2023-10-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய (ஒக். 17) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அழைக்கப்பட்டது.
இதில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு அதிகார சபை குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயாளர் டபிள்யூ.எஸ் சத்தியானந்தா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, பொது முகாமையாளர் (பதில்) கே.ஏ.ஜனக மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது,
சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் 16 பதில் பதவிகளாகக் காணப்படுகின்றமை
அதிகாரசபையின் பொது முகாமையாளர் பதவி, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) உள்ளிட்ட 16 சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் பதில் பதவிநிலைகளாகக் காணப்படுகின்றமை குறித்து இங்கு தகவல்கள் வெளியாகின. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அப்பால் வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்களை அதிகார சபை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்புக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், பிரதித் தலைவரின் தலைமையில் உள்ளகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
பில்லியன் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்படும் இந்த அதிகாரசபையில் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) பதவி உள்ளிட்டவை கூட பதில் பதவிநிலைகளாகக் கணாப்படுகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகையில், பதில் பதவி நிலைகளாக உள்ள 16 பதவிகளுக்கும் 5 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர் என்றார். எனவே, இந்தப் பதவி நிலைகளுக்கு உள்ளக ரீதியில் தகுதி பெற்றவர்கள் மற்றும் தகுதி பெற்ற வெளியகத்தவர்களையும் ஆட்சேர்ப்புச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதற்கமைய மிகவும் வெளிப்படையான முறையைத் தயாரித்து அதனை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் பதவி நிலைகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
எவ்வித பிணையும் இன்றி ஏறத்தாழ 10,000 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டமை
இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் இருபது பில்லியன் ரூபாவை நெருக்கியிருப்பதாக இங்கு தெரியவந்தது. அத்துடன் கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றவர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் தெரியவந்தது.
பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்களின் ஆட்சியில் அதிகார சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார். 2011 ஆம் ஆண்டு, 'உபஹாரா' எனும் வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ், எந்தவொரு பிணையும் இன்றி கடன் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. அரச வங்கிகளினூடாக வழங்கப்பட்ட இந்தக் கடன்களால் அதிகாரசபையின் கணக்குகள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்தப் பணத்தை வசூலிப்பது கடும் சிக்கலாக மாறியுள்ளதாகவும், மேலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்யப்படவேண்டி இருப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் கடன் திட்டம் குறித்த சுருக்கமான அறிக்கையை விரைவில் குழுவிடம் வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். மேலும், நிறுவனத்தின் சொத்துக்களை அடமானமாக வைத்து இதுபோன்ற கடன் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க உடனடியாக சுற்றறிக்கை வெளியிடவும் திறைசேரியின் பிரதிச் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆண்டு அறிக்கைகளில் தாமதம்
2019ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அறிக்கைகளை அதிகார சபை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லையென்றும் இங்கு அதிருப்தி வெளியிடப்பட்டது. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் ஆண்டறிக்கைகளை 2023 நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னரும், 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னரும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் கடன் விபரங்களையும் திரட்டி கணினி மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை அமைக்கவும்
வீடுகளுக்காக வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள தரவுகளை ஒருங்கிணைக்கும் கணினிக் கட்டமைப்பொன்று இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது. எனவே, கூடிய விரைவில் ஒருங்கிணைந்த தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான கட்டமைப்பொன்று இல்லாததன் காரணமாகப் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தரவுக் கட்டமைப்பொன்றை அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்குள் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பாதியில் இடைநிறுத்தப்பட்ட 98000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குதல்
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த வீடுகளை கட்டி முடிக்க மேலும் 24000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 3750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் இதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சிபெறும் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
2015-2019 காலப்பகுதியில் 5296 பயிற்சி பெறும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏறத்தாழ 2800 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இவர்கள் களப்பணிக்காக அனுப்பப்பட்டதாகவும், 2148 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தேவைக்கு அதிகமாக இருக்கும் பயிற்சி பெறும் பணியாளர்களை நீக்கிவிட்டு தற்போது 167 பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று விசேட பரிந்துரைகள்
கடன் வசூலிக்கும் முறை, கடன் வழங்கும் முறை, காணிகளை அப்புறப்படுத்தல் முறை குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழு பரிந்துரைத்தது. மேலும் வெளிப்படைத்தன்மையுடன் காணி குறித்த ஆவணத்தை இணையதளத்திலோ அல்லது வேறு வழியிலோ பகிரங்கப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
மூன்று மாதங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஜகத் குமார, சுமித்ராரச்சி, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன் மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.
2026-03-31
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று 2026 மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.இந்த இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த இக்குழுவினர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரேர்னா ஸ்தல் பூங்காவில் மலரஞ்சலி செலுத்தினர். இவர்கள் லோக் சபாவின் கௌரவ சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றும் நடத்தப்பட்டது. இதில் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இக்குழுவினர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றுடனும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.மார்ச் 24ஆம் திகதி இலங்கைத் தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர். அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரசபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இத்தூதுக் குழுவினர் புதுடில்லி மெட்ரோ ரயில் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர்புற ஆளுகை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான நகர்புற அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து ஆய்வுசெய்யும் நோக்கில் புதுடில்லி மாநகரசபையின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றிய கலந்துரையாடலிலும் இவர்கள் ஈடுபட்டனர். அத்துடன், பாரிய அளவிலான நீர் விநியோக முகாமைத்துவம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்தனர்.மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இலங்கைத் தூதுக்குழுவினர் அடல் சேது பாலம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் நவி மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தளங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் பவர் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு, மகாராஷ்டிர மாநிலத்தின் கௌரவ முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதேவேளை, இலங்கைத் தூதுக்குழுவினர் மார்ச் 27ஆம் திகதி Gateway of India மற்றும் Elephanta Caves உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் மகாராஷ்டிர சட்டசபையின் கௌரவ சபாநாயகர் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி மற்றும் தொழில்துறைத் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.இந்தப் பாராளுமன்ற ஆய்வுப் பயணத்தில் இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பின் மூலம், இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தித் துறைகளில் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
2026-03-30
2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-03-30
விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஒழுங்குவிதி 2026 ஜனவரி 16ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் பங்களிப்புடன் அண்மையில் (மார்ச் 20) இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-03-30
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.