பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-03-14
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ (காலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கடந்த மார்ச் 08, 09 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் கூடியது. உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் பிரதானிகள் உள்ளிட்ட உயர் கல்வித் துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் இதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
உயர்கல்வித் துறையின் விடயங்களைக் கையாழ்வதற்குத் தனியான மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை குறித்து இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
உயர்கல்விக்கான வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அடிப்படைக் கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுவதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி தொடர்பான அனைத்து விடயங்கைளையும் கையாழ்வதற்கும் தனியான மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும், இவ்வாறு அமைக்கப்படக் கூடிய அமைப்பின் ஒரு பிரிவு அரசாங்கப் பல்கலைக்கழக விடயங்களைக் கையாள முடியும் என்றும், மற்றைய பிரிவு பல்கலைக்கழகங்களுக்கான பதிவுகள், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்கள் குறித்த விடயங்களைக் கையாள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும் இது குழுவின் இறுதி முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது, மற்றும் அரசு அல்லாத உயர்கல்வித் துறைக்குத் தேவையான கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தேவையான அமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும்போது மேலதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். உயர்கல்வியை விஸ்தரிப்பதற்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்குத் தனியான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையையும் அவர் இங்கு வலியுறுத்தினார். உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அவர் இக்குழு முன்னிலையில் முன்வைத்தார்.
இது தவிரவும், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி அமைச்சின் அரசு அல்லாத உயர்கல்வித் துறைப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் விசேட ஆலோசகர் உள்ளிட்ட பலரும் குழு முன்னிலையில் தமது பரிந்துரைகளை முன்வைத்தனர்.
இந்நாட்டில் இயங்கிவரும் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் குழு தீர்மானித்தது.
இந்தக் குழுவின் அமர்வுகளில் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கௌரவ சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



