇலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.04.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இங்கு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த விடயங்கள் வெளிப்பட்டதுடன், 2025 டிசம்பர் 31ஆம் திகதிவரையில் பூர்த்திசெய்யப்படாத விசாரணைகளின் எண்ணிக்கை1538 என்பதும் தெரியவந்தது. இவற்றில் ரூ.69,999,317 பெறுமதியான 40 நிதி மோசடி குறித்த விசாரணைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதும், இந்த விசாரணைகள் 2007 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவை என்பதும் தெரியவந்தது.  விசாரணை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் காரணமாகவே விசாரணைகள் தாமதமாவதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் பதிலளித்தனர். விசாரணைகளில் தாமதம் காணப்பட்டாலும், 2016ஆம் ஆண்டு டிசம்பரில்  நிலுவையிலிருந்த விசாரணைகளின் எண்ணிக்கை 2711 என்றும், இது தற்பொழுது 1538 ஆகக் குறைந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சில விசாரணைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்தது.அஞ்சல் தலையைமகம் மற்றும் 14 மாவட்ட அலுவலகங்களில் பணியாளரின் வருகை மற்றும் புறப்படுகை என்பவற்றைப் பதிவு செய்வதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாள இயந்திரத்தில் புறப்படும் நேரம் 16.15 எனப் பதிவாகியுள்ள போதும், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் புறப்படும் நேரம் இரவு 7,8,9,10 என பதிவேடுகளில் பதிவுசெய்து தலைமையகத்தின் பணியாளர்கள் 2023ஆம் ஆண்டில் 57,919,684 ரூபாவையும், 2024ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையில் 7,024,144 ரூபாவையும், 14 மாவட்ட அலுலகங்களில் உள்ள பணியாளர்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையில் 373,874,705 ரூபாவையும் மேலதிக நேரக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு 4000/5000 வெற்றிடங்கள் காணப்படுவதால் பணியில் உள்ளவர்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தக் கொடுப்பனவுகள் தவறானவை அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, மேலதிக நேரக் கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களுக்குச் சம்பளம் வழங்கலாம் என்று குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குழு தெரிவித்தது. அத்துடன், இந்த விடயத்தை உள்ளடக்கியதாக அறிக்கையொன்றை கையளிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அதேநேரம், இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அச்சகப் பிரிவினால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் 500 வெளியீட்டுப் பிரதிகளை அச்சிடுவதற்கு ரூ.2,697,300வும், நினைவேடுகளை அச்சிடுவதற்கு ரூ.1,092,656 செலவிட்டபோதும், 2025 நவம்பர் மாதம் நடத்திய கணக்காய்வு விசாரணையின் போது குறித்த வெளியீடுகள் சரியான தரத்தில் அச்சிடப்படவில்லையென்பதால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படாமல் அச்சகப் பிரிவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு தெரிவித்தது.மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, காலமான, ஓய்வுபெற்ற, இடைநீக்கம் செய்யப்பட்ட, இராஜினாமா செய்த மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து  வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைக் கடன் ரூ. 61,225,431 ஆக இருந்தது. இதில், 5 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவைக் கடன் ரூ. 20,679,788 ஆகும். அதன்படி, இந்தப் பணத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 17 கோரிக்கைக் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை எவ்வாறு வசூலிக்கப்படவுள்ளது என்பதை விளக்கும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.மூன்று மாதங்களுக்குள் இலங்கை அஞ்சல் திணைக்களத்தை மீண்டும் அழைக்கவிருப்பதாகக் கூறி குழுவின் தலைவர் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, தினிந்து சமன் ஹென்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, சந்தன சூரியஆரய்ச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிகா அத்தாவுட, டி.கே. ஜயசுந்தர, அஜந்த கம்மத்தகே மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks