logo

E   |   සි   |  

2024-05-16

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

19 வருடங்களாகத் தாமதமான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத் திருத்தத்தை விரைவுபடுத்தவும் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கோப் குழு அறிவுறுத்தல்

  • தற்போதைய சட்டத்தின்படி, இருப்புக்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை - அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

 

19 வருடங்களாகத் தாமதமாகி வரும் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத் திருத்தத்தை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அண்மையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகையைப் பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தலைமையில் கோப் குழு அண்மையில் கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலங்கை சுங்கத்துடன் இணைந்து பாரியளவிலான மொத்த வியாபாரங்களில் சுற்றிவளைப்புகளை  மேற்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்ட போது, தற்போதைய சட்டத்தின் பிரகாரம், சில்லறை வர்த்தகம் தொடர்பில் மாத்திரமே சோதனைகளை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளதாகவும் மொத்த விற்பனை அல்லது உற்பத்தியாளர்களின் களஞ்சியங்களைப் பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் இல்லை எனவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அதற்கமைய, சம்பந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், அது தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சட்டத்திருத்தம் 19 வருடங்களாகத் தாமதமாகி வருவதால், இந்த நடவடிக்கைகள் விரைவாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

ஆனால் சட்டத்தில் 'மொத்த' (மொத்த விற்பனை) என்ற பதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட குழு சுட்டிக்காட்டியது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதாகவும் அதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் நடந்த கோப் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக ஏன் குறிப்பிடவில்லை என்று அதிகாரசபை அதிகாரிகளிடம் குழு வினவியது.

அத்துடன், சந்தை விலைக் கட்டுப்பாடு குறித்து வெகுஜன ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்த  வேண்டியதன் அவசியமும் வலுவாக வலியுறுத்தப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயார் என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடக இராஜாங்க அமைச்சர் கௌரவ சாந்த பண்டார தெரிவித்தார்.

185 பணியாளர் வெற்றிடங்கள் இருப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. விசாரணை அதிகாரிகள் 450 பேர் இருக்க வேண்டும் என்றாலும், தற்போது 341 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த 341 பேரில் 277 பேர் மட்டுமே மாவட்ட அளவில் பணிபுரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, உரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் விசாரணை அதிகாரிகளை வினைத்திறனுடன் பணியமர்த்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், நுகர்வுப் பொருட்களின் மாதிரிப் பரிசோதனைக்கான ஆய்வக வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்க நிறுவனங்களுடன் கலந்துரையாடி இதற்கான சலுகைத் தொகையில் இதனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் குழுவினால்  அறிவிக்கப்பட்டது.

போதுமான எண்ணிக்கையிலான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 2023 இல் கீரி சம்பாவுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போது, 1% மட்டுமே சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதால், விசாரணை அதிகாரிகளை உரிய முறையில் பணியமர்த்தி, வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சுற்றிவளைப்புகள் தொடர்பான இலக்குகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தில் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பாதுகாப்பற்ற மற்றும் தரக்குறைவான பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க அடையாளம் காணப்பட்ட பல பொருட்களுக்குப் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் ஒரு தனியார் நிறுவனத்துடன் அதிகாரசபை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட விதிமுறைகளை இரத்துச் செய்வதற்குப் பல நிறுவனங்கள் அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதும் தெரியவந்தது. பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீளப்பெறுவதற்கு அதிகாரசபை  காலதாமதமானதன் காரணமாக செயற்திட்டம் தாமதமடைந்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ரூ. 2.7 பில்லியனை செலுத்துமாறு 2018 இல் அதிகாரசபைக்கு எதிராக சர்வதேச நியாயசபை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையும் தெரியவந்தது. அதற்கமைய, இது தொடர்பில் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காணும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும், மேலதிகமாக உள்ளக விசாரணையொன்றை மேற்கொண்டு அது தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இந்தக் குறைபாடுகளைச் சரி செய்து வினைத்திறன்மிக்க பாதையில் செல்ல வேண்டும் என குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ யு.கே. சுமித் உடுகும்புற, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ எம்.  ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks