பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-05-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் (மே 13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் குறித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எம்.வாகீசன், பூநகரி, கண்டாவளை, கரச்சி மற்றும் பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது, இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பதிரகே உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய நபர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் தரப்பினர் உள்ளிட்ட பலரும் இங்கு பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன.
இதில் கலந்துகொண்ட இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்துக்கள், ஆலோசனை மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், வடமாகாணத்தில் சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிலும் இயலாமையுடைய நபர்களை வழிநடத்துவதற்கான குழுவொன்றை நியமிக்குமாறும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு விசேட இடத்தை ஒதுக்குமாறும் கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இந்த நடைமுறை நாட்டின் சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சகல மாவட்டங்களிலும் ஆகக் குறைந்தது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு பாடசாலையாவது இருக்கின்றபோதும், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் அவ்வாறான ஒரேயொரு பாடசாலையே காணப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்திற்குள் காணியொன்றைப் பெற்றுக்கொடுத்தால் அவ்வாறானதொரு பாடசாலையொன்றை அமைப்பதற்கு பிரித்தானியாவில் வசிக்கும் ரஞ்சித் சந்திரசேகர என்ற இலங்கைப் புத்திஜீவி ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இதற்கமைய உரிய காணியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபர் மற்றும் சமூக சேவைகள் செயலாளரிடம் ஒன்றியத்தின் தலைவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தற்பொழுது செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் புள்ளிவிபரங்களுக்கு அமைய ஒட்டுமொத்த சனத்தொகையில் 8.2% அதாவது ஏறத்தாழ 17 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிராந்தியத்துக்கும் ஏற்ற வகையில் தரவுகளைப் பார்க்கும்போது அதில் வேறுபாடுகள் இருப்பதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். நாடளாவிய ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சரியான தரவு முறைமை இல்லாததன் பிரச்சினையை அவர் இங்கு தெரியப்படுத்தினார்.
அத்துடன், இயலாமையுடைய நபர்கள் பொதுப் போக்குவரத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இங்கு வருகை தந்திருந்த பலரும் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்நாட்டின் போக்குவரத்து சேவையில் இணைப்பதற்காக பஸ்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பஸ்களில் இயலாமை உடைய நபர்களின் தேவைக்குரிய பஸ்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே இங்கு தெரிவித்தார்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks





