பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-08-02
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப் பரப்பை 30% ஆகவும் பேணும் உலக நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இலங்கையைவிட தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (ஜூலை 25) கூடியபோதே இவ்விடயங்கள் தெரியவந்தன. 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் வனப்பரப்பளவு 31% ஆகக் காணப்படுவதுடன், இலங்கையின் வனாந்தரப் பகுதி 30% அளவில் இருப்பது மிகவும் நல்லதொரு நிலைமையென குறித்த திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கையில் உள்ள முழு வனாந்தரப் பகுதியையும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 1.4 மில்லியன் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, வர்த்தமானியில் வெளியிடப்படாத வனாந்தரப் பகுதிகளை விரைவில் வர்த்தமானியின் ஊடாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது பற்றிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளனர். வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுரை வழங்கினார்.
அத்துடன், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்ததோடு, இது தொடர்பான அறிக்கையை குழுவிற்கு அனுப்புமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்குப் பயனுள்ள உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்தும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. கருங்கல் குவாரிகள், சிறிய அளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரக் கோபுரங்கள் போன்றவற்றிலிருந்து வருமானங்கள் வசூலிக்கப்பட வேண்டியிருப்பதாக கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, கருங்கல் குவாரிகளுக்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதியைவிட அதிகளவான கருங்கல் உடைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கருங்கல் குவாரிக்கு உரிமம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அதற்குத் தேவையான வெடிப்பொருட்களை தேவையான அளவு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், ஒலிபரப்புக் கோபுரங்களை வழங்குவதன் ஊடாக தொலைபேசித் தொடர்பாடல் நிறுவனங்களிடம் இருந்து பாரியளவிலான பணம் பெறப்பட உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய இந்த அனைத்து நிலுவைகளையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
அத்துடன், வல்லப்பட்டா எனப்படும் தாவரம் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை கொண்டுவரும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டிருப்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழு அறிவுறுத்தியது. குறித்த தாவரத்தைப் பயிரிடுவதைத் தடுப்பதற்கு சட்டம் இல்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்தத் தாவரங்கள் காடுகளில் இருந்து வெட்டி அனுமதியின்றி கொண்டு செல்வது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வல்லப்பட்டா தாவரத்தின் குணாதிசயங்களைக் கொண்ட அக்விலேரியா எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட தாவரம் தற்போது இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வல்லப்பட்டா மற்றும் அக்விலேரியா தாவரங்களை வேறுபடுத்துவது எளிதல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் காரணமாக, காடுகளில் இருந்து வெட்டப்படும் வல்லப்பட்டா செடிகளை, தனியார் தோட்டங்களில் இருந்து பெறப்படும் செடிகள் என, விளம்பரப்படுத்த, கடத்தல்காரர்கள் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ உபுல் கலப்பதி, கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


