04

E   |   සි   |  

2023-12-05

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாதுகாப்பு அமைச்சு கோபா குழு முன்னிலையில்

  • பல்வேறு ஆண்டுகளாகக் காலதாமதம் அடைந்துவரும் ஆயுதங்கள் (திருத்தம்) மற்றும் வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டமூலங்களைத் திருத்துவதை விரைவுபடுத்தவும்.
  • முப்படையினரால் வெளித் தரப்பினருக்கு வழங்கப்படும் சேவையின் ஊடாக ஈட்டப்படும் வருமானத்தை ஒன்றிணைந்த நிதியத்தில் வரவுவைப்பதற்கான பொறிமுறையை அமைக்க முன்மொழிவு.
  • முப்படையினருக்கான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து அவதானம்


பத்து வருடங்கள் காலதாமதம் அடைந்துள்ள 1996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெடிபொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இராஜாங்க அமைச்சர் கெளரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில்  கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில், பாதுகாப்பு அமைச்சின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அமைச்சின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

11996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டத்திலும், வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டத்திலும்  2012ஆம்  ஆண்டு திருத்தம் செய்ய முதலில்  குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வருவதாக இங்கு தெரியவந்தது. இதுவரை சுமார் 37,000 துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டத்திருத்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்தக் காலதாமதத்தினால் அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைக்க முடியாதிருப்பதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதால் சட்டத்தைத் திருத்தும் பணிகள் விரைவில் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

முப்படையினர் வெளித் தரப்பினருக்கு வழங்கிவரும் சேவைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் வரவுவைக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால்,  அது தொடர்பில் உரிய முறையொன்றைத் தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளபோதும் இன்னமும் இதனைச் செயற்படுத்தாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான வருமானம் நலன்புரிச் சங்கங்களுக்கே செல்வதாகவும், அவ்வாறு செய்வதில் முறையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான தெளிவான கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் குழு அறிவுறுத்தியது. இந்த விடயத்தை விரிவாக ஆராயுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முப்படையினருக்கான உணவுப் பொருட்கள் கொள்முதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முப்படையினருக்கான உணவுக் கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் முகாமைத்துவ அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்னர் வழங்கப்பட்டிருந்தபோதும், கடற்படை மற்றும் விமானப்படையில் மாத்திரமே அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு தெரியவந்தது. அதன்படி, இராணுவத்திற்கான கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி அதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், செலவினங்களுக்கு ஏற்ப படையினர் உள்ளிட்ட தரப்பினர் பலன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்கும் 31 அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 72 மில்லியன் குத்தகை ஒப்பந்தத்தில் 24 அலகுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வளவு வரித் தொகையில் வீடுகளைப் பெறுவதற்குப் பதிலாக, புதிய கட்டுமானம் செய்து தங்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்துக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நிர்மானப் பணிகள் எதிர்காலத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வுப் பொருள் களஞ்சியத்தில் 12 மில்லியன் ரூபா பொருட்கள் காணாமல்போனமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதுவரை இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரினதும் பணி இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், களஞ்சியத்துக்குப் பொறுப்பானவரிடமிருந்து குறித்த தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்படும்வரை உள்ளகக் கணக்காய்வின் போது இந்த விவகாரம் ஏன் வெளிப்படவில்லையென்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தவிர, மூலோபாய தொடர்பு வலையமைப்பு திட்டம், கொள்முதல் செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் கடமைகள் போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன, கௌரவ டயானா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ ஜே.சி அலவத்வல, கௌரவ ஜயந்த கடகொட, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ வீரசுமண வீரசிங்க, கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ சஹான் பிரதீப் விதான ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-02-16

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும்  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.


2026-02-13

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில்  2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டம் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-02-13

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால்  அங்கீகரிக்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks