E   |   සි   |  

2024-04-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்போது ஒரு கிலோவுக்காக வியாபாரிகள் பெற்றுக் கொள்ளும் இலாபம் 100 – 1000 ரூபாவாகும் என வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

  • கணக்காய்வாளர் நாயகத்தினால் நடத்தப்படும் தடயவியல் கணக்காய்வு முடிவடையும்வரை வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான இலத்திரனியல் வாகனங்கள் இறங்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அறிவுறுத்தல்
  • சேர் பெறுமதி வரியாக 188 பில்லியன் ரூபாவை வசூலிப்பதற்கு உள்நாட்டு இறைவரி சட்டத்துக்கு அமைய விரைவில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதமொன்றுக்கு 100,000 ற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்கள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்போது வியாபாரிகள் கிலோவொன்றுக்கு 100-1000 ரூபா வரையில் இலாபம் ஈட்டுவது வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரவணக்க தலைமையில் அண்மையில் (ஏப். 02) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.

இதில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிலோவொன்றின் சந்தை விலைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கி, வணிக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், இலங்கை சுங்கம், ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, ஹெக்டர் கொபேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2018 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்பட்ட வரி வருமானத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், அமெரிக்க டொலர் பெறுமதிக்கு ஏற்ப இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான அறவிடப்படும் விசேட பண்ட வரி பொருத்தமாக இல்லாமை இதற்குக் காரணம் என்றும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அதிக பணம் செலவாவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் கிடைக்காதபோதும், இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக இலாபத்தை ஈட்டுவதாகவும் தெரியவந்தது. கிலோவொன்றுக்கு 100-1000 ரூபாவரையில் வியாபாரிகள் இலாபமீட்டுவதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிலோவொன்றுக்கு சந்தை விலை மற்றும் விசேட பண்ட வரி அறிவிடப்பட்ட பின்னர் சுங்க வரி விலக்களிக்கப்பட்ட பின்னரான விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய வேறுபாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் வாரந்தோறும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் இலங்கை சுங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், 2525 பிரிவில் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களிடமிருந்து சேர் பெறுமதி வரியை அறவிடக்கூடிய வகையில் அவர்களைப் பதிவுசெய்தல் மற்றும் 7000 பிரிவின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இறக்குமதியாளர்களினால் சட்டத்துக்கு அமைய வரியை அறவிடுவதற்கு (super gain tax) மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை இம்மாத இறுதியில் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சுரண்டல் உச்சத்தை அடையும் அபாயம் இருப்பதால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலையீட்டின் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு பதிலாக, வர்த்தக அமைச்சு நேரடியாக இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும், சந்தை விலை மற்றும் ஆகக் கூடிய விற்பனை விலை என்பன இணையத்தளம், கையடக்கத்தொலைபேசி செயலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட தடயவியல் கணக்காய்வின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் கணக்காய்வுப் பணிகள் முடிவடையும் வரை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழிவகைகள் பற்றிய குழு பணிப்புரை வழங்கியது.

அத்துடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் நிலுவைகளை அறவிடுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

•    சேர் பெறுமதி வரியின் நிலுவைத் தொகையான 188 பில்லியன் ரூபாவை அறவிடுவதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை கையகப்படுத்தல்)

•    சட்ட நடவடிக்கை எடுப்பதன் காரணமாக 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட வரியை வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுத்தல்.

•    ஒரு கோடிக்கு மேல் வரி ஏய்ப்புச் செய்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வாரத்துக்குள் குழுவிடம் பெற்றுக்கொடுத்தல்.

•    ரமிஸ் (RAMIS) கட்டமைப்பைப் பேணுவதற்கு திறந்த கேள்விப்பத்திரம் கோரலின் கீழ் அரச தனியார் பங்குடமை மாதிரியொன்றைத் தயாரித்தல்.

•    ரமிஸ் (RAMIS)  கட்டமைப்புத் தொடர்பான கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத் தகவலை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிட முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தைக் குழுவுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
•    18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்த தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ளல்.


இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டபிள்யூ.டி. ஜே செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கெளரவ ஜயரத்ன ஹேரத், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ அலி சாஹிர் மௌலானா, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ காமினி வலேபொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks