01

E   |   සි   |  

2025-03-05

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (மார்ச் 04) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பிரதிசபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கமைய தற்பொழுது வைத்தியசாலைகளில் பயன்படுத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளில் உள்ள குறைபாடுகளைச் சீர்செய்து அவற்றை நோயாளிகளின் பராமரிப்புச் சேவைக்குப் பயன்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வாறு குறைபாடுள்ள அம்பியூலன்ஸ் வண்டிகளை அரசாங்கத்திற்குச் செலவு இன்றி, தனியார்துறை மட்டத்தில் சீர்செய்து பயன்படுத்துவதற்குக் காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பினர். இது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க முடியும் என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய அளவிலான பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய வாகனங்களுக்காக மாகாண மட்டத்தில் சுகாதார அமைச்சின் சிறிய பராமரிப்பு அலகுகளை அமைப்பது பொருத்தமானது எனத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க, அதன்படி முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் அவ்வாறானதொரு அலகொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச ஒசுசலவொன்றை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்குப் பொருத்தமான இடம் மற்றும் காணி அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒசுசலவை விரைவில் அமைக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத வைத்தியசாலைகளின் கட்டுமானத்தை முடிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது. பிராந்திய வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள், மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் இடமாற்றங்கள் போன்ற  பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வெகுசன ஊடக அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, ரஜரட்ட பிராந்திய வானொலி ஒலிபரப்பை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதா என அதிகாரிகளிடம் கௌரவ உறுப்பினர்கள் வினவினர். தற்பொழுது ரஜரட்ட வானொலி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒலிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை நிறுத்துவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், வானொலியை மீண்டும் உயர் மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். ரஜரட்ட சேவைக்கு தன்னார்வமாக வளங்களை வழங்குவதற்கு கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் குழு தயாராக இருப்பதாகவும், அதற்கு இணைவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட விடயப்பொறுப்பைக் கொண்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவை ஒரு அமர்வாக நடத்தாமல் இரு அமர்வுகளாக நடத்துமாறு கௌரவ உறுப்பினர்கள் இதன்போது முன்மொழிந்தனர்.   அதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர், அமைச்சின் இரண்டு விடயப்பொறுப்புகள் பற்றி சிறிய காலத்தில் பரவலாகக் கலந்துரையாடுவது கடினமானது எனவும் உறுப்பினர்கள் குறிப்பிட்டது போன்று, எதிர்காலத்தில் இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட இரண்டு விடயப்பொறுப்புகள் பற்றி வேறு வேறாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-01-08

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.கடந்த குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, பாடசாலைகளை நடத்திச் செல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை கௌரவ ஜனாதிபதி வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு மேலதிகமானவர்களை அனுப்புவது போன்ற விடயங்கள் குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2026-01-08

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் அனுமதி

நாளை (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்", எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது. அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் 'ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்', என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2025.01.08 ஆம் திகதி அங்கீகரிக்கப்படவுள்ள (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.அதற்கமைய, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2452/40 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம், ‘வீதியொன்றில் மோட்டார் வாகனமொன்றைச் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் எவரேனும் ஒருவர் போதைப்பொருள் பாவித்துள்ளதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நியாயமான சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அந்த நபரை மேலதிகப் பரிசோதனைக்காக அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலையினால் இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அதிகாரியிடமோ முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியின் மூலம், ‘அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொருவரும் பாதுகாப்பு ஆசனப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இந்தக்கூட்டத்தின் போது குழுவில் விளக்கமளித்தனர். அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 1,481 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட 287 வீதிப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 86 பில்லியன் ரூபா என அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அதேபோன்று, புகையிரதத் திணைக்களத்திற்கு சுமார் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 63 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், இலங்கையின் வீதிக் கட்டமைப்பில் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, https://road-lk.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சேதங்கள் குறித்துத் தெரியப்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில், குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2026-01-07

அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி  என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டனகொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் குறித்து ஆராயும்போது  அதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் புதிதாக நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் ஊழியர்களுக்கான வருமான வரி விலக்களிப்புக்களை கட்டுப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு நிலைமாற்று காலமாக 3 வருடங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திருத்தம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் குறிப்பாக புதிய அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கான வருமான வரி விலக்களிப்பை நீக்கும் அதேவேளை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிலைமாற்று காலத்தை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து குழு விளக்கம் கோரியது.அத்துடன், முதலீட்டாளர்களின் முன்கூட்டிய செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பதிவுச்சான்றிதழொன்று வழங்கப்படும்வரை விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள், திருத்தப்பட்ட கட்டமைப்பு போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்ற உத்தரவாதம் என்பன குறித்தும் குழு ஆராய்ந்தது.அத்துடன், 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கும் வகையில் வெளிநாட்டுச் செலாவணி அமைவது குறித்துக் கேள்வியெழுப்பிய குழு, இலங்கை ரூபாயினால் ஈட்டப்படும் வருமானம், நாணய மாற்று மற்றும் தேசிய நாணய, நிதி ஒழுங்குவிதிகளுக்கு அமைய தொடர்ச்சியாக அவை பேணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. துறைமுக நகரத்தில் கடல்கடந்த வங்கிச் செயல்பாடுகளுக்கும் உள்நாட்டு வங்கிச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் குழு கவனம் செலுத்தியது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மூலதனம், பணப்புழக்கம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட மத்திய வங்கியின் மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை செய்யும் அதன் வகிபாகம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.துறைமுக நகரத்திற்குள் உள்ள அளவுகோல்களை பின்பற்றாதது, தொடர்புடைய அபராதங்கள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் துறைமுக நகரத்தின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க கண்காணிப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இந்தத் திருத்தங்கள் துறைமுக நகர கட்டமைப்பை செயல்படுத்துதல், புதிய வணிக நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களை செயல்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச உறுதிப்பாடுகளுடன் சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி  குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு நன்கொடையாளர்களால் நன்கொடையாக வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் அல்லது ஏதேனும் அரச நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டு, சரியான நேரத்தில் மற்றும் வினைத்திறனான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.போதிய சட்ட ஏற்பாடுகள் காணப்படும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிதியை உருவாக்கத் தவறியமை குறித்தும் குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மேலும் தாமதங்களினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, "“Rebuilding Sri Lanka Fund” நிதியத்தை சட்டப்பூர்வ நிதியமாக நிறுவுவதன் முக்கியத்துவத்தை குழு வலியுறுத்தியது. அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியது.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுனில் ராஜபக்ஷ, அஜித் அகலகட மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks