01

E   |   සි   |  

2024-06-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

Verité Research ஆய்வு நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பித்தது

  • அவிசாவளை மக்கள் 29 வருடங்களாக முகங்கொடுக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் அவதானம் - சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு

 

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு 2024.06.24 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தலைமையில் கூடியது.

Verité Research ஆய்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அறிக்கை (State of the Budget 2024) தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு தமது அறிக்கை தொடர்பான அறிமுகத்தை வழங்கினர். அந்த அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலங்கையின் வரவுசெலவுத்திட்ட செயல்முறையின் பின்னணியை முன்வைத்து, 2024 வரவுசெலவுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 1991ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வரவுசெலவுத்திட்ட இலக்குகளை எட்டத் தவறியதன் காரணமாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 வரவுசெலவுத்திட்டத்தின் வருமான இலக்கு, சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான வரி விகிதங்களின் அதிகரிப்பு மூலம் சேகரிக்க எதிர்பார்க்கப்படும் வருமானம் பற்றிய தரவுகள் இந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெறுமதி சேர் வரியின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் யதார்த்தமானதா என கணக்கெடுக்குமாறும் 2022 - 2024 காலப்பகுதியில் காணப்பட்ட பணவீக்கம் அரச வருமானத்துக்கு ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான அறிக்கை ஒன்றை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்குமாறு Verité Research ஆய்வு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், அரசினால் முன்மொழியப்பட்டுள்ள சொத்துக்கள் வரி தொடர்பான ஆய்வறிக்கையொன்றும் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, அவிசாவளை பகுதியில் வசிக்கும் 5 மனுதாரர்கள் முன்வைத்த மனு தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடிநீர் சேறு கலந்த நீராக இருப்பது தொடர்பில் பரிசீலனை செய்வது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவிசாவளை நிலையத்தினால் அவிசாவளை மற்றும் தல்தூவ மக்களுக்கு 29 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் குடிநீர் மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுவது புலப்பட்டது. இதனால் 8,752 நீர் இணைப்புக்களில் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலப்பட்டது.

சீதாவாக்க ஆற்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் முறையற்ற இரத்தினக்கல் அகழ்வு காரணமாக நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு பழுதடைந்துள்ளதால் இந்த நிலைமை உருவெடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. இந்த நிலைமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தி, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதா என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, பொலிஸ் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தாலும் அதற்கு முறையான தீர்வொன்று வழங்கப்படவில்லை என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதன்போது தெரிவித்தது.

தற்போதைய நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு 50 வருடங்கள் பழைமையானது என்பதால் புதிய நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பொன்றுக்கு (1,600 மில்லியன் ரூபாய்) முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இன்னும் விலை மனு கோரல் இடம்பெறவில்லை எனவும் இதன்போது புலப்பட்டது. அந்த முழுமையான செயற்பாட்டை பூர்த்தி செய்வதற்கு சுமார் 2 வருடங்கள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தற்போது நீரைப் பெரும் இடத்துக்கு 500 மீட்டர் அளவு உயர்வான பகுதியிலிருந்து நீரைப் பெற முடியுமானால் இதற்குத் தீர்வாக அமையும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இரண்டு வருடங்களான செயற்பாட்டை ஆரம்பிக்கும் போது தற்போதைய கட்டமைப்பை இரண்டு வாரங்களுக்கு மூடிவைக்க வேண்டி ஏற்படுவதால், அந்தக் காலப்பகுதியில் நீரைப் பெற்றுக்கொள்வதற்கு தற்காலிக மாற்றீட்டை கண்டறியுமாறு குழுவின் தலைவர் கௌரவ பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஆலோசனை வழங்கினார். அதற்கு கலட்டுவான பகுதியில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அதற்கு மேலாதிக்கம், உத்தேச நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புக்கு மாற்றீடாக கொண்டுவரக்கூடிய குறைந்த செலவிலான வேலைத்திட்டத்தின் அண்ணளவான செலவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புக்கு அறிவித்த குழுவின் தலைவர் தற்பொழுது 1,600 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டு, விலை மனு கோருவதற்கு தயாராகவுள்ள நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் காலம் (Time Line) தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

 

12



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks