2023-10-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய (ஒக். 17) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அழைக்கப்பட்டது.
இதில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு அதிகார சபை குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயாளர் டபிள்யூ.எஸ் சத்தியானந்தா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, பொது முகாமையாளர் (பதில்) கே.ஏ.ஜனக மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது,
சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் 16 பதில் பதவிகளாகக் காணப்படுகின்றமை
அதிகாரசபையின் பொது முகாமையாளர் பதவி, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) உள்ளிட்ட 16 சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் பதில் பதவிநிலைகளாகக் காணப்படுகின்றமை குறித்து இங்கு தகவல்கள் வெளியாகின. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அப்பால் வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்களை அதிகார சபை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்புக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், பிரதித் தலைவரின் தலைமையில் உள்ளகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
பில்லியன் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்படும் இந்த அதிகாரசபையில் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) பதவி உள்ளிட்டவை கூட பதில் பதவிநிலைகளாகக் கணாப்படுகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகையில், பதில் பதவி நிலைகளாக உள்ள 16 பதவிகளுக்கும் 5 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர் என்றார். எனவே, இந்தப் பதவி நிலைகளுக்கு உள்ளக ரீதியில் தகுதி பெற்றவர்கள் மற்றும் தகுதி பெற்ற வெளியகத்தவர்களையும் ஆட்சேர்ப்புச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதற்கமைய மிகவும் வெளிப்படையான முறையைத் தயாரித்து அதனை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் பதவி நிலைகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
எவ்வித பிணையும் இன்றி ஏறத்தாழ 10,000 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டமை
இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் இருபது பில்லியன் ரூபாவை நெருக்கியிருப்பதாக இங்கு தெரியவந்தது. அத்துடன் கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றவர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் தெரியவந்தது.
பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்களின் ஆட்சியில் அதிகார சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார். 2011 ஆம் ஆண்டு, 'உபஹாரா' எனும் வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ், எந்தவொரு பிணையும் இன்றி கடன் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. அரச வங்கிகளினூடாக வழங்கப்பட்ட இந்தக் கடன்களால் அதிகாரசபையின் கணக்குகள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்தப் பணத்தை வசூலிப்பது கடும் சிக்கலாக மாறியுள்ளதாகவும், மேலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்யப்படவேண்டி இருப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் கடன் திட்டம் குறித்த சுருக்கமான அறிக்கையை விரைவில் குழுவிடம் வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். மேலும், நிறுவனத்தின் சொத்துக்களை அடமானமாக வைத்து இதுபோன்ற கடன் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க உடனடியாக சுற்றறிக்கை வெளியிடவும் திறைசேரியின் பிரதிச் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆண்டு அறிக்கைகளில் தாமதம்
2019ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அறிக்கைகளை அதிகார சபை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லையென்றும் இங்கு அதிருப்தி வெளியிடப்பட்டது. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் ஆண்டறிக்கைகளை 2023 நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னரும், 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னரும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் கடன் விபரங்களையும் திரட்டி கணினி மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை அமைக்கவும்
வீடுகளுக்காக வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள தரவுகளை ஒருங்கிணைக்கும் கணினிக் கட்டமைப்பொன்று இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது. எனவே, கூடிய விரைவில் ஒருங்கிணைந்த தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான கட்டமைப்பொன்று இல்லாததன் காரணமாகப் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தரவுக் கட்டமைப்பொன்றை அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்குள் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பாதியில் இடைநிறுத்தப்பட்ட 98000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குதல்
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த வீடுகளை கட்டி முடிக்க மேலும் 24000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 3750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் இதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சிபெறும் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
2015-2019 காலப்பகுதியில் 5296 பயிற்சி பெறும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏறத்தாழ 2800 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இவர்கள் களப்பணிக்காக அனுப்பப்பட்டதாகவும், 2148 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தேவைக்கு அதிகமாக இருக்கும் பயிற்சி பெறும் பணியாளர்களை நீக்கிவிட்டு தற்போது 167 பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று விசேட பரிந்துரைகள்
கடன் வசூலிக்கும் முறை, கடன் வழங்கும் முறை, காணிகளை அப்புறப்படுத்தல் முறை குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழு பரிந்துரைத்தது. மேலும் வெளிப்படைத்தன்மையுடன் காணி குறித்த ஆவணத்தை இணையதளத்திலோ அல்லது வேறு வழியிலோ பகிரங்கப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
மூன்று மாதங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஜகத் குமார, சுமித்ராரச்சி, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன் மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.
2026-02-16
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.
2026-02-13
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-02-13
2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-02-13
தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டன.