ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலம் 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூடியது முதல் கலைக்கப்பட்ட நாள் வரை 4 ஆண்டுகளும் 1 மாதமும் 4 நாட்களும் ஆகும். இதற்கமைய 5 கூட்டத் தொடர்களைக் கொண்ட இப்பாராளுமன்றம் 390 நாட்கள் கூடியுள்ளதுடன், அரசியலமைப்புத் திருத்தங்கள், அடுத்துவரும் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவு, நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் சமர்ப்பிப்பு, தீர்மானங்கள் மூலம் ஆணைக்குழுவின் தலைவரை/உறுப்பினரையோ பதவியில் இருந்து நீக்கியமை, ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை போன்ற பல முக்கிய நிகழ்வுகள் இக்காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
அரசியலமைப்புத் திருத்தங்கள்
அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் ஒன்பதாவது பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அரசியலமைப்பைத் திருத்துவதற்காக அப்போதைய நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி அவர்களால் “இருபதாவது அரசியலமைப்புத் திருத்தச்” சட்டமூலம் 2020 செப்டெம்பர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களிலும் சட்டமூலம் குறித்த இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெற்றதுடன், விவாதத்தைத் தொடர்ந்து, விசேட பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்பட்டது. இதில் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 56 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவாகின. குழுநிலையைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீடும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 156 வாக்குகள் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும், 65 வாக்குகள் எதிராகவும் பதிவாகியிருந்தன. இதற்கமைய குறித்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 2020 ஒக்டோபர் 29ஆம் திகதி சபாநாயகர் குறித்த சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதும் இருபதாவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நெருக்கடி நிலைமை காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதும் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த அமைச்சராக இருந்த கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் ஆகிய இரு தினங்களும் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவுசெய்யப்பட்டன. குழுநிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் பதிவாகியிருந்தது. இதற்கு அமைய இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் இருபத்தியோராவது அரசியலமைப்புத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டது. இது 2022 ஒக்டோபர் 31ஆம் திகதி சபாநாயகரினால் கையொப்பமிடப்பட்டு சான்றுரை வழங்கப்பட்டது முதல் இருபத்தியோராவது அரசியலமைப்புத் திருத்தமாக நடைமுறைக்கு வந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஆணைக்குழுவின் தலைவர் /உறுப்பினரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்
வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும். எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச உள்ளிட்ட 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரேரணை 2021 ஜூலை மாதம் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் பதிவாகியிருந்ததுடன் அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
ஜே.டபிள்யூ.எம்.ஜே.பி.கே ரத்னாயக்கவை அவருடைய பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நிறைவேற்றம்
2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த ஆணைக்குழுவின் அப்போதைய தலைவரும், ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜே.டபிள்யூ.எம்.ஜே.பி.கே ரத்னாயக்கவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பிரதமரும், பொதுநிர்வாக, உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இது குறித்த விவாதம் 2023 மே மாதம் 24ஆம் திகதி நடைபெற்றதுடன், இதற்கான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டு 46 மேலதிக வாக்குகளால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 45 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை குறித்த விவாதம் 2023 செப்டெம்பர் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், எதிராக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய 40 மேலதிக வாக்குகளால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 45 பேர் கையொப்பமிட்டு சமர்ப்பித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 117 வாக்குகளும், ஆதரவாக 75 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து சபாநாயகர் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர்களின் வாக்குகளால் உறுப்பினர் ஒருவரை நியமித்தல்
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததுடன், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்டார்.
அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் ஜூலை 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதுடன், அதன்போது அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்கு பதில் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு 2022 ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறத்துடன், அதன்போது மேலதிக வாக்குகளால் பதில் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரகசிய வாக்கெடுப்பில் கௌரவ ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்ததுடன், கௌரவ டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகளும் கௌரவ அநுர குமார திஸாநாயக்கவுக்கு 03 வாக்குகளும் கிடைத்தன.
உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவைக்காலத்தை இடைநிறுத்துதல்
2023 ஆகஸ்ட் 23 ஆம் திகதி பாராளுமன்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் மேலதிக கேள்விகள் கேட்கும் போது ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நளின் பண்டார ஜயமஹா மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகியோர் அக்கிராசனத்துக்கு அருகே வந்து கோஷமெழுப்பினர். அதன்போது பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தியதுடன், அதனையடுத்து அக்கிராசனத்துக்கு வந்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அன்றைய பாராளுமன்ற அமர்விலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நளின் பண்டார ஜயமஹா மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தார்.
மேலும், 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலைமையை கருத்தில் கொண்டு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற சேவைக்காலத்தை அன்றைய தினம் முதல் நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்தார். பாராளுமன்ற சபை மண்டபத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனைத் தொடுவது நிலையியற் கட்டளைகள் 77(3) இன் பிரகாரம் பாரதூரமான ஒழுங்கீனம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, 2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே. சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்த உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவைக்காலாம் 2023 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்த பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட பின்னர், பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம் இந்தப் பிரேரணை 2023 டிசம்பர் 02 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் வழங்கப்பட்டது. அத்துடன், 03 உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தனர்.
மேலும், 2023.05.23 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கட்டுநாயக்க, பணடரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் 70 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடன்கூடிய தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரைக்கு அமைய அவரின் பாராளுமன்ற சேவைக்கலாம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டது. அலி சப்ரி ரஹீம் அவர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாக பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளுக்கு அமைய அவரது சேவைக்காலத்தை 2024 மார்ச் 06 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வக்கப்பட்டு இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
2026-06-03
பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 01) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும். மேலும், கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2026-06-03
இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இணைந்துகொண்டார்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும், சட்டவாக்கங்களுக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளையும் வலுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பிரதி உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தரர். இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற அதிகரிரகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.கலாநிதி பாண்டே அவர்கள், இலங்கையில் வழங்கிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டிய கௌரவ சபாநாயகர், கடுமையான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளித் தாக்கத்தின் பின்னரான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் தற்பொழுது காணப்படும் நிலைமையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிப்பதற்கு இந்தியா வழங்கும் உதவிகளையும் அவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கும் சபாநாயகர் நன்றி பாராட்டினார்.அத்துடன், கலாநிதி பாண்டே அவர்கள், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கையில் பதவி வகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்குப் பிரதி சபாநாயகர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி பாண்டே அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவாக்கங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் நன்றியைத் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பில் கலாநிதி பாண்டே அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
2026-06-02
புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வாரஇறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான விளக்குகள், பௌத்த கொடிகள் உள்ளிட்டவற்றால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அவை பார்ப்பவர்களுக்கு ஆன்மீகரீதியான புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அளித்தன.இந்த அலங்காரங்கள் ஊடாக பௌத்த மதத்தில் போதிக்கப்படும் அன்பு, கருணை, ஒற்றுமை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் என்பன குறித்து சமூகத்திற்கு நினைவூட்டப்பட்டதுடன், வெசாக் பண்டிகையின் உண்மையான நோக்கமும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் வெசாக் கூடுகளினால் ஜொலித்த அலங்காரங்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு தனி அழகையளித்தன.இனம், மதம் மற்றும் கலாசாரம் கடந்த பௌத்த மதத்தின் உலகளாவிய செய்தியும், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவமும் இந்த வெசாக் அலங்காரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா போதி மரத்தைச் சுற்றியும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இந்த மதச் சடங்குகளின் போது, புத்த பகவானின் ஸ்ரீ தர்மம் நினைவுகூரப்பட்டதுடன், நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நன்மை உண்டாக வேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டன.வெசாக் பண்டிகையின் ஒளிமயமான பிரகாசத்துடன் மிளிர்ந்த இலங்கை பாராளுமன்றம், பௌத்த கலாச்சாரத்தின் பெருமிதத்தையும் அதன் ஆன்மீக பாரம்பரியத்தின் மதிப்பையும் தனித்துவமான முறையில் வெளிப்படுத்தியது.
2026-05-30
ஸ்ரீ புத்த ஆண்டு 2570 ஆவது சம்புத்த மும்மங்களங்களை நினைவுபடுத்தும் உன்னதமான வைகாசி விசாக புண்ணிய தினம் இன்றைய தினமாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை மக்களாகிய நமக்கும் இன்றைய தினம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நமது நாட்டின் சமூக, கலாசார விழுமியங்களின் பாரம்பரியமும் அடித்தளமும் பௌத்த தர்மத்தின் மீதே தங்கியுள்ளது. இம்முறை வைகாசி விசாக தினத்தின் கருப்பொருள் "அபித்தரதே கல்யாணே" (Abhittharetha Kalyane) என்பதாகும். அதாவது "பொது நலனுக்காக விரைவாக அணிதிரள்வோம்" என்பதாகும். பொது மக்களின் நல்வாழ்விற்காக அனைத்தையும் துறந்து, தனது வாழ்நாளை அர்ப்பணித்த நமது உன்னத சாஸ்தாவான கௌதம புத்த பெருமானின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த முன்மாதிரியும் இதுவேயாகும். இலங்கை ஒரு நாடு என்ற ரீதியில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தங்களின் போது, எமது இலங்கை தேசம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து நின்ற விதம், எமது சமூகத்தில் உறைந்துள்ள இந்த பௌத்த மத விழுமியங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது என்றும் நான் நம்புகிறேன்.எனவே, புத்த பெருமான் போதித்த உன்னதமான ஆன்மீகச் செய்திக்கு இணங்க நமது வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் போது, எப்போதும் பொது மக்களின் நல்வாழ்விற்காக நாம் செயலாற்ற வேண்டும். பாதிக்கப்படும் சக மனிதர்களுக்காகவும், பொதுச் சமூகத்தின் நன்மைக்காகவும் செயலாற்றக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தின் ஒரு தூணாக சமயம் திகழ்கிறது. அதற்காகச் சமயத்திற்குள்ளும் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு சமய விழிப்புணர்வின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், அதன் வழியே மிகவும் ஆரோக்கியமானதொரு சமூகத்தை நாம் சுவீகரித்துக்கொள்ள முடியும் என்றும் நான் நம்புகிறேன்.அதற்கிணங்க, இந்த உன்னதமான மும்மங்கள தினத்தில், முழுச் சமூகமாகப் பொது நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியோடு அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதுடன், இன்றைய வைகாசி விசாகப் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி உரித்தாகட்டும்...!வைத்தியர் ஜகத் விக்ரமரத்னசபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks