logo

E   |   සි   |  

2023-04-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அனைத்து அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை விரைவாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவும் - பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை தாமதிக்காமல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது அந்நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பு என்பதால், அந்த அறிக்கைகளை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2023.03.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஒரு சில நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை அனுமதிக்காக ஆலோசனைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் ஒரு சில அறிக்கைகள் 2018, 2019 ஆகிய ஆண்டுகளுக்குரியது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஆண்டறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். இவ்வாறு பழைய அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியம் என்றாலும், சம்பந்தப்பட்ட ஆண்டுக்குரிய அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிப்பது மிகவும் பயனுள்ளது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய உரிய ஆண்டறிக்கைகளை தாமதமின்றி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் வேலைத்திட்டம் தொடர்பான நியமனங்கள் வழங்குவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே நியமனம் வழங்கவேண்டும் எனவும், அதற்கான பரிந்துரைகளை வேறு தரப்பினர் வழங்கக்கூடாது எனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கமைய, உரிய பிரதேசங்களிலேயே அந்த நியமனங்களை வழங்க மேற்கொண்ட தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், ஒரு சில மாவட்டங்களில் பிரதேச செயலகப் பிரிவுகளில் அலுவலகங்களை அதிகரிக்கும் தேவை, கிராம சேவகர் பிரிவொன்றை நிர்ணயிக்கும் போது கருத்திற்கொள்ளும் விடயங்கள், அரச சேவையில் ஆங்கில மொழிக் கல்வி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவை தேர்ச்சி பெறச்செய்வது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேபோன்று, ஒரு சில மாவட்டங்களில் காணப்படும் நகர சபைகள் சிலவற்றை மாநகர சபைகளாக மாற்றுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புற, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக்க பிரியந்த, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ பிரசன்ன ரன்வீர, கௌரவ சாந்த பண்டார, கௌரவ டி.பீ. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜே.சீ. அலவத்துவல, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ சிந்தக அமல் மாயாதுன்ன, கௌரவ சுமித் உடுக்கும்புற, கௌரவ திஸகுட்டி ஆரச்சி, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ சம்பத் அத்துகோரல, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி ஆகியோரும் இக்குழுவில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks