04

E   |   සි   |  

2023-09-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்தது - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன

  • நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன
  • இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்கவும் - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன
  • எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடலும் இன்றி கடன் மீள செலுத்துவதை கைவிட்டனர் - முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
  • நிதி வங்குரோத்து நிலையை அறிவித்தமை, நீண்ட காலமாக ஒரு சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சின் விளைவு - முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்

 

மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன தெரிவித்தார்.  

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் (செப். 15) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துக்களைப் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் 2022 செப்டம்பர் 01 மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வினவப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் பிரகாரம் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்குக் காணப்படுவதாகவும் பிழையான முறையொன்றுக்கு அமைய 202.04.12 ஆம் திகதி மத்திய வங்கியினால் இந்நாட்டில் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதனால் முழு நாடும் அசௌகரியத்துக்குட்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விசேடமாக 2022 இல் முதலாவது காலாண்டில் 3.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருந்ததாகவும், 2022 ஏப்ரல் 08 இல் 3.2 பில்லியன் டொலர் செலுத்தியிருந்ததுடன் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார். அதற்கமைய, ஏப்ரல் 12 வரை சுமார் 70 மில்லியன் டொலர் சீனாவுக்கு செலுத்தவேண்டி இருந்ததாகவும், இந்த நிலையில், ஏப்ரல் 12 இல் எந்தவொரு விபரமும் இல்லாமல் மத்திய வங்கியினால் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இது பிழையான செயற்பாடு எனவும், இது நடந்திருக்கக் கூடாது எனவும், அந்த நிலையில் தனியாரின் உதவியுடன் அந்தக் கடனை செலுத்த முடியுமாக இருந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.  

இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஒரு சிலர் இந்த நிலையில் இலங்கைக்கு சார்பாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால், இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2022 ஏப்ரல் 08 இல் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கருத்தை இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன் அண்மையில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி சட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தினால் சுமார் 70 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, நீண்ட காலமாக ஒரு சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சின் விளைவு எனத் தெரிவித்தார். புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்று முதலாவது தினத்திலே வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியதாகவும்  அவர் தெரிவித்தார். இது எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடல் இன்றி மேற்கொள்ளப்பட்ட கடன் மீள செலுத்துவதை கைவிடுவதன் அறிவிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, இதன்போது அஜித் நிவாட் கப்ரால் 3 முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிட எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய, 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற விதம் மற்றும் ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியடைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் போது 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை நிகழ்ந்த விதத்தை அஜித் நிவாட் கப்ரால் விரிவாக விளக்கியத்துடன் நேரம் போதாமை காரணமாக எதிர்வரும் தினத்தில் ஏனைய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்க அதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் கடினமான சூழ்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் தப்பியோடியதாக கருத்தொன்று காணப்படுவதாகவும் அது தொடர்பில் பதிலளிப்பது முக்கியமானது என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார். இதன்போது அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், 2022.04.03 ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் கூடி அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாகவும், இந்த சந்தர்ப்பத்திற்கு தன்னையும் அழைத்திருந்ததால் தனக்கும் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். எனினும் இதன்போது தப்பியோடுவது இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த விடயம் தொடர்பில் புரிதல் இருப்பது முக்கியமானது என  குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.பி. திசாநாயக்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 4

 



தொடர்புடைய செய்திகள்

2026-03-30

தொல்பொருளியல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-03-30

விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஒழுங்குவிதி 2026 ஜனவரி 16ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் பங்களிப்புடன் அண்மையில் (மார்ச் 20) இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-03-30

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்கவும் - சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-03-24

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முதல் தடைவையாகக் கூடியது

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் முதல் தடவையாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விசேட குழுவின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, தித்வா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதற்கு அமைய தேவையான அடிப்படை விழிப்புணர்வைப் பெறுவதற்காக, இந்த விசேட குழுவின் அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.அதேநேரம், இந்த விசேட குழு அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் செயற்படும் என்பதால் தேவைப்படும் சில சில தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட துறை தொடர்பில் நிபுணத்துவம் உள்ள அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அவ்ப்போது அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்த விசேட குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை குழுவின் முதலாவது கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதாவது 2026.06.19ஆம் திகதியாகும்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் விரைவில் கூட்டங்களை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர்  கூறினார். குழுவின் செயற்பாட்டு வரம்பு தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தித்வா புயல் போன்ற எதிர்கால நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இதில் உள்ளடக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியைப் பெற்று கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks