04

E   |   සි   |  

2023-12-05

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாதுகாப்பு அமைச்சு கோபா குழு முன்னிலையில்

  • பல்வேறு ஆண்டுகளாகக் காலதாமதம் அடைந்துவரும் ஆயுதங்கள் (திருத்தம்) மற்றும் வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டமூலங்களைத் திருத்துவதை விரைவுபடுத்தவும்.
  • முப்படையினரால் வெளித் தரப்பினருக்கு வழங்கப்படும் சேவையின் ஊடாக ஈட்டப்படும் வருமானத்தை ஒன்றிணைந்த நிதியத்தில் வரவுவைப்பதற்கான பொறிமுறையை அமைக்க முன்மொழிவு.
  • முப்படையினருக்கான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து அவதானம்


பத்து வருடங்கள் காலதாமதம் அடைந்துள்ள 1996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெடிபொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இராஜாங்க அமைச்சர் கெளரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில்  கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில், பாதுகாப்பு அமைச்சின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அமைச்சின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

11996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டத்திலும், வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டத்திலும்  2012ஆம்  ஆண்டு திருத்தம் செய்ய முதலில்  குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வருவதாக இங்கு தெரியவந்தது. இதுவரை சுமார் 37,000 துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டத்திருத்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்தக் காலதாமதத்தினால் அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைக்க முடியாதிருப்பதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதால் சட்டத்தைத் திருத்தும் பணிகள் விரைவில் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

முப்படையினர் வெளித் தரப்பினருக்கு வழங்கிவரும் சேவைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் வரவுவைக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால்,  அது தொடர்பில் உரிய முறையொன்றைத் தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளபோதும் இன்னமும் இதனைச் செயற்படுத்தாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான வருமானம் நலன்புரிச் சங்கங்களுக்கே செல்வதாகவும், அவ்வாறு செய்வதில் முறையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான தெளிவான கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் குழு அறிவுறுத்தியது. இந்த விடயத்தை விரிவாக ஆராயுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முப்படையினருக்கான உணவுப் பொருட்கள் கொள்முதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முப்படையினருக்கான உணவுக் கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் முகாமைத்துவ அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்னர் வழங்கப்பட்டிருந்தபோதும், கடற்படை மற்றும் விமானப்படையில் மாத்திரமே அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு தெரியவந்தது. அதன்படி, இராணுவத்திற்கான கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி அதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், செலவினங்களுக்கு ஏற்ப படையினர் உள்ளிட்ட தரப்பினர் பலன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்கும் 31 அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 72 மில்லியன் குத்தகை ஒப்பந்தத்தில் 24 அலகுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வளவு வரித் தொகையில் வீடுகளைப் பெறுவதற்குப் பதிலாக, புதிய கட்டுமானம் செய்து தங்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்துக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நிர்மானப் பணிகள் எதிர்காலத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வுப் பொருள் களஞ்சியத்தில் 12 மில்லியன் ரூபா பொருட்கள் காணாமல்போனமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதுவரை இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரினதும் பணி இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், களஞ்சியத்துக்குப் பொறுப்பானவரிடமிருந்து குறித்த தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்படும்வரை உள்ளகக் கணக்காய்வின் போது இந்த விவகாரம் ஏன் வெளிப்படவில்லையென்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தவிர, மூலோபாய தொடர்பு வலையமைப்பு திட்டம், கொள்முதல் செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் கடமைகள் போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன, கௌரவ டயானா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ ஜே.சி அலவத்வல, கௌரவ ஜயந்த கடகொட, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ வீரசுமண வீரசிங்க, கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ சஹான் பிரதீப் விதான ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-03-30

தொல்பொருளியல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-03-30

விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஒழுங்குவிதி 2026 ஜனவரி 16ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் பங்களிப்புடன் அண்மையில் (மார்ச் 20) இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-03-30

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்கவும் - சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-03-24

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முதல் தடைவையாகக் கூடியது

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் முதல் தடவையாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விசேட குழுவின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, தித்வா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதற்கு அமைய தேவையான அடிப்படை விழிப்புணர்வைப் பெறுவதற்காக, இந்த விசேட குழுவின் அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.அதேநேரம், இந்த விசேட குழு அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் செயற்படும் என்பதால் தேவைப்படும் சில சில தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட துறை தொடர்பில் நிபுணத்துவம் உள்ள அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அவ்ப்போது அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்த விசேட குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை குழுவின் முதலாவது கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதாவது 2026.06.19ஆம் திகதியாகும்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் விரைவில் கூட்டங்களை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர்  கூறினார். குழுவின் செயற்பாட்டு வரம்பு தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தித்வா புயல் போன்ற எதிர்கால நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இதில் உள்ளடக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியைப் பெற்று கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks