பார்க்க

E   |   සි   |  

2024-10-03

செய்தி வகைகள் : செய்திகள் 

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 19 உறுப்பினர் வெற்றிடங்கள், கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்கள் 4, பாராளுமன்றம் கூடிய நாட்கள் 390

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டதுடன், இதற்காக 18 சந்தர்ப்பங்களில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அமைய 241 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ ஜயந்த கெட்டகொட இராஜினாமாச் செய்ததுடன், இவருக்குப் பதிலாக கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் நியமிக்கப்பட்டார். அத்துடன், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டார். இதேபோன்று, கௌரவ முஜிபுர் ரஹ்மான் இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறுப்புரிமையை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், கௌரவ ஹரீன் பெர்னான்டோவின் வெற்றிடத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

மிகவும் தனித்துவமான நிகழ்வுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன், 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டமையாகும். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கௌரவ ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

இல. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மற்றும் விலகுவதற்கான காரணம் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்
இராஜினாமாச் செய்தமை
01 கௌரவ ஜயந்த கெட்டகொட கௌரவ பசில் ராஜபக்ஷ
02 கௌரவ அஜித் நிவாட் கப்ரால் கௌரவ ஜயந்த கெட்டகொட
03 கௌரவ மஹிந்த சமரசிங்க கௌரவ லலித் வர்ணகுமார
04 கௌரவ பசில் ராஜபக்ஷ கௌரவ தம்மிக பெரேரா
05 கௌரவ முஜிபுர் ரஹ்மான் கௌரவ ஏ.எச்.எம்.பௌசி
06 கௌரவ சமிந்த விஜேசிறி கௌரவ நயன வாசலதிலக
07 கௌரவ உத்திக பிரேமரத்ன கௌரவ எச்.சீ.முத்துகுமாரன
08 கௌரவ தலதா அதுகோரள கௌரவ கருணாரத்ன பரனவிதானகே
அரசியலமைப்பின் 89 மற்றும் 91 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய தகுதி நீக்கம் செய்யப்படல்
09 கௌரவ ரஞ்ஜன் ராமநாயக கௌரவ அஜித் மான்னப்பெரும
10 கௌரவ டயனா கமகே கௌரவ முஜிபுர் ரஹ்மான்
கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை
11 கௌரவ நசீர் அஹமட் கௌரவ அலி சாஹிர் மௌலானா
12 கௌரவ மனுஷ நாணயக்கார கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
13 கௌரவ ஹரீன் பெர்னாந்து -----
உயிரிழந்தமை
14 கௌரவ அமரகீர்த்தி அதுகோரல கௌரவ ஜகத் சமரவிக்ரம
15 கௌரவ சனந் நிஷாந்த கௌரவ ஜகத் பிரியங்கர
16 கௌரவ எச்.நந்தசேன கௌரவ எம்.ஜே.வீரசேன
17 கௌரவ இரா.சம்பந்தன் கௌரவ கே.எஸ்.குகதாசன்
ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை
18 கௌரவ ரணில் விக்ரமசிங்க கௌரவ வஜிர அபேவர்தன
19 கௌரவ அநுர குமார திசாநாயக்க கௌரவ லக்ஷ்மன் நிபுணாரச்சி

 

அத்துடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர்கள் நான்கு தடவைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 5 கூட்டத்தொடர்கள் காணப்பட்டன. 2020.08.20 முதல் 2021.12.12 வரை முதலாவது கூட்டத்தொடரும், 2022.01.18 முதல் 2022.07.28 வரை இரண்டாவது கூட்டத்தொடரும், 2022.08.03 முதல் 2023.01.27 வரை மூன்றாவது மூட்டத்தொடரும், 2023.02.08 முதல் 2024.01.26 வரை நான்காவது கூட்டத்தொடரும், 2024.02.07 முதல் 2024.09.24 வரை ஐந்தாவது கூட்டத்தொடரும் நடைமுறையில் இருந்தன. இந்த ஐந்து கூட்டத்தொடர்களிலுமாக ஒன்பதாவது பாராளுமன்றம் மொத்தம் 390 நாட்கள் கூடியிருந்தன.



தொடர்புடைய செய்திகள்

2026-06-10

இலங்கையின் தற்போதைய நிதி மற்றும் நாணயமாற்று விகித கொள்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட அதிகாரிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தினர்

நாணயக் கொள்கை, நாணயாற்று விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று (ஜுன் 10) நடைபெற்றது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் முறைமை, நாணயமாற்று விகிதத்தின் போக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பதில்களை வழங்கினர்.இந்த நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-09

“பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)”  எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுன் 09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். உயர் நீதிமன்றம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றலாம் என்று தீர்மானித்துள்ளது. எனினும்  வாசகம்  14 [முன்மொழியப்பட்ட பிரிவு  12 அ(ஆ)] மற்றும் வாசகம்  18 [முன்மொழியப்பட்ட பிரிவுகள் 17அ, 17ஆ மற்றும் 17இ] ஆம் வாசகங்கள்    மட்டும் விதிவிலக்காகும். இந்த வாசகங்கள்  பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்தபடி திருத்தப்பட்டால், அவற்றையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (09) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென்றும் சபாநாயகர் கட்டளையிட்டார்.


2026-06-08

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்திற்குப் புதிய பதவி தாங்குனர்கள் தெரிவு

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை 02 இல் அண்மையில் நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான பதவி தாங்குனர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.இதற்கமைய பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக திரு. பி.எம். ரஸீல்  அவர்களும், உப தலைவராக திரு. எம்.ஐ.எம். பாஸி அவர்களும், செயலாளராக திரு. சி. மணிமாறன் அவர்களும், பொருளாளராக திரு. எம்.ரீ. செய்னுர் ரிஃபா அவர்களும், உதவிச் செயலாளராக செல்வி டி. துலாங்கனி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக  திரு. எம். மயூரேஷன்  திருமதி. ஏ.ஏ.எஸ். சபாயா  ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள், பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி திரு. சீ.ஜே. கருணாரத்ன மற்றும் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு. ஏ.ஜி.எம். பிக்ரி, திரு. அ. சரவணபவானந்தன்,  திருமதி என்.பி.சி.ஜே. நிஸ்ஸங்க ஆகியோருடன்  குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டனர்.


2026-06-03

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 01) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும். மேலும், கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி,  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks