பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-12-13
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நலீன் பெர்னாந்து தெரிவித்தார். அண்மையில் (டிச. 05) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திறந்த சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இதன்படி, திறந்த சந்தையில் ஜூலை மாதம் ஒரு கிலோகிராம் பருப்பு 595 ரூபாவாகவும், டிசம்பரில் லங்கா சதொச நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் பருப்பு 389 ரூபாவாகக் குறைந்திருப்பதுடன், திறந்த சந்தையில் 410 ரூபாவாக இருந்த 1 கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் 1ஆம் திகதியாகும் போது லங்கா சதொச நிறுவனத்தின் விலை 265 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், 280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை 225 ரூபாவில் இருந்து 198 ரூபாவாகவும் குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக சந்தைகளைக் கண்காணிக்குமாறும், சோதனைகளை நடத்துமாறும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தர்.
அதற்கு மேலதிகமாக, நியாயமான சந்தை முறைமையை நிறுவும் நோக்கில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாகவும் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட முழுநேர உறுப்பினர்களின் தகுதிகளை இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாகவும், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிரான பாவனையாளர்களின் முறைப்பாடுளை விசாரிக்கும் முறையை வினைத்திறனாக்கும் பிரேரணைகள் இதில் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மற்றும் வலுவான முறையில். புதிய சரத்துக்கள் உள்ளிட்ட திருத்தச்சட்டமூலத்தை அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டு இளைஞர்களை கூட்டுறவுத் துறைக்கு ஈர்க்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இளம் தொழில்முயற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களை உற்பத்தி செயல்முறைக்கு வழிநடத்தும் வகையில் நிவாரணத் திட்டங்களை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.கூட்டுறவுச் சங்கங்களின் வலுவூட்டல் மூலம் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தைத் தற்பொழுது இலாபமீட்டும் நிறுவனமாக நடத்திச்செல்ல முடிந்திருப்பதாகவும், நாட்டுக்குத் தேவையான அமோனியம் நைட்ரஜனை இறக்குமதிசெய்து விநியோகிக்கும் உரிமை எஸ்.ரி.சி நிறுவனத்திடம் காணப்படுகின்றபோதும், இந்தியாவில் அமோனியம் நைட்ரஜன் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டமையால் நாட்டில் வெடிபொருட்களை நம்பியுள்ள தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்நிறுவனத்தின் ஊடாக அமோனியம் நைட்ரஜன் இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது பிரதேச செயலக மட்டத்தில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், உரிய அடையாளப்படுத்தலின் பின்னர் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனம் பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மஹாபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சிறை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தக் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ வியாழேந்திரன், கௌரவ காதர் மஸ்தான், கௌரவ. ரோஹன திஸாநாயக்கவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



