2023-10-24
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்த கட்டத் திட்டம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்கு குழுவின் தலைவர் கௌரவ டீ. வீரசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குழுவின் தலைவரின் அழைப்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டார்.
குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குக் கமத்தொழில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கும் ஆதரவிற்கு தலைவர் நன்றி தெரிவித்ததோடு, மண் வளம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு செயற்படுத்த வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்வைத்தார்.
2020ஆம் ஆண்டு இயற்கை உரக் கொள்கையை உடனடியாக அமுல்படுத்தும் போது ஏற்பட்ட, நெருக்கடிகளை இனங்கண்டு, தவறுகளை சரிசெய்து, இயற்கை உர வேலைத்திட்டத்தை முன்கொண்டுசெல்வதற்கு செயற்பட வேண்டும் என கௌரவ மஹிந்த அமரவீர இதன்போது வலியுறுத்தினார். தற்போதைய யுத்த நிலைமை மற்றும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக உலக சந்தையில் உரங்களின் விலை அதிகரிப்புக் காரணமாக ஒரு கிலோகிராம் யூரியாவின் விலை 480 ரூபா எனவும் இந்த விலை மேலும் அதிகரிக்கலாம் என்பதால் இயற்கை உரங்களின் பயன்பாடு மேலும் பிரபலப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சரின் கருத்தாக இருந்தது.
இரசாயன உரங்களின் அளவை 25% - 50% வரை குறைத்து, இயற்கை மற்றும் உயிரியல் உரங்களைப் பயன்படுத்தி 20% - 30% வரை விளைச்சலை அதிகரிக்க முடியும் என்று வெளியான ஆய்வின் முடிவுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளதாக குழுவில் கலந்துகொண்ட விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைப் பேரவையின் ஒருங்கிணைப்பில் விவசாயத் திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம், தேசிய உரச் செயலகம், உர உற்பத்தியாளர்கள், புதிய உர வகைகளை அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகள், விவசாயிகள் பங்குபற்றுதலுடன் இணைந்து உள்ளூர் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய இயற்கை மற்றும் உயிரியல் உரங்களைப் பரவலாகப் பரிசோதிப்பதற்கு இதன்போது பரிந்துரைக்கப்பட்டதுடன் அவற்றின் விலை, உரங்களின் பயனர் நட்புரீதியான தன்மை, பயிர் விளைச்சலில் அதிகரிப்பு மற்றும் இலாபத்தன்மை ஆகியவற்றின் அடிப்படியில் விவசாயிகள் மத்தியில் உர வகைகள் பிரபலமடைகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
விவசாயத் திணைக்களத்தின் மூலம் புதிய உரப் பரிந்துரைகளைத் தயாரிப்பதற்கும், மண் ஆய்வுத் திட்டத்தைத் தொடர்வதற்கும், அதற்காக விவசாயத் திணைக்களத்தின் மண் ஆய்வகங்களை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தவும், விவசாய ஆலோசகர்கள் மற்றும் உதவிக் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மண் ஆய்வு வேலைத்திட்டங்களைத் விவசாயிகளுக்கு வசதியளிக்கும் வகையில் செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இயற்கை மற்றும் உயிரியல் உர ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக மாகந்துர நிலைபேறான விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை வலுப்படுத்தவும் இதன்போது முன்மொழியப்பட்டது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் காணப்பட்ட தவறுகள், சவால்கள் மற்றும் தடைகள் குறித்து சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்வதற்கும், இயற்கை உரங்களின் தரத்தைப் பாதுகாப்பதற்குத் தொடர்ச்சியான மதிப்பீட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் விருப்பம் தெரிவித்தார்.
.
உள்ளூர் இயற்கை மற்றும் உயிரியல் உர உற்பத்தியாளர்கள் SLS 1752 எனும் GMP சான்றிதழைப் பெறுவதை கட்டாயமாக்குவதன் மூலம் உரத் தரத்தை நீண்ட காலத்திற்குப் பேண முடியும் என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரம் பெற்ற 4 நிறுவனங்கள் எப்பாவல ரொக் பொஸ்பேட்டைப் பயன்படுத்தி SSP உற்பத்தியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது சுமார் 4000 மெற்றிக் தொன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். வருடாந்தம் 50,000 மெட்ரிக் தொன் TSP இறக்குமதி செய்ய செலவாகும் 8 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை மீதப்படுத்த முடியும் என்றும், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர SSP இல் உள்ள உலோகத்தின் அளவு இறக்குமதி செய்யப்படும் TSP இல் உள்ள உலோகத்தின் அளவை விட ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றும் குழுவில் புலப்பட்டது. அதற்கமைய, தற்போது ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும் எப்பாவல ரொக் பொஸ்பேட்டை நமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய SSP இற்கு மூலப்பொருளாக பயன்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பிரேரிக்கப்பட்டது.
விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியாக உருவாக்கப்பட்ட உயிரியல் உரங்கள் மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளில், வெற்றிகரமான உயர் விளைச்சல் கிடைத்துள்ளதுடன், அதற்கேற்ப, இயற்கை உரங்களின் வழக்கமான பயன்பாட்டின் போது 10 மெட்ரிக் தொன் போன்ற அதிக அளவில் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வசதி செய்யுமாறு பல்வேறு இயற்கை உர உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
துறைசார் மேற்பார்வைக்கு குழுவில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் கருத்துத்தெரிவிக்கும் போது, நெல் மற்றும் ஏனைய பயிர் வகைகளுக்கு ஒவ்வோர் பயிர்வகையின் கீழ் மற்றும் பயிரிடும் பிரதேசத்தின் அடிப்படையில் உரப் பரிந்துரைகளை வழங்க வேண்டும் எனவும் பொருத்தமான பொதிகள் (packages) தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ சி.பி. ரத்நாயக்க, கௌரவ எஸ்.எம். சந்திரசேன, கௌரவ கபில அத்துகோரல மற்றும் குழுவின் தலைவரின் அனுமதியில் கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ யூ.கே. சுமித் உடுக்கும்புற மற்றும் கௌரவ திஸ்ஸகுட்டியாராச்சி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், கமத்தொழில் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள், விவசாய அபிவிருத்தித் திணைக்களம், தேசிய உர செயலகம், இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைப் பேரவை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கண்டி தேசிய அடிப்படை கற்கைகள் நிருவகம் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், இயற்கை உரம் மற்றும் உயிரியல் உர உற்பத்தியாளர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-17
இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-17
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-15
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-14
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.