01

E   |   සි   |  

2024-07-12

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2023 இற்கான வரி நிலுவையை முழுமையாக அறவிடுமாறு வழங்கிய பரிந்துரையை மது வரித் திணைக்களம் புறக்கணித்தமை தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் கடுமையான அதிருப்தி

  • மது வரி ஆணையாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவைத் தவிர்ப்பதும் குழுவின் பரிந்துரைகளை புறக்கணிப்பதும் பாராளுமன்றத்தையும் குழுவையும் அகௌரவிப்பதாகும் - வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்
  • எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சிடம் விடுத்த வினவிலுக்கு பதில் வரவில்லை - மது வரித் திணைக்களம் குழுவில் தெரிவிப்பு

 

2023 இற்கான முழுமையான வரி நிலுவையான 1.1 பில்லியன் ரூபாய் நிதியை 2024.06.30 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மது உற்பத்தியாளர்களிடமிருந்து அறவிடுமாறு 2024.04.24 ஆம் திகதி வழிவகைகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரையின் முன்னேற்றம் தொடர்பில் பரிசீலிக்கும் போது குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, அது தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து குழு அதன் கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

இங்கு மதுவரித் திணைக்களம் குறிப்பிடுகையில், வழிவகைகள் பற்றிய குழு வழங்கிய பரிந்துரை மற்றும் முன்னைய ஆண்டுகளின் மது வரி அறவிடுதல் தொடர்பான ஒப்பந்தங்கள் என்பவற்றுக்கிடையிலான முரண்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி 2024.05.02 ஆம் திகதி கடிதம் மூலம் நிதி அமைச்சிடம் வினவியிருந்தாலும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து பதிலொன்று கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் 2024.07.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு, டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் 1,659 மில்லியன் ரூபாய், ஹிங்குரான டிஸ்டிலரீஸ் நிறுவனம் 102 மில்லியன் ரூபாய், சினர்ஜி நிறுவனம் 37 மில்லியன் ரூபாய், வயம்ப டிஸ்டிலரீஸ் 79 மில்லியன் ரூபாய் என்றவகையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024.06.15 ஆம் திகதி வரையான நிலுவை வரி மற்றும் வருமானம் 1.8 பில்லியன் ரூபாய் என குழுவில் புலப்பட்டதுடன், இவ்வாறு நிலுவை வரியை முழுமையாக அறவிடுமாறு குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்த நிலையில், மதுவரித் திணைக்களத்தினால் அதன் கடமையை புறக்கணித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துவதாக குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

மேலும், டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் தவிர்ந்த ஏனைய நிறுவங்களுடன் மதுவரித் திணைக்களம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் தற்பொழுது செயலற்ற நிலையில் உள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுப்பதற்கு மது வரி ஆணையாளர் நாயகத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு உள்ள நிலையில் ஆணையாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவை புறக்கணித்து வருவதாகவும், மதுவரித் திணைக்களம் குழுவின் பரிந்துரைகளை பொருட்படுத்தாமல் இருப்பதாகவும், அது பாராளுமன்றத்தையும் குழுவையும் அகௌரவிப்பதாகும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2023 இற்கான நிலுவை மது வரியை செலுத்தாத நிறுவனங்களின் மது உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மீண்டும் நிதி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு குழுவின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

பொதுமக்களுக்கு வரி விதிக்கும் பின்னணியில், நிலுவை வரிகளை செலுத்தாத மது உற்பத்தியாளர்கள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் தளர்வான கொள்கையை பின்பற்றுவது தொடர்பிலும் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது. அத்துடன், நான்கு குழுக் கூட்டங்களில் குழுவினால் நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தாமை தொடர்பிலும் குழுவின் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டது.

அத்துடன், அவசர அனர்த்த சூழ்நிலையில் தலையிடுவதன் கீழ், கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தினால் மூழ்கிய விடயம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இங்கு, கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்கிய வடிகான் கட்டமைப்பு போதுமானதாக இல்லை எனவும், அவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் என்பன விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இது தொடர்பில் உலக வங்கியின் கவனத்தை ஈர்ப்பதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு இந்தப் பிரேரணையை முன்வைக்குமாறும், அதற்கு புகையிரத திணைக்களத்தையும் சம்பந்தப்படுத்திக்கொள்ளுமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அவிசாவளை பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் சேற்று நீர் கலந்த நீர் விநியோகிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பிலும் இதன்போது மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிக்கலுக்குக் காரணமாக உள்ள அனுமதி வழங்கப்பட்ட மற்றும் அனுமதி வழங்கப்படாத இரத்தினக்கல் அகழ்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் இணைந்து சிக்கலுக்குக் காரணமான கெடஹெத்த கால்வாயுடன் தொடர்புடைய இரத்தினக்கல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும், அது தொடர்பில் கண்காணிப்பு செய்து அதன் அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டதில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

6 3

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks