பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-01
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் நான்காவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர தலைமையில் 2023.10.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரதன தேரர், பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தொல்பொருள் துறையில் தன்னார்வ ரீதியாக செயற்படும் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மதுகம செனெவிருவன், வைத்தியர் வசந்த பண்டார, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் பண்டார திசாநாயக்க, வைத்தியர் காமினி ஜயவீர, மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, சுனில் சந்திரகுமார மற்றும் எஸ்.கே. சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் மூலோபாய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக இந்தப் பாராளுமன்ற ஒன்றியம் செயற்படுகின்றது.
கடந்த கூட்டங்களில், அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடலுக்காக இந்த ஒன்றியத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளம் காணுதல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பான முன்மொழிவை தயாரித்து வருவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அதற்கமைய, அரச நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புக்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் உள்ளடங்கிய இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளங்கண்டு பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதே இறுதி இலக்கு என தலைவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இலங்கையில் 8 இடங்கள் உலக மரபுரிமை இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதுவுமே தேசிய மரபுரிமை இடங்களாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். அதற்கமைய, இவ்வாறான செழுமையான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்கண்டு, பாதுகாத்து முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த தொல்பொருளியல் பொருட்கள் இருப்பதாகவும் இதுவரை பதினேழாயிரம் தொல்பொருளியல் பொருட்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தார். அதற்கமைய, அந்த அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் ஒன்றியத்தின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க தேசிய மரபுரிமை முகாமைத்துவ சட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். அதன்மூலம், இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முறையான வகையில் அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் முகாமைத்துவம் செய்யவும் வாய்ப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நோக்கத்திற்காக நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஒன்றிணைந்த கண்காணிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்றியத்தின் முன்னிலையில் வலியுறுத்தினர்.
அத்துடன், தொல்பொருளியல் சம்பந்தப்பட்ட தற்பொழுது காணப்படும் வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும், அந்த வழக்குகளைப் பிரத்தியேக நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்து அவற்றை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
தொல்பொருளியல் திணைக்களத்தை அதன் வினைத்திறனற்ற நிலையிலிருந்து விடுவித்து மேலும் வினைத்திறனான நிறுவனமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களிலும் தொல்பொருளியல் துறையைக் கற்று வெளியாகும் பட்டதாரிகளை தகுதியான நிறுவனங்களில் அமர்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும், பாடசாலைக் கட்டமைப்பில் மாணவர்களுக்குத் தேசிய மரபுரிமைகளின் பெறுமதி மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய அறிவை வழங்குவதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கான அறிவை பாடசாலைகள் மற்றும் தம்ம பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு, நாட்டின் தேசிய மரபுரிமையைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கையின் அபிமானத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த முடியும் என்றும், அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ளுதல் மற்றும் இலங்கைப் பிரஜைகள் தமது நாட்டின் பெருமையை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் எந்தவொரு தொல்பொருளியல் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு உடனடியாகத் தெரிவிக்கக்கூடிய தொலைபேசி அழைப்பு நிலையமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் வலியுறுத்தினர். தன்னார்வ பாதுகாப்பு கூட்டமைப்பை நிறுவுவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிடைக்கும் பங்களிப்புக்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டன.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

