பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-03-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மனித – விலங்கு மோதல்கள் தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான தீர்வுகளுக்குச் செல்ல வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக அந்தந்த நிறுவுனங்களின் வகிபாகங்கள் குறித்து இங்கு வெவ்வேறாகக் கலந்துரையாடப்பட்டதுடன், காட்டு விலங்குகளின் பிரச்சினைகள், போதுமான மனித மற்றும் பௌதீகள வளங்கள் இல்லாமை போன்றவை அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் என்பனவும் இதில் அடங்கும்.
யானை – மனித மோதல்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்படும் ஏனைய உயிரினங்களான செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும், இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயத்துறை பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவது கடினம் என்றாலும், விரைவில் தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
அத்துடன், யானை மனித மோதல்களை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், யானைகள் நடமாடும் எல்லைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார். மேலும், யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்கும் வகையிலான கமரா அமைப்புக்கள் பொருத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் அண்மையில் (மார்ச் 05) கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கீழ் உள்ள அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தமது நிறுவனங்கள் குறித்து குழுவிற்கு விளக்கமளித்ததுடன், வரலாற்றில் முதன்முறையாக சுற்றாடல் தொடர்பான சகல நிறுவனங்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் பாராட்டைத் தெரிவித்தனர்.
அத்துடன், மார்ச் 15ஆம் திகதி நடைபெறவிருப்பது விலங்குகளின் தொகைமதிப்பீடு இல்லையென்றும், எளிய முறையிலான கணக்கெடுப்பு மாத்திரமே என்றும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி இங்கு தெரிவித்தார். இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லாத பின்னணியில், ஏதாவது ஒரு சில தரவுகளையாவது பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்பு மாத்திரமே இது என்றார். இவ்வாறான நிலையில், இந்த முயற்சியை கேலி செய்வது பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இடம்பெறுகின்ற பெரும்பாலான மணல் அகழ்வுகளில் 50 வீதமானவை சட்டவிரோதமானவை என கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழுவில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வனவிலங்குத் திணைக்களத்திற்குக் காணப்படும் மனிதவளம் போதுமான அளவில் இல்லாமை குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். பயிர் காப்புறுதி, ஆயுட் காப்புறுதி மற்றும் சொத்துக்களுக்கான காப்புறுதி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்தும் அவர் குழுவில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த, கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, இழப்பீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், உயிர் மற்றும் சொத்து இழப்புக்களைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-01-29
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2026.01.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.இளைஞர் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தயாரிக்க உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்திற்குரிய அளவுகோல்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகள் மூலம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளைத் தொழில்முயற்சியாண்மை துறையில் இணைத்துக் கொள்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்த உப குழுக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்க மாதுகொட, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் சுஜீவ திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-29
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோரின் பங்குபற்றலுடன் 2026.01.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பல்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது துறைசார்ந்த பிரச்சினைகள் குறித்துக் குழுவிற்கு விளக்கமளித்தனர். இதன்போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு நீண்டகால தேசியக் கொள்கை இல்லாததால் தமது கைத்தொழில் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், வலுவான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். அத்துடன், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தற்போதுள்ள ஒழுங்குமுறைகளை தளர்த்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிகளை மீளாய்வு செய்தல், வருமான வரிக்கு பாதுகாப்பான துறைமுக விதிகளை அறிமுகப்படுத்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான சேர்பெருமதி வரி (VAT) சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், முறைசாரா வகையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமது கைத்தொழிலை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இரத்தினக்கல் அகழ்வின் போது ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்காமை மற்றும் தற்போதுள்ள அகழ்வு நிலங்கள் குறைந்து வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகள் தொடர்பிலும் அந்தத் தொழிற்துறையினர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், தாராளமயமாக்கல் (வரி மற்றும் பௌதீக), நிர்வாகம் மற்றும் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கொள்கை விடயங்கள் போன்ற பிரதான துறைகள் தொடர்பில் தொழித்துறையினுள் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் காண முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த விடயங்களை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து விரிவான கலந்துரையாடல் ஆவணமொன்றைத் தயாரித்து, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் வினைத்திறனான தொடர் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகக் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
2026-01-29
இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிலுள்ள வளங்களைக் கொண்டு ஆரம்பிக்க உடன்பாடுஅடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுகொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை இந்த வருடம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படக் கலையகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் கலந்துரையாடல் இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னெடுப்பில் அண்மையில் (ஜன. 22) இடம்பெற்றது. கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலர், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், கலை இயக்குநர்கள் சங்கம், ஒப்பனை கலைஞர்கள் சங்கம், சார்க் கலாசார நிலையம், திரைப்படக் கல்வி தொடர்பான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் திரைப்படத் துறைசார்ந்த நிபுணர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முன்வைத்தனர். இந்தப் பாடசாலையானது திரைப்படம் குறித்த அறிவை வழங்குவது மட்டுமன்றி, நடைமுறை ரீதியாக திரைப்படங்களை தயாரிக்கும் கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளைக் கொண்ட நிறுவனமாக அமைய வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப இதனைப் பேண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது. திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இத்தகைய பாடசாலையை நிறுவுவது குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி இதனை ஆரம்பிக்கவும், பின்னர் படிப்படியாக அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய திரைப்படப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரித்தல் மற்றும் ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடிப்படைப் பணிகளை முன்னெடுப்பதற்காக இதன்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இதற்கமைய, கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம், இலங்கை மன்றக் கல்லூரி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் திரைப்படத் துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நிறுவப்பட்டது.பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் சீதா பண்டார, அரச திரைப்படத் துணைக் குழுவின் தலைவர் (கலாநிதி) செனேஷ் திஸாநாயக்க பண்டார, சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் (கலாநிதி) கௌஷல்ய குமாரசிங்க உள்ளிட்ட திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டனர். அத்துடன், இந்தப் பாடசாலையின் பாடத்திட்டம் உள்ளிட்ட கல்விச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக திரைப்படத் துறை நிபுணர்களைக் கொண்ட மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டது. அத்துடன், தற்போது செயலற்ற நிலையில் உள்ள கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை (International Film Festival, Colombo) மீண்டும் இந்த வருடம் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கும், நீண்டகாலம் நிலையான முறையில் இவ்விழாவை முன்னெடுப்பதற்கும் தேவையான நிறுவனமொன்றை நிறுவுவதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான தலையீட்டை வழங்கத் தயாராக இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.இதேவேளை, திரைப்படத் தயாரிப்புப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலையக வளாகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கொழும்புக்கு அருகில் பொருத்தமான ஓரிடத்தில் இதனை நிர்மாணிப்பதற்கான அவசியம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாநாயக்கார, (சட்டத்தரணி) சுசந்த தொடாவத்த, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாப்பலகம, சுகத் வசந்த டி சில்வா, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, உபுல் கித்சிறி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2026-01-28
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இதற்கு அமைய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தொடர்பில் இங்கு முதலில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக வருடமொன்றுக்கு 22,000 பேர் உயிரிழப்பதாகவும், வருடமொன்றிற்கு ரூ.225 பில்லியன் முதல் ரூ.240 பில்லியன் வரையிலான தொகை இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.இந்த சூழ்நிலையை அடிப்படையாக சமாளிக்க தேவையான சட்ட விதிகள் உட்பட, புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.சிகரெட்டுக்கள் தனித்தனியாக விற்பனை செய்வதை உலகில் 104 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், இந்த நாட்டிலும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர். தனிப்பட்ட சிகரெட்டுகள் விற்கப்படும்போது, சிகரெட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கைச் செய்திகள் நுகர்வோரைச் சென்றடைவதில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். சிகரெட்டுகளின் விலைகளை நிர்ணயித்த பின்னர் அவற்றின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினர் தமது சட்டத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் திருத்தங்கள் மற்றும் குறித்த அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைக் குழு வழங்கும் என்றார்.இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், மருத்துவமனையின் அதிகாரிகள் அதன் தற்போதைய நிலை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை உட்பட, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஊழியர்களுக்கான தேவை இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருப்பதாகவும், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும் என நம்புவதாகவும் கூறினார். ஊழியர்களை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உள்ளகக் கணக்காய்வாளரை நியமித்து வைத்தியசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட அதன் செயல்திறனை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டியதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.இக்கூட்டத்தில் கௌரவ குழுவின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர, கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, சமன்மலீ குணசிங்க, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும், குழுவின் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்கள், புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks