04

E   |   සි   |  

2024-05-16

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

19 வருடங்களாகத் தாமதமான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத் திருத்தத்தை விரைவுபடுத்தவும் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கோப் குழு அறிவுறுத்தல்

  • தற்போதைய சட்டத்தின்படி, இருப்புக்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை - அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

 

19 வருடங்களாகத் தாமதமாகி வரும் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத் திருத்தத்தை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அண்மையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகையைப் பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தலைமையில் கோப் குழு அண்மையில் கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலங்கை சுங்கத்துடன் இணைந்து பாரியளவிலான மொத்த வியாபாரங்களில் சுற்றிவளைப்புகளை  மேற்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்ட போது, தற்போதைய சட்டத்தின் பிரகாரம், சில்லறை வர்த்தகம் தொடர்பில் மாத்திரமே சோதனைகளை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளதாகவும் மொத்த விற்பனை அல்லது உற்பத்தியாளர்களின் களஞ்சியங்களைப் பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் இல்லை எனவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அதற்கமைய, சம்பந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், அது தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சட்டத்திருத்தம் 19 வருடங்களாகத் தாமதமாகி வருவதால், இந்த நடவடிக்கைகள் விரைவாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

ஆனால் சட்டத்தில் 'மொத்த' (மொத்த விற்பனை) என்ற பதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட குழு சுட்டிக்காட்டியது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதாகவும் அதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் நடந்த கோப் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக ஏன் குறிப்பிடவில்லை என்று அதிகாரசபை அதிகாரிகளிடம் குழு வினவியது.

அத்துடன், சந்தை விலைக் கட்டுப்பாடு குறித்து வெகுஜன ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்த  வேண்டியதன் அவசியமும் வலுவாக வலியுறுத்தப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயார் என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடக இராஜாங்க அமைச்சர் கௌரவ சாந்த பண்டார தெரிவித்தார்.

185 பணியாளர் வெற்றிடங்கள் இருப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. விசாரணை அதிகாரிகள் 450 பேர் இருக்க வேண்டும் என்றாலும், தற்போது 341 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த 341 பேரில் 277 பேர் மட்டுமே மாவட்ட அளவில் பணிபுரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, உரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் விசாரணை அதிகாரிகளை வினைத்திறனுடன் பணியமர்த்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், நுகர்வுப் பொருட்களின் மாதிரிப் பரிசோதனைக்கான ஆய்வக வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்க நிறுவனங்களுடன் கலந்துரையாடி இதற்கான சலுகைத் தொகையில் இதனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் குழுவினால்  அறிவிக்கப்பட்டது.

போதுமான எண்ணிக்கையிலான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 2023 இல் கீரி சம்பாவுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போது, 1% மட்டுமே சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதால், விசாரணை அதிகாரிகளை உரிய முறையில் பணியமர்த்தி, வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சுற்றிவளைப்புகள் தொடர்பான இலக்குகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தில் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பாதுகாப்பற்ற மற்றும் தரக்குறைவான பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க அடையாளம் காணப்பட்ட பல பொருட்களுக்குப் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் ஒரு தனியார் நிறுவனத்துடன் அதிகாரசபை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட விதிமுறைகளை இரத்துச் செய்வதற்குப் பல நிறுவனங்கள் அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதும் தெரியவந்தது. பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீளப்பெறுவதற்கு அதிகாரசபை  காலதாமதமானதன் காரணமாக செயற்திட்டம் தாமதமடைந்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ரூ. 2.7 பில்லியனை செலுத்துமாறு 2018 இல் அதிகாரசபைக்கு எதிராக சர்வதேச நியாயசபை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையும் தெரியவந்தது. அதற்கமைய, இது தொடர்பில் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காணும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும், மேலதிகமாக உள்ளக விசாரணையொன்றை மேற்கொண்டு அது தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இந்தக் குறைபாடுகளைச் சரி செய்து வினைத்திறன்மிக்க பாதையில் செல்ல வேண்டும் என குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ யு.கே. சுமித் உடுகும்புற, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ எம்.  ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-02-16

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும்  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.


2026-02-13

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில்  2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால்  அங்கீகரிக்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks