பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-09-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் (செப். 15) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துக்களைப் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் 2022 செப்டம்பர் 01 மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வினவப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் பிரகாரம் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்குக் காணப்படுவதாகவும் பிழையான முறையொன்றுக்கு அமைய 202.04.12 ஆம் திகதி மத்திய வங்கியினால் இந்நாட்டில் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதனால் முழு நாடும் அசௌகரியத்துக்குட்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விசேடமாக 2022 இல் முதலாவது காலாண்டில் 3.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருந்ததாகவும், 2022 ஏப்ரல் 08 இல் 3.2 பில்லியன் டொலர் செலுத்தியிருந்ததுடன் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார். அதற்கமைய, ஏப்ரல் 12 வரை சுமார் 70 மில்லியன் டொலர் சீனாவுக்கு செலுத்தவேண்டி இருந்ததாகவும், இந்த நிலையில், ஏப்ரல் 12 இல் எந்தவொரு விபரமும் இல்லாமல் மத்திய வங்கியினால் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இது பிழையான செயற்பாடு எனவும், இது நடந்திருக்கக் கூடாது எனவும், அந்த நிலையில் தனியாரின் உதவியுடன் அந்தக் கடனை செலுத்த முடியுமாக இருந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஒரு சிலர் இந்த நிலையில் இலங்கைக்கு சார்பாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால், இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2022 ஏப்ரல் 08 இல் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கருத்தை இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன் அண்மையில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி சட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தினால் சுமார் 70 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, நீண்ட காலமாக ஒரு சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சின் விளைவு எனத் தெரிவித்தார். புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்று முதலாவது தினத்திலே வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இது எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடல் இன்றி மேற்கொள்ளப்பட்ட கடன் மீள செலுத்துவதை கைவிடுவதன் அறிவிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக, இதன்போது அஜித் நிவாட் கப்ரால் 3 முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிட எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய, 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற விதம் மற்றும் ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியடைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் போது 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை நிகழ்ந்த விதத்தை அஜித் நிவாட் கப்ரால் விரிவாக விளக்கியத்துடன் நேரம் போதாமை காரணமாக எதிர்வரும் தினத்தில் ஏனைய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்க அதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கடினமான சூழ்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் தப்பியோடியதாக கருத்தொன்று காணப்படுவதாகவும் அது தொடர்பில் பதிலளிப்பது முக்கியமானது என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார். இதன்போது அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், 2022.04.03 ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் கூடி அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாகவும், இந்த சந்தர்ப்பத்திற்கு தன்னையும் அழைத்திருந்ததால் தனக்கும் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். எனினும் இதன்போது தப்பியோடுவது இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த விடயம் தொடர்பில் புரிதல் இருப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.பி. திசாநாயக்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

