01

E   |   සි   |  

2024-05-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

வடமாகாணத்தின் சகல மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களிலும் இயலாமையுடைய நபர்களை வழிநடத்துவதற்கான குழுக்களை நியமித்து ஒவ்வொரு கூட்டத்திலும் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் பற்றிய விடயங்களுக்கும் நிகழ்ச்சிநிரலில் இடம் ஒதுக்கவும்...

  • மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும

 

இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் (மே 13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் குறித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எம்.வாகீசன், பூநகரி, கண்டாவளை, கரச்சி மற்றும் பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது, இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பதிரகே உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.  

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய நபர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் தரப்பினர் உள்ளிட்ட பலரும் இங்கு பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்துக்கள், ஆலோசனை மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், வடமாகாணத்தில் சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிலும் இயலாமையுடைய நபர்களை வழிநடத்துவதற்கான குழுவொன்றை நியமிக்குமாறும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு விசேட இடத்தை ஒதுக்குமாறும் கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இந்த நடைமுறை நாட்டின் சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சகல மாவட்டங்களிலும் ஆகக் குறைந்தது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு பாடசாலையாவது இருக்கின்றபோதும், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் அவ்வாறான ஒரேயொரு பாடசாலையே காணப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்திற்குள் காணியொன்றைப் பெற்றுக்கொடுத்தால் அவ்வாறானதொரு பாடசாலையொன்றை அமைப்பதற்கு பிரித்தானியாவில் வசிக்கும் ரஞ்சித் சந்திரசேகர என்ற இலங்கைப் புத்திஜீவி ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இதற்கமைய உரிய காணியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபர் மற்றும் சமூக சேவைகள் செயலாளரிடம் ஒன்றியத்தின் தலைவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தற்பொழுது செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் புள்ளிவிபரங்களுக்கு அமைய ஒட்டுமொத்த சனத்தொகையில் 8.2% அதாவது ஏறத்தாழ 17 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிராந்தியத்துக்கும் ஏற்ற வகையில் தரவுகளைப் பார்க்கும்போது அதில் வேறுபாடுகள் இருப்பதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். நாடளாவிய ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சரியான தரவு முறைமை இல்லாததன் பிரச்சினையை அவர் இங்கு தெரியப்படுத்தினார்.

அத்துடன், இயலாமையுடைய நபர்கள் பொதுப் போக்குவரத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இங்கு வருகை தந்திருந்த பலரும் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்நாட்டின் போக்குவரத்து சேவையில் இணைப்பதற்காக பஸ்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பஸ்களில் இயலாமை உடைய நபர்களின் தேவைக்குரிய பஸ்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே இங்கு தெரிவித்தார்.

1 2

3 4

9 17

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks