logo

E   |   සි   |  

2023-03-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நாட்டில் தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் முன்மொழிவை சமர்ப்பிக்கவும் - நிர்வாக சேவைச் சங்கத்துக்கு பாராளுமன்ற விசேட குழு அறிவிப்பு

இந்நாட்டில் தொழில்முயற்சிகள் மற்றும் முதலீடுகளை ஆரம்பிக்கும் போது பிரதேச செயலகம் உள்ளிட்ட பொதுநிர்வாகக் கட்டமைப்பில் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு 'இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு', இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்துக்கு அண்மையில் (28) அறிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் அண்மையில் (பெப். 28) பாராளுமன்றத்தில் கூடிய இந்தக் குழு முன்னிலையில் இலங்கை நிர்வாக சேவைச் சங்கம், இலங்கை கணக்காய்வாளர் சேவைச் சங்கம், இலங்கை திட்டமிடல் சேவைச் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கமைய, இந்நாட்டில் புதிய தொழில்முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆரம்பிக்கும் போது பொதுநிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பில் முதலீடுகள் அல்லது தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு செய்யவேண்டிய நடவடிக்கைகள் வினைத்திறன்மிக்கதாக இல்லை என்பதால் பல்வேறு முதலீட்டு மற்றும் வணிக சந்தர்ப்பங்கள் நாட்டுக்கு கிடைக்காமல் போவதாக குழு சுட்டிக்காட்டியது. மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிர்வாகக் கட்டமைப்பிலுள்ள முகாமைத்துவ கொள்கைகள் நிகழ்காலத்துக்கு பொருத்தமானதாக தயாரிக்கப்பட வேண்டும் என குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

அதற்கமைய, அரச கொள்கைத் தயாரிப்பின் போது இது தொடர்பான நிலையான புதிய கொள்கைகளை தயாரிப்பதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தற்பொழுது நாட்டில் 332 பிரதேச செயலகங்கள் காணப்படுவதாகவும், அவற்றின் செயற்பாடுகளை கண்காணிக்கும் முறைமையொன்று இல்லாமை கடுமையானதொரு குறைபாடு என இங்கு கலந்துரையாடப்பட்டது. முதலீட்டாளர்களின் வசதி கருதி முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து துரித சேவையை வழங்க ஒவ்வோர் மாவட்ட செயலகங்களிலும் பிரத்தியேகமான அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது. அதேபோன்று, அந்த அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுநிர்வாகக் கட்டமைப்பில் மறுசீரமைப்புகள் மேற்கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய நிர்வாக சேவைச் சங்கம், எதிர்காலத்தில் நிர்வாக மறுசீரமைப்புகளுக்காக பிரத்தியேகமான அமைச்சொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரேரித்தது.

அதேபோன்று, அனைத்து பிரதேச செயலாளர்களையும் அழைத்து அவர்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்துவது தொடர்பிலும் இதன்போது முன்மொழியப்பட்டது.  

பிரதேச செயலகங்கள் ஊடாக முதலீடுகளுக்கான காணிகளை பெறும்போது ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரியளவில் காணி மோசடிகள் இடம்பெறுவதாகவும் அது தொடர்பில் விரைவாகத் தலையிடுவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய முதலீடுகள் தொடர்பிலும், முதலீட்டுத்துறையில் இந்நாட்டில் காணப்படும் சாத்தியக்கூறுகள் எவை என்பதை கண்டறிவதற்கும் கவனம் செலுத்துவதன் அவசியம் பற்றி இலங்கை கணக்காய்வாளர் சங்கத்தினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks