பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-10-30
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரசு நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மையான போசாக்கின்மை நிலைமை புலப்படுவதில்லை என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, சிறுவர் போசாக்கின்மை தொடர்பிலான உண்மையான தகவல்களை வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் மூலம் சிறுவர் போசாக்கின்மையை ஒழிப்பது தொடர்பான பொதுவான பிரேரணையொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அதிகாரிகளுக்குக் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், இலங்கையில் போசாக்கின்மை போன்று அதி போசாக்கு நிலைமை தொடர்பான உண்மையான தகவல்களின் தேவையையும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
நாடளாவிய ரீதியில் திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படுவதில்லை என்றும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே திரிபோஷ வழங்கப்படுவதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 06 மாதங்கள் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ வழங்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவித்த நிறுவன அதிகாரிகள், அந்த வயதினருக்கான திரிபோஷ உற்பத்தியில் உரிய அளவுகோல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக திரிபோஷ தயாரிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சுகாதார அமைச்சினால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டதன் பின்னர், அந்த வயதினருக்கும் திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், விநியோகிக்கப்படும் திரிபோஷா, கஷ்டப் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய மக்களுக்கு சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கமைய, போசாக்குத் தேவையுடைய பிள்ளைகளை உரிய முறையில் இனங்கண்டு, தேவையுடைய பிள்ளைகளுக்கு திரிபோஷா விநியோகிக்கப்படுவது தொடர்பில் மேற்பார்வை செய்யப்படவேண்டும் எனத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பெருந்தோட்டத்துடன் தொடர்புடைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. மேலும், தோட்டங்களின் சில பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் (MOH) மூடப்படுவதால், தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தலைவர் சுட்டிக்காட்டினார். குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒருவர் தோட்டத்திலுள்ள சுமார் 3000 குடும்பங்களை மேற்பார்வை செய்யவேண்டியுள்ளதால், நடைமுறை ரீதியாக எழும் சிரமங்கள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்நாட்டில் தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 80% பேர் பெண்கள் எனவும், அவர்கள் காலை வேலைகளுக்குச் சென்ற பின்னரே பெரும்பாலும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் அந்தந்த வீடுகளுக்கு வருவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். அதனால், அவர்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகள் கிடைக்காமல் போகும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, அந்த நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வாக, அதிகபட்சமாக 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்ப சுகாதார சேவை அதிகாரியை ஏற்பாடு செய்வதன் மூலம் பயனுள்ள சேவையைப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்தோட்டங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மன உளைச்சல், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்று அதிகாரிகளிடம் குழு சுட்டிக்காட்டியது.
இந்த நாட்டில் சிறுவர் போசாக்கின்மை சரியான உணவு கிடைக்காமை காரணமாக மாத்திரம் ஏற்பட்டுள்ள நிலைமை மட்டுமல்லாது, தவறான உணவுப் பழக்கங்களும் அதற்குக் காரணமாக இருப்பதாக குழுவில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்பொழுது முன்பள்ளிச் சிறுவர்களுக்கு போசாக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் 60 ரூபாவை அதிகரிக்க முடிந்தால் வழங்கப்படும் போசாக்கு உணவை மேலும் மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பெருந்தோட்டங்களுக்குத் தனியான துணை ஊட்டச்சத்தை தயாரித்துள்ளதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்வேறு பிரதேசங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் அமுல்படுத்துவதுடன் அவை அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சிறுவர்களின் போசாக்கின்மையை தடுக்கும் வகையில், பல அரச நிறுவனங்கள் அதிகளவு பணம் செலவழித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய குழு, தேவையான ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒரு அரசு நிறுவனம் மூலம் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ உபுல் கலப்பத்தி மற்றும் குழுவின் தலைவரின் அனுமதியதுடன் கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2025-12-16
இலங்கை மின்சார சபைக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம்நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (டிச. 11) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள 316 வீதிகளுக்கும் 40 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், புகையிரதப் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும் போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் இங்கு வலியுறுத்தினார். அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்த புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.அத்துடன், இந்த அனர்த்த நிலைமையினால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், அந்தத் தொகையை கடனாகப் பெறாமல், ஒரு மானியமாகப் பெற முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடன் தொகையாக அந்த நிதியைப் பெறுவதன் மூலம் பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்தத் தொகையை மானியமாகப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்துக்கும் இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 252 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அந்தத் திருத்தப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையை அவர்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்பதால், மேலதிக கடன் அல்லது மானியம் எதுவும் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் மேலும் தெரிவித்தனர்.இதேவேளை, இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவுவில் தெரிவித்தனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 156 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பராமரிப்பு செய்யப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் மானியமாகப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதற்குத் தேவையான ஆதரவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார ஜயமஹ, அஜித் பி. பெரேரா மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோரும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
2025-12-09
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டன.குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.இதற்கு அமைய, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்களுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கைகள் ஆராயப்பட்டன.அத்துடன், பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வது மற்றும் அதிபர்களைச் சேவையில் இணைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ்.இராதாகிருஷ்ணன், ரோஹினி குமாரி விஜேரத்ன, அபூபக்கர் ஆதம்பாவா, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ உள்ளிட்டோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-12-09
2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றி ஆராய்வதற்கு குழுவின் விசேட கூட்டம்2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2025 செப்டெம்பர் 04ஆம் திகதி 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் மற்றும் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 2025 டிசம்பர் 03ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு கூடியது.இக்கூட்டம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஒழுங்குவிதி குறித்து கலந்துரையாடிய குழு, மருந்துகளைப் பதிவுசெய்யும் செயற்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் தெளிவுத் தன்மை என்பனவற்றை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து, 2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் குறித்தும் குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இத்திட்டத்திற்கு அமைய 2026ஆம் ஆண்டில் 3,508 கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது, 3,484 நிதிக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள், 1 சுற்றாடல் கணக்காய்வு, 12 விசேட கணக்காய்வுகளை உள்ளடக்கியுள்ளது.சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி கூட்டுறவுகள் என்பன தொடர்பான கணக்காய்வுகளும் 2026ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் நாயகத்தின் விடயதானத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்தும் குழு கரிசனை வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த பதில் கணக்காய்வாளர் நாயகம், தற்சமயம் இருக்கும் பணியாளர் எண்ணிக்கையைவிட 10%–15% பணியாளர்களுக்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். பிராந்திய அலுவலகங்கள் மூலம் முன்னோடி கணக்காய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை பெப்ரவரி மாத இறுதிவரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதன் பிறகு ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது வெளியிலிருந்து பணிக்கு அமர்த்துவதன் ஊடாகவோ பணியாளர்களுக்கான தேவை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.மேலும், வருடாந்த வேலைத்திட்டம் கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் படி எந்தவொரு மறுஆய்வு அல்லது பரிந்துரையும் சபாநாயகர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுப் பணிகளுக்கு வெளியாட்களுக்கு வழங்குவதை ஆதரிப்பதென்ற கருத்தை சபாநாயகரிடம் முன்வைப்பதற்கும் குழு இணங்கியது. இதற்கமைய, முன்னோடித் திட்டத்தை செயற்படுத்தி, 2026 பெப்ரவரி இறுதியில் அது பற்றிய அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிக் குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதேவேளை, அவசரகால அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் சீர்குலைந்த வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒதுக்கீடுகளை குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் வழங்குவதற்கான தீர்மானம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 05ஆம் திகதி விசேட கூட்டமொன்றைக் கூட்டியிருந்தது.2025 சனவாி மாதம் 01 ஆம் திகதியில் தொடங்கி 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் நிறைவடைகின்ற நிதியாண்டின் பயன்பாட்டிற்காக, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து அல்லது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தற்றுணிவின் பிரகாரம் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாவினை (ரூபா 50,000,000,000) விஞ்சாத மேலதிக ஒரு தொகை செலுத்தப்பட வேண்டுமென்றும், அத்தகைய தொகை செலவிடப்படுமென்றும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றியும் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2025-12-05
இலங்கையின் ஏற்றுமதித் துறை புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து உற்பத்தியை மேம்படுத்துதல், சந்தை அணுகல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கான ஆதரவு என்பவற்றை வலுப்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்தது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில், 2025.11.26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு கூடியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் ஏற்றுமதிகள் ஒரு தசாப்தமாக அண்ணளவாக 13 – 15 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாக இருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார். ஆனால் அண்மைய சீர்திருத்தங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தத் துறை அதிக வளர்ச்சியை நோக்கிச் செல்ல உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புதிய தேசிய மூலோபாயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பிரதான ஆலோசனைக் குழுக்களை மீண்டும் செயல்படுத்தியுள்ளதுடன், தொழிற்துறைக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் தெளிவான செயற்திறன் இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஏற்றுமதியாளர்களில் 78% ஆக உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பங்களிப்பை அதிகரிப்பது ஒரு முக்கிய முன்னுரிமை என்றும், எனினும் அவை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் ஒரு சிறிய பங்களிப்பை மாத்திரமே செய்கின்றன என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவிச் சேவைகள் மூலம் இந்தப் பங்களிப்பை கணிசமாக விரிவுபடுத்தும் இலக்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) எவ்வாறு கொண்டுள்ளது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய சர்வதேச தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருவது தொடர்பிலும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.அண்மைய ஆண்டுகளில் வலுவான செயற்திறனை எடுத்துக்காட்டும் வகையில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இலங்கை ஏற்றுமதியில் 16 – 17 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதற்கான பாதையில் உள்ளது என இங்கு தெரிவிக்கப்பட்டது. நாடு தனது அடுத்த மைல்கல்லான 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை நோக்கி நகரும்போது, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மற்றும் வலுவான தொழில் ஒத்துழைப்பு ஆகியவை இன்றியமையாததாக இருக்கும் என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்தது. இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே. சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பத்தி, (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன், சமிந்த ஹெட்டியாராச்சி, நிஷாந்த ஜயவீர, சந்தன சூரியாரச்சி, திலின சமரகோன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை (EDB) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

