2022-11-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கடந்த இரண்டு கிரிக்கட் போட்டிகளிலும் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிக கருணாரத்ன கிரிக்கட் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் அவரை தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்காமை தொடர்பில் கிரிக்கட் தேர்வுக்குழுவிடம் எழுத்துமூல விளக்கமொன்றை கோருமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது மதசார் குழுவொன்றுக்கு சொந்தமான வீரர்களை மாத்திரம் தேர்ந்தெடுப்பதாக ஒரு கருத்துக் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் திறமைகளை வெளிக்காட்டிய கிரிக்கட் வீரர் சாமிக கருணாரத்னவைத் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்காமை குறித்த மதக் கொள்கைக்கு இணங்காமையே காரணம் என ஒரு கருத்து இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் (நவ. 22) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையில் வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 800 டொலர் நிதி ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அல்லாத தரப்பினரும் இந்த வசதியின் கீழ் சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோன்று, T20, T10 மற்றும் LPL போட்டிகளை மேற்கொள்ளும் போது நிதிப் பயன்பாடு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலொன்று விளையாட்டு அமைச்சின் தலையீட்டில் நடைபெற வேண்டும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பெல்வூட் நுண்கலைக் கல்லூரியை பெல்வூட் ஈஸ்தடிக் அகடமியாக NVQ 6 சர்வதேச அங்கீகாரத்துடன் சான்றிதழ் வழங்க அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் பாடங்களுக்கு மேலதிகமாக நடிப்பு, மாறுவேடம், தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு தொழிநுட்பம் போன்ற பாடங்களையும் புதிதாக இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கான அனைத்துத் தொழிநுட்ப உபகரணங்களுடன் கூடிய கலையரங்குத் தொகுதியொன்றை நிர்மாணித்து 2023 இல் அதனை ஹொலிவூட் மற்றும் பொலிவூட் நிலைமைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாவதும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு, பெல்வூட் நிறுவனத்தின் மாணவர்கள் தற்பொழுது முகங்கொடுக்கும் சிக்கல்கள் பல காணப்பட்டதாகவும், விசேடமாக முழுநேர அதிபர் இல்லாமை, உணவுப் பிரச்சினை, போக்குவரத்து சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் உறுப்பினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
பெல்வூட் நுண்கலைக் கல்லூரி அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் உள்ள 4 மாடிக்கட்டடம் 2015 - 2019 காலப்பகுதியில் இருந்த தலைவரினால் உடைத்து அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவாகக் கண்டறிந்து அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இலங்கையில் காணப்படும் சர்வதேச தரம் வாய்ந்த ஒரே ஒரு ஹொக்கி விளையாட்டரங்கின் மைதானத்தை முறையாகப் பராமரிக்காமை காரணமாக உரிய தரத்தில் இல்லாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அதனைப் புனரமைத்து ஹொக்கி விளையாட்டுக்காக பேணுவதன் அவசியம் குறித்து உறுப்பினர்கள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர். 50% நிதிப் பங்களிப்பை இலங்கை ஏற்பதன் அடிப்படையில் ஆசிய ஹொக்கி சம்மேளனத்தினால் அதனை அபிவிருத்தி செய்ய இணங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று, தியகம விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதை சேதமடைந்துள்ளமை குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், அதனால் சுகததாச விளையாட்டரங்கு அல்லாமல் பயிற்சி பெறுவதற்கு ஓடுபாதையொன்று இல்லை என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விளையாட்டரங்கு முறையாகப் பராமரிக்கப்படாமையினால் மழை காலத்தில் நனைவதால் சேதமடைந்துள்ளமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஜப்பானிய உதவி மற்றும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைப் புனரமைப்பு செய்வதற்கு ஜப்பானிய தூதரகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார். அதேபோன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈட்டப்படும் வருமானத்தை அதன் பராமரிப்புக்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைகள் செயற்படாமையால் மாகாண மற்றும் பிரதேச விளையாட்டுக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் அது தேசிய ரீதியில் விளையாட்டு வீரர்கள் உருவாகுவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இது தொடர்பிலும் அமைச்சரின் கவனத்தை செலுத்துமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். நாடு பூராகவும் காணப்படும் பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆரம்பிக்க வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு சங்கங்களை குழுவில் அழைத்து கலந்துரையாடுவது தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் குழுவின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ரோஹன திசாநாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, காவிந்த ஜயவர்தன, நலின் பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, ஜகத் சமரவிக்ரம, வீரசுமன வீரசிங்க, சம்பத் அத்துகோரல, சிந்தக்க மாயாதுன்ன, வருண பிரியந்த லியனகே, மொஹமட் முசம்மில், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2026-07-21
இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தல்களை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுஇயலாமையுடைய நபர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சே அவர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை நிறுவியமைக்காக பாராளுமன்றத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன், இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய அபிவிருத்தியை அனைத்து துறைகளிலும் தேசிய முன்னுரிமையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சட்ட மறுசீரமைப்பு, அணுகல் வசதிகள், கல்வி, வேலைவாய்ப்புகள், சமூக மட்டத்திலான புனர்வாழ்வு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் நிறுவன ரீதியான ஆதரவையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி பெகோனா அரெலானோ அவர்கள் குறிப்பிடுகையில், விசேடமாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இயலாமையுடைய சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய கொள்கைகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ள கண்காணிப்புப் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், UNFPA, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர் விவகாரங்கள், கல்வி, இயலாமை நிலையிலுள்ள நபர்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்தைத் தெளிவுபடுத்தினர்.கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலமும் சைகை மொழி தொடர்பான சட்டமூலமும் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டமூலங்களை 2026 செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், அரசாங்க நிறுவனங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல், ஊனமுற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்த வருடத்திற்குள் ஊனமுற்ற சிறார்களுக்காக பத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேபோன்று, அரசாங்க அமைச்சுக்களின் ஊடாக ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், தேசிய ஊனமுற்றோர் தரவுத் தொகுதியை நிறைவு செய்தல் மற்றும் ஊனமுற்ற நபர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை ஊக்குவிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துதல் உள்ளிட்ட எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.கலந்துரையாடலின் நிறைவில், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், ஒன்றியத்தின் கருப்பொருளான “தடையற்ற சமூக வாழ்க்கை” என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்வில், ஒன்றியத்தின் கௌரவ பிரதித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க மற்றும் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், UNFPA, UNICEF, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-20
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது. இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, சட்டத்தரணி சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-07-20
நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.