01

E   |   සි   |  

2023-06-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2023.06.07 ஆம் திகதி நடைபெற்ற பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் எந்தப் பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாது

- பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் செய்யும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் கலந்துரையாடாமல் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாது எனப் பிரதமரும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் நியாயமாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ஜூன் 07ஆம் திகதி தலைமையேற்று நடத்தியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் காலதாமதம் அடைந்திருப்பதால் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டாலும், சில நிறுவனங்களில் பணிகள் முறையாக நடைபெறாமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விவாதிக்கப்பட்டது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, தற்காலிக பணிகளை மேற்கொள்வதில், இந்த ஊழியர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இணைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் அருகிலுள்ள நிறுவனத்திற்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்நிலையை மாற்றுவதற்கு தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இல்லாவிட்டால், வேட்புமனுவை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள் தமது தேர்தல் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடுவதில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இது தொடர்பான சட்டமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து சட்டமூலம் தொடர்பான பணிகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது உள்ளூராட்சி ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலையிட வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஊடாக பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உரிய இடமாற்றங்கள் வழங்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தினார். அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.

திஸ்ஸமஹாராம முன்னாள் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக உடனடி அறிக்கை வரவழைக்கப்பட்டு, தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப இடமாற்றம் கோரப்பட்டதாக கடிதமும் வந்துள்ளமை இங்கு தெரியவந்தது. இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது நியாயமானதல்ல எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வெயாங்கொடை பிரதேச சபை உள்ளடங்கலாக பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தும் விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற 85 கோரிக்கைகள் இருப்பதும் தெரியவந்தது. அதன்படி பணிகளை விரைவுபடுத்த தேவையான அறிவுரைகளைப் பிரதமர் வழங்கினார்.

2020 பட்டதாரி பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதியான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாதவர்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார். கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும் என பிரதமரின் செயலாளர் தலைமையிலான ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுமார் 30,000 பலநோக்கு திணைக்கள ஊழியர்களை தற்போது உள்ள பதவிகளில் அமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியது. தற்போது இவ்வாறான 9700 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

 

1 2

3 4

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks