logo

02

E   |   සි   |  

2023-11-01

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டமொன்று தேவை - மகா சங்கத்தினர் உட்பட தொல்பொருள் துறை தொண்டு அமைப்புகளின் தலைவர்கள் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவிப்பு

  • இந்நாட்டின் தேசிய மரபுரிமையைப் பாதுகாப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன - பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவிப்பு
  • இலங்கையிலுள்ள இடங்கள் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எதுவும் தேசிய மரபுரிமைகளாக அறிவிக்கப்படவில்லை - தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர்
  • தேசிய மரபுரிமையைப் பாதுகாக்க தேசிய மரபுரிமை முகாமைத்துவ சட்டம்  தயாரிக்கப்பட வேண்டும் - தொண்டு அமைப்புகளின் தலைவர்கள் பாராளுமன்ற ஒன்றியத்தில் வலியுறுத்தல்

 

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் நான்காவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர தலைமையில் 2023.10.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரதன தேரர், பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தொல்பொருள் துறையில் தன்னார்வ ரீதியாக செயற்படும் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மதுகம செனெவிருவன், வைத்தியர் வசந்த பண்டார, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் பண்டார திசாநாயக்க, வைத்தியர் காமினி ஜயவீர, மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, சுனில் சந்திரகுமார மற்றும் எஸ்.கே. சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் மூலோபாய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக இந்தப் பாராளுமன்ற ஒன்றியம் செயற்படுகின்றது.

கடந்த கூட்டங்களில், அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடலுக்காக இந்த ஒன்றியத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளம் காணுதல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பான முன்மொழிவை தயாரித்து வருவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய, அரச நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புக்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் உள்ளடங்கிய இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளங்கண்டு பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதே இறுதி இலக்கு என தலைவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இலங்கையில் 8 இடங்கள் உலக மரபுரிமை  இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதுவுமே தேசிய மரபுரிமை இடங்களாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். அதற்கமைய, இவ்வாறான செழுமையான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்கண்டு, பாதுகாத்து முகாமைத்துவம் செய்ய  வேண்டியதன் அவசியத்தை தலைவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த தொல்பொருளியல்  பொருட்கள் இருப்பதாகவும் இதுவரை பதினேழாயிரம் தொல்பொருளியல் பொருட்கள் மாத்திரமே  பதிவாகியுள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தார். அதற்கமைய, அந்த அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் ஒன்றியத்தின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க தேசிய மரபுரிமை முகாமைத்துவ சட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். அதன்மூலம், இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முறையான வகையில் அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் முகாமைத்துவம் செய்யவும் வாய்ப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நோக்கத்திற்காக நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஒன்றிணைந்த கண்காணிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்றியத்தின் முன்னிலையில் வலியுறுத்தினர்.
 
அத்துடன், தொல்பொருளியல் சம்பந்தப்பட்ட தற்பொழுது காணப்படும் வழக்குகளை விரைவில் முடிவுக்குக்  கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும், அந்த வழக்குகளைப் பிரத்தியேக நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்து அவற்றை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

தொல்பொருளியல் திணைக்களத்தை அதன் வினைத்திறனற்ற நிலையிலிருந்து விடுவித்து மேலும் வினைத்திறனான நிறுவனமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின்  தலைவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களிலும் தொல்பொருளியல் துறையைக் கற்று வெளியாகும் பட்டதாரிகளை தகுதியான நிறுவனங்களில் அமர்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும், பாடசாலைக் கட்டமைப்பில் மாணவர்களுக்குத் தேசிய மரபுரிமைகளின் பெறுமதி மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய அறிவை வழங்குவதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கான அறிவை பாடசாலைகள் மற்றும் தம்ம பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு, நாட்டின் தேசிய மரபுரிமையைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கையின்  அபிமானத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த முடியும் என்றும், அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ளுதல் மற்றும் இலங்கைப் பிரஜைகள் தமது நாட்டின் பெருமையை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் எந்தவொரு தொல்பொருளியல் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு  உடனடியாகத் தெரிவிக்கக்கூடிய தொலைபேசி அழைப்பு நிலையமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் வலியுறுத்தினர். தன்னார்வ பாதுகாப்பு கூட்டமைப்பை நிறுவுவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக  கிடைக்கும் பங்களிப்புக்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டன.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-23

சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய முறைகேடு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


2026-07-22

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிக்குறிப்பு வரைவுக்கு அங்கீகாரம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு,  பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


2026-07-22

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வின் வழிமுறை தொடர்பில் கோப் உபகுழுவில் ஆராய்வு

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால்  (கோப்)  நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.


2026-07-22

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காணி, நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு தகவல்களை வழங்குவது குறித்து கோப் குழுவில் அவதானம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு  பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks