01

E   |   සි   |  

2024-03-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் வழிகாட்டடிலின் கீழ் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பில் பாடசாலை மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில்

  •  பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இந்நாட்டு சமூகங்களைத் தெளிவுபடுத்த புத்தகத் தொகுதிகளை வெளியிடக் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமான வெற்றியாகும் – பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ரோஹினி விஜேரத்ன தெரிவிப்பு
  •  இந்தப் புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த
    பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பாகப் பாடசாலை மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகக் தொகுதிகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்கள் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை அறிவுறுத்தும் நிகழ்வு அண்மையில் (மார்ச் 21) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

 

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இவ்விடயத்துடன் தொடர்புபட்ட அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான கௌரவ சுசில் பிரேஜயந்த, சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களையும் சமூகத்தையும் தெளிவுபடுத்த கௌரவ ரோஹினி விஜேரத்ன அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் வழிகாட்டிலின் கீழ் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சிறுவர் விவகாரம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்துடன் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுடன் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து இந்தப் புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்கள் தயாரிக்கப்பட்டதுடன், இவை கடந்த மார்ச் 07ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன, இனவிருத்தி சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான புத்தகத் தொகுதிகளையும், டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சித் தொகுப்புக்களையும் அறிமுகப்படுத்துவது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். இந்நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு சிறுவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்றார்.

பல வருடங்களுக்கு முன்னர் துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக இதனை மேற்கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும், பல்வேறு தடைகள் காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனமையையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், இது பெருந்திரளான மக்களின் முயற்சியால் நிறைவேற்றப்பட்ட பணி என்பதால், அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த வேலைத்திட்டம் காலத்தின் தேவையுடன் கூடிய சிறந்த வேலைத்திட்டம் எனவும், அதற்காக கௌரவ ரோஹினி விஜேரத்ன தலைமையிலான அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

அத்துடன், காலத்தின் தேவையாக இருக்கும் இப்புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சுரமான கௌரவ சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இந்தப் பணிகளை நிறைவேற்ற தலையிட்ட பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கௌரவத்தைத் தெரிவித்தார்.

இங்கு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாடநூல்களும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாடநூல்கள் தொடர்பான அறிமுகமும் இடம்பெற்றது. அதன்படி, வயது 11 வயது முதல் நான்கு வயதுப் பிரிவுகளுக்கு இந்தத் புத்தகத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் டிஜிட்டல் ஊடக நிகழ்சித் தொகுப்புக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, சிறுவர்கள் மற்றும் சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க QR குறியீட்டைப் பயன்படுத்தி முகப்புத்தகம், யூடியூப், எக்ஸ், டிக் டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் மூலம் குறுகிய வீடியோ நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

1 5

6 3

2 8

16 18

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks