01

E   |   සි   |  

2023-10-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக பலவீனங்கள்! பல மோசடிகள் தொடர்பில் கோப் குழுவில் விசாரணை

  • சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளில் 16 பதவிகள் பதில் பதவிநிலைகளாகக் காணப்படுகின்றமை புலப்பட்டது – வெளிப்படையான முறையின் கீழ் நிரந்த நியமனங்களை விரைவில் வழங்கப் பரிந்துரை
  • 2011ஆம் ஆண்டு ஏறத்தாழ 10,000 மில்லியன் ரூபா எவ்வித பிணையும் இன்றி கடனாக வழங்கப்பட்டுள்ளன – விரிவான அறிக்கை கோரல்
  • கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 5 பில்லியன் ரூபா நஷ்டம்
  • 2019ஆம் ஆண்டு முதல் வருடாந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை
  • கடன்களை வசூலிப்பதற்காக நாடு முழுவதிலும் உள்ள தரவுகளைச் சேகரித்து கணனிக் கட்டமைப்பை விரைவில் உருவாக்கப் பணிப்புரை
  • பயிற்சி பெறும் பணியாளர்களாகப் பெருந்தொகையானவர்களை இணைத்துக் கொண்டமை குறித்து கேள்வி
  • கடன்களை வசூலித்தல் மற்றும் வழங்கும் முறைமை, காணிகளை அப்புறப்படுத்தல் முறைமை குறித்து விரிவான அறிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் வழங்கப் பரிந்துரை
  • மூன்று மாதங்களில் மீண்டும் அழைப்பு


பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய (ஒக். 17) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அழைக்கப்பட்டது.

இதில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு அதிகார சபை குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயாளர் டபிள்யூ.எஸ் சத்தியானந்தா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, பொது முகாமையாளர் (பதில்) கே.ஏ.ஜனக மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது,

சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் 16 பதில் பதவிகளாகக் காணப்படுகின்றமை

அதிகாரசபையின் பொது முகாமையாளர் பதவி, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) உள்ளிட்ட 16 சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் பதில் பதவிநிலைகளாகக் காணப்படுகின்றமை குறித்து இங்கு தகவல்கள் வெளியாகின. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அப்பால் வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்களை அதிகார சபை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்புக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், பிரதித் தலைவரின் தலைமையில் உள்ளகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

பில்லியன் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்படும் இந்த அதிகாரசபையில் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) பதவி உள்ளிட்டவை கூட பதில் பதவிநிலைகளாகக் கணாப்படுகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகையில், பதில் பதவி நிலைகளாக உள்ள 16 பதவிகளுக்கும் 5 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர் என்றார். எனவே, இந்தப் பதவி நிலைகளுக்கு உள்ளக ரீதியில் தகுதி பெற்றவர்கள் மற்றும் தகுதி பெற்ற வெளியகத்தவர்களையும் ஆட்சேர்ப்புச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதற்கமைய மிகவும் வெளிப்படையான முறையைத் தயாரித்து அதனை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் பதவி நிலைகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

எவ்வித பிணையும் இன்றி ஏறத்தாழ 10,000 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டமை

இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் இருபது பில்லியன் ரூபாவை நெருக்கியிருப்பதாக இங்கு தெரியவந்தது. அத்துடன் கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றவர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் தெரியவந்தது.

பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்களின் ஆட்சியில் அதிகார சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார். 2011 ஆம் ஆண்டு, 'உபஹாரா' எனும் வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ், எந்தவொரு பிணையும் இன்றி கடன் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. அரச வங்கிகளினூடாக வழங்கப்பட்ட இந்தக் கடன்களால் அதிகாரசபையின் கணக்குகள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்தப் பணத்தை வசூலிப்பது கடும் சிக்கலாக மாறியுள்ளதாகவும், மேலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்யப்படவேண்டி இருப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி, இந்தக் கடன் திட்டம் குறித்த சுருக்கமான அறிக்கையை விரைவில் குழுவிடம் வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். மேலும், நிறுவனத்தின் சொத்துக்களை அடமானமாக வைத்து இதுபோன்ற கடன் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க உடனடியாக சுற்றறிக்கை வெளியிடவும் திறைசேரியின் பிரதிச் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஆண்டு அறிக்கைகளில் தாமதம்

2019ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அறிக்கைகளை அதிகார சபை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லையென்றும் இங்கு அதிருப்தி வெளியிடப்பட்டது. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் ஆண்டறிக்கைகளை 2023 நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னரும், 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னரும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் கடன் விபரங்களையும் திரட்டி கணினி மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை அமைக்கவும்

வீடுகளுக்காக வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள தரவுகளை ஒருங்கிணைக்கும் கணினிக் கட்டமைப்பொன்று இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது. எனவே, கூடிய விரைவில் ஒருங்கிணைந்த தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான கட்டமைப்பொன்று இல்லாததன் காரணமாகப் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தரவுக் கட்டமைப்பொன்றை அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்குள் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

பாதியில் இடைநிறுத்தப்பட்ட 98000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குதல்

தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த வீடுகளை கட்டி முடிக்க மேலும் 24000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 3750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் இதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சிபெறும் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

2015-2019 காலப்பகுதியில் 5296 பயிற்சி பெறும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏறத்தாழ 2800 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இவர்கள் களப்பணிக்காக அனுப்பப்பட்டதாகவும், 2148 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தேவைக்கு அதிகமாக இருக்கும் பயிற்சி பெறும் பணியாளர்களை நீக்கிவிட்டு தற்போது 167 பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று விசேட பரிந்துரைகள்

கடன் வசூலிக்கும் முறை, கடன் வழங்கும் முறை, காணிகளை அப்புறப்படுத்தல் முறை குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழு பரிந்துரைத்தது. மேலும் வெளிப்படைத்தன்மையுடன் காணி குறித்த ஆவணத்தை இணையதளத்திலோ அல்லது வேறு வழியிலோ பகிரங்கப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

மூன்று மாதங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஜகத் குமார, சுமித்ராரச்சி, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன் மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.

 

1 9

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks