பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-01
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் நான்காவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர தலைமையில் 2023.10.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரதன தேரர், பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தொல்பொருள் துறையில் தன்னார்வ ரீதியாக செயற்படும் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மதுகம செனெவிருவன், வைத்தியர் வசந்த பண்டார, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் பண்டார திசாநாயக்க, வைத்தியர் காமினி ஜயவீர, மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, சுனில் சந்திரகுமார மற்றும் எஸ்.கே. சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் மூலோபாய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக இந்தப் பாராளுமன்ற ஒன்றியம் செயற்படுகின்றது.
கடந்த கூட்டங்களில், அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடலுக்காக இந்த ஒன்றியத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளம் காணுதல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பான முன்மொழிவை தயாரித்து வருவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அதற்கமைய, அரச நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புக்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் உள்ளடங்கிய இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளங்கண்டு பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதே இறுதி இலக்கு என தலைவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இலங்கையில் 8 இடங்கள் உலக மரபுரிமை இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதுவுமே தேசிய மரபுரிமை இடங்களாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். அதற்கமைய, இவ்வாறான செழுமையான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்கண்டு, பாதுகாத்து முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த தொல்பொருளியல் பொருட்கள் இருப்பதாகவும் இதுவரை பதினேழாயிரம் தொல்பொருளியல் பொருட்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தார். அதற்கமைய, அந்த அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் ஒன்றியத்தின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க தேசிய மரபுரிமை முகாமைத்துவ சட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். அதன்மூலம், இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முறையான வகையில் அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் முகாமைத்துவம் செய்யவும் வாய்ப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நோக்கத்திற்காக நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஒன்றிணைந்த கண்காணிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்றியத்தின் முன்னிலையில் வலியுறுத்தினர்.
அத்துடன், தொல்பொருளியல் சம்பந்தப்பட்ட தற்பொழுது காணப்படும் வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும், அந்த வழக்குகளைப் பிரத்தியேக நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்து அவற்றை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
தொல்பொருளியல் திணைக்களத்தை அதன் வினைத்திறனற்ற நிலையிலிருந்து விடுவித்து மேலும் வினைத்திறனான நிறுவனமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களிலும் தொல்பொருளியல் துறையைக் கற்று வெளியாகும் பட்டதாரிகளை தகுதியான நிறுவனங்களில் அமர்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும், பாடசாலைக் கட்டமைப்பில் மாணவர்களுக்குத் தேசிய மரபுரிமைகளின் பெறுமதி மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய அறிவை வழங்குவதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கான அறிவை பாடசாலைகள் மற்றும் தம்ம பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு, நாட்டின் தேசிய மரபுரிமையைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கையின் அபிமானத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த முடியும் என்றும், அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ளுதல் மற்றும் இலங்கைப் பிரஜைகள் தமது நாட்டின் பெருமையை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் எந்தவொரு தொல்பொருளியல் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு உடனடியாகத் தெரிவிக்கக்கூடிய தொலைபேசி அழைப்பு நிலையமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் வலியுறுத்தினர். தன்னார்வ பாதுகாப்பு கூட்டமைப்பை நிறுவுவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிடைக்கும் பங்களிப்புக்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டன.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

