பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-07-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கடந்த ஒரு வருடகாலத்தில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும், 27/2023 அரச நிர்வாக சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பதும் சகல அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத்குமார சுமத்திராரச்சி தெரிவித்தார்.
வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (ஜூலை 11) ஆம் திகதி கூடியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, மேல் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். குழுவின் தலையீட்டின் மூலம் வெளியிடப்பட்ட 27/2023 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமையை அரசாங்க நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2023ஆம் ஆண்டின் செயலாற்று அறிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேர்தல்களின் போது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் விரல்களில் வர்ணம் பூசுவது அனாவசியமானது என்ற குழுவின் முன்னைய அறிவுறுத்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய விரல்களில் பூசப்படும் வர்ணங்களை இறக்குமதி செய்வதை இரத்துச் செய்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனை இந்தச் சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்தாதிருக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். கைவிரல்களில் வர்ணம் பூசும் செயற்பாட்டை நீக்கினால் அதிக பணம், நேரம் மற்றும் உழைப்பு மீதப்படுத்தப்படும் என்பது இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்படி, தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளையும் குழுவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் இயலாமையுடைய நபர்களுக்காக மேலும் பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்காக தேர்தல் தொடர்பான 320 சொற்களைக் கொண்ட புதிய சைகை மொழி சொற்களஞ்சியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இயலாமையுடைய சமூகத்தின் செயல்பாடுகளுக்கு அணுகல் வசதிகள் உள்ளிட்ட அதிகபட்ச வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க சேவை குறித்து சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சு மட்டத்தில் தனியான அதிகாரிகளை நியமித்து விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தும் அரசாங்க நிறுவனங்களைப் பாராட்டுவதாகவும் குழுவின் தலைவர் கௌரவ ஜகத்குமார சுமத்திராரச்சி தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பில் அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பதிவாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து ஓய்வூதியம் செலுத்தும் போது உயிரிழக்கும் நபர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. வாழ்க்கைச் சான்றிதழைப் பெறுவதில் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதுடன், மேலும் வெளிப்படைத் தன்மையுடன் பணியை மேற்கொள்வதற்கான திறனை உறுதிப்படுத்துவதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
எரிபொருள் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கான நியாயமான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரத்தைத் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
ரயில்வே பணிப்புறக்கணிப்பின் போது சில விசேட ரயில்களை இயக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ ரோஹன பண்டார, கௌரவ ஜயந்த வீரசிங்க, கௌரவ மர்ஜான் ஃபலீல், கௌரவ டபிள்யூ.எச்.எம். தர்மசேன ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
