பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-06-24
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு 2024.06.24 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தலைமையில் கூடியது.
Verité Research ஆய்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அறிக்கை (State of the Budget 2024) தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு தமது அறிக்கை தொடர்பான அறிமுகத்தை வழங்கினர். அந்த அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலங்கையின் வரவுசெலவுத்திட்ட செயல்முறையின் பின்னணியை முன்வைத்து, 2024 வரவுசெலவுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 1991ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வரவுசெலவுத்திட்ட இலக்குகளை எட்டத் தவறியதன் காரணமாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 வரவுசெலவுத்திட்டத்தின் வருமான இலக்கு, சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான வரி விகிதங்களின் அதிகரிப்பு மூலம் சேகரிக்க எதிர்பார்க்கப்படும் வருமானம் பற்றிய தரவுகள் இந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.
பெறுமதி சேர் வரியின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் யதார்த்தமானதா என கணக்கெடுக்குமாறும் 2022 - 2024 காலப்பகுதியில் காணப்பட்ட பணவீக்கம் அரச வருமானத்துக்கு ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான அறிக்கை ஒன்றை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்குமாறு Verité Research ஆய்வு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், அரசினால் முன்மொழியப்பட்டுள்ள சொத்துக்கள் வரி தொடர்பான ஆய்வறிக்கையொன்றும் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, அவிசாவளை பகுதியில் வசிக்கும் 5 மனுதாரர்கள் முன்வைத்த மனு தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடிநீர் சேறு கலந்த நீராக இருப்பது தொடர்பில் பரிசீலனை செய்வது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவிசாவளை நிலையத்தினால் அவிசாவளை மற்றும் தல்தூவ மக்களுக்கு 29 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் குடிநீர் மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுவது புலப்பட்டது. இதனால் 8,752 நீர் இணைப்புக்களில் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலப்பட்டது.
சீதாவாக்க ஆற்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் முறையற்ற இரத்தினக்கல் அகழ்வு காரணமாக நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு பழுதடைந்துள்ளதால் இந்த நிலைமை உருவெடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. இந்த நிலைமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தி, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதா என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, பொலிஸ் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தாலும் அதற்கு முறையான தீர்வொன்று வழங்கப்படவில்லை என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதன்போது தெரிவித்தது.
தற்போதைய நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு 50 வருடங்கள் பழைமையானது என்பதால் புதிய நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பொன்றுக்கு (1,600 மில்லியன் ரூபாய்) முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இன்னும் விலை மனு கோரல் இடம்பெறவில்லை எனவும் இதன்போது புலப்பட்டது. அந்த முழுமையான செயற்பாட்டை பூர்த்தி செய்வதற்கு சுமார் 2 வருடங்கள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தற்போது நீரைப் பெரும் இடத்துக்கு 500 மீட்டர் அளவு உயர்வான பகுதியிலிருந்து நீரைப் பெற முடியுமானால் இதற்குத் தீர்வாக அமையும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இரண்டு வருடங்களான செயற்பாட்டை ஆரம்பிக்கும் போது தற்போதைய கட்டமைப்பை இரண்டு வாரங்களுக்கு மூடிவைக்க வேண்டி ஏற்படுவதால், அந்தக் காலப்பகுதியில் நீரைப் பெற்றுக்கொள்வதற்கு தற்காலிக மாற்றீட்டை கண்டறியுமாறு குழுவின் தலைவர் கௌரவ பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஆலோசனை வழங்கினார். அதற்கு கலட்டுவான பகுதியில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
அதற்கு மேலாதிக்கம், உத்தேச நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புக்கு மாற்றீடாக கொண்டுவரக்கூடிய குறைந்த செலவிலான வேலைத்திட்டத்தின் அண்ணளவான செலவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புக்கு அறிவித்த குழுவின் தலைவர் தற்பொழுது 1,600 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டு, விலை மனு கோருவதற்கு தயாராகவுள்ள நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் காலம் (Time Line) தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

