01

E   |   සි   |  

2023-06-01

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால.த சில்வா

இலங்கைக்கு அதிக நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால.த சில்வா தெரிவித்தார்.

அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால.த சில்வா தலைமையில் 24.05.2023ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கு ஏற்ற வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய லசார்ட் நிறுவனத்துக்கு இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டுக்கு அதிக நன்மை ஏற்படக் கூடிய வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. வெளிநாடுகளில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் தரையிறங்குவதற்கான உரிமை இலங்கையிடமே இருப்பதால் இது போன்ற பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே மறுசீரமைப்பை மேற்கொள்ளும் போது ஏற்படுத்தக் கூடிய கூட்டாண்மைகள் குறித்த பல தெரிவுகள் உள்ளன. இவற்றில் மிகவும் நன்மையான முறைமையொன்று பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மறுசீரமைப்பது தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் திறைசேரியால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் எவரும் இல்லாத தனியான நிபுணர்கள் குழுவொன்று உள்ளது. இந்தக் குழு லசார்ட் நிறுவனத்துடன் இணைந்து எந்த முறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகிறது. எனவே அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்த முடிவுகளை குறித்த குழுவே எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம், யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும், இதன்கான கடன்வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில், வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம், ஜய கண்டேனர் டர்மினல்ஸ் லிமிடட் நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் கம்பனி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றின் செயலாற்றுகை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளுக்கும் இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன், குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருந்த 2010ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2 ஒழுங்குவிதிகளும், 1971ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான 13 ஒழுங்குவிதிகளும், 1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பனவும் இங்கு அங்கீகரிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரேமலால் ஜயசேகர, கௌரவ அசோக பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஜே.சி.அலவத்துவல, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ ஜகத்குமார சுமித்திராராச்சி மற்றும் கௌரவ மிலான் ஜயதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

1 3

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-29

காலநிலை மாற்றத்தின் மத்தியில் யானைகள் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது

மோசமான காலநிலை மாற்றத்தினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பது தொடர்பில் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.குறித்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இதுபற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.குறிப்பாக எல்-நினோ மற்றும் லா–நினோ காலநிலையினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இது பற்றி விளக்கமளித்தனர். காலநிலை மாற்றத்தினால் வனஜீவராசிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் முதற் கட்டமாக யானை மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்துக் கவனம் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இவ்விடயத்தை விரிவாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பரிந்துரைகளை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.காலநிலை தொடர்பான நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். யானை மனிதன் மோதல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, ரியாஸ் பாரூக், சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். 


2026-05-29

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த கட்டளைக்கு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட  பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள கட்டளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2026 ஜனவரி 5ஆம் திகதிய 2470/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டளை 2026.05.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் ஊடாக குற்றவியல் கருமங்களில் இருதரப்பும் பரஸ்பர நீதி ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, பயங்கரவாாதத்துடன் தொடர்பான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காகவுள்ள நிதிகளைச் குற்றச் செயல்களின் வரும்படிகள் மற்றும் சாதனங்களையும் கண்டறிதல், தடை செய்தல், இழப்பித்தல் மற்றும் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்தல், புலனாய்வு செய்தல், வழக்குத் தொடருதல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான குற்றவியல் கருமங்களில் ஒத்துழைப்பதனூடாகவும் பரஸ்பர சட்ட உதவியளிப்பதனூடாகவும் பொருத்தனையின் இரு திறத்தவர்களின் பங்கும் மேம்படுத்தப்பட்ட பயனுறுதியுடன் சம்பந்தப்பட்டதாகின்றது.நீதித்துறையில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டின் பின்னர் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையினால் இது வரையில் 2647 வெற்றிடங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் நீதித் துறையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இவற்றுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks