01

E   |   සි   |  

2022-12-13

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நலீன் பெர்னாந்து

  • இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தை இலாபகரமாக நடத்திச் செல்ல முடிந்துள்ளது.
  • நியாயமான சந்தை அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை


சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நலீன் பெர்னாந்து தெரிவித்தார். அண்மையில் (டிச. 05) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திறந்த சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில்,  நவம்பர் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இதன்படி, திறந்த சந்தையில் ஜூலை மாதம் ஒரு கிலோகிராம் பருப்பு 595 ரூபாவாகவும், டிசம்பரில் லங்கா சதொச நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் பருப்பு 389 ரூபாவாகக் குறைந்திருப்பதுடன், திறந்த சந்தையில் 410 ரூபாவாக இருந்த 1 கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் 1ஆம் திகதியாகும் போது லங்கா சதொச நிறுவனத்தின் விலை 265 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், 280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை 225 ரூபாவில் இருந்து 198 ரூபாவாகவும் குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக சந்தைகளைக் கண்காணிக்குமாறும், சோதனைகளை நடத்துமாறும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தர்.

அதற்கு மேலதிகமாக, நியாயமான சந்தை முறைமையை நிறுவும் நோக்கில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாகவும் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட முழுநேர உறுப்பினர்களின் தகுதிகளை இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாகவும், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிரான பாவனையாளர்களின் முறைப்பாடுளை விசாரிக்கும் முறையை வினைத்திறனாக்கும் பிரேரணைகள் இதில் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மற்றும் வலுவான முறையில். புதிய சரத்துக்கள் உள்ளிட்ட திருத்தச்சட்டமூலத்தை அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு இளைஞர்களை கூட்டுறவுத் துறைக்கு ஈர்க்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இளம் தொழில்முயற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களை உற்பத்தி செயல்முறைக்கு வழிநடத்தும் வகையில் நிவாரணத் திட்டங்களை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.கூட்டுறவுச் சங்கங்களின் வலுவூட்டல் மூலம் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தைத் தற்பொழுது இலாபமீட்டும் நிறுவனமாக நடத்திச்செல்ல முடிந்திருப்பதாகவும், நாட்டுக்குத் தேவையான அமோனியம் நைட்ரஜனை இறக்குமதிசெய்து விநியோகிக்கும் உரிமை எஸ்.ரி.சி நிறுவனத்திடம் காணப்படுகின்றபோதும், இந்தியாவில் அமோனியம் நைட்ரஜன் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டமையால் நாட்டில் வெடிபொருட்களை நம்பியுள்ள தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்நிறுவனத்தின் ஊடாக அமோனியம் நைட்ரஜன் இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது பிரதேச செயலக மட்டத்தில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், உரிய அடையாளப்படுத்தலின் பின்னர் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனம் பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சிறை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தக் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ வியாழேந்திரன், கௌரவ காதர் மஸ்தான், கௌரவ. ரோஹன திஸாநாயக்கவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks