logo

E   |   සි   |  

2022-11-23

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஊழல் எதிர்ப்பு உத்தேச சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் இலஞ்ச, ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழு

  • ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை

 

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (நவ. 21) கவனம் செலுத்தியது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியைத் தடுப்பதற்கு உரிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி அதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்கும் பொறிமுறையை உருவாக்கத் தவறியமையாலேயே, நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து இலஞ்ச, ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மீது சுமத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குழு முன்னிலையில் விளக்கமளித்தார். இந்த சட்டவரைபில் முன்மொழியப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடியதாக இருப்பதுடன், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை ஆணைக்குழு தனது முன்னேற்றம் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நீதி, தடயவியல் கணக்காய்வு, பொறியியல், சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர சேவைகள், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 20 வருடத்துக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டவர்களை நியமிப்பதற்கும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆணையாளர்கள் அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அத்துடன், இந்த ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீடு என்பன நேரடியாகப் பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான விடயங்களைக் கையாழ்வதற்கும் தனியானதொரு இயக்குனரகமொன்றை அமைப்பதற்கும் இந்த வரைபில் முன்மொழியப்பட்டிருப்பதுடன், அரசாங்கத் துறையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளுக்கு அப்பால் ஊழல், இலஞ்சம் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படும் துறைகளில் உள்ளவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியை வெளியிட முடியும்.  அரசாங்கத்தின் முக்கியமான திணைக்களங்கள் இந்த அலுவலகத்துடன் ஒன்லைன் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விசாரணைகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மாத்திரமன்றி தனியார் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மற்றும் விளையாட்டுத் துறையில் இடம்பெறுகின்ற இலஞ்ச, ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

 இதேவேளை, குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் பற்றியும் இக்குழுவில் அமைச்சர் விளக்கமளித்தார். முறையான நடவடிக்கையின் கீழ் சாதாரண வாடகை மற்றும் வெளியேற்றும் வழக்கு நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற சட்ட தாமதத்தைக் கட்டுப்படுத்தி குறுகிய காலத்திற்குள் குத்தகை கொடையாளருக்கு நிவாரணம் வழங்குவது இச்சட்டமூலத்தின் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குத்தகை கால எல்லையைத் தாண்டி குத்தகை வளவுகளில் தங்கியிருக்கும் குத்தகை குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு முறையான நடவடிக்கையின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மேற்படி வளவுகள் வாடகை சட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்ளாது வழக்குகளை நிறைவுசெய்ய பல வருடங்கள் செல்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் குத்தகை கால எல்லையின் இறுதியில் குத்தகைக்குப் பெற்றுள்ளவர் குறித்த வளவிலிருந்து வெளியேறுவதை நிராகரித்துள்ள போதிலும், யாராயினுமொரு குத்தகை கொடையாளி ஆதனத்தைக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உத்தேச சட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 12ஆம் திகதிய 2301/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளையும் இங்கு ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ காதர் மஸ்தான், கௌரவ டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷனயாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஏ.எம்.எம்.அதாவுல்லா, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, நீதி அமைச்சின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் சமூகமளித்திருந்தனர்.

 

1 3

9

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks