01

E   |   සි   |  

2022-07-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சியாம் நிறுவனத்தின் கேஸ் விலைமனுக்கோரல் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் அதிக விலையில் கேஸ் கொள்வனவு செய்வது தொடர்பில் விசாரணை செய்யவும் – கோப் குழு பணிப்புரை

  •  இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் கேஸ் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலரில் கேஸ் கொள்வனவு செய்யப்படாமை குறித்து உடனடியாக ஆராயவும் பணிப்புரை
  •  பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் நியமனம் நிதி அமைச்சின் ஊடாக மேற்கொள்வதை விட தாய் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்வதற்கும் பணிப்புரை

 

சியாம் கேஸ் நிறுவனத்திடம் ஒரு மெற்றிக்தொன் கேஸ் 96 அமெரிக்க டொலர் வீதம் குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் அடிப்படையில் (Term Tender) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை வழங்கிய தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டு, ஒரு மெற்றிக் தொன் 129 அமெரிக்க டொலர் வீதம் ஓமான் நிறுவனமொன்றிடமிருந்து கேஸைக் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் நேற்றுமுன்தினம் (05) பணிப்புரை விடுத்தார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம், லிற்றோ கேஸ் டேர்மினல் லங்கா (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியன நேற்றுமுன்தினம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதமாகும்போது கேஸ் கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், 280,000 மெற்றிக் தொன்னுக்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாகவும் இதற்காக 3 கேஸ் விநியோகஸ்தர்கள் முன்வந்ததாகவும் இங்கு புலப்பட்டது. இதில் சியாம் கேஸ் நிறுவனம் ஒரு மெற்றிக்தொன்னுக்கு 96 அமெரிக்க டொலர் வீதம் குறைந்த விலையில் கேள்விப்பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு அமைய குறித்த நிறுவனத்துக்கு இதனை வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இருந்தபோதும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கேள்விப்பத்திரம் கோரலின் போது வழங்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய லிற்றோ நிறுவனத்துக்கு கடன் உறுதிக் கடிதத்தை (Standby Letter of Credit / SBLC) வழங்க இந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு முடியாமல் போனமையால் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் கேள்விப்பத்திரம் கோரல் முறையின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய கடன் உறுதிக் கடிதத்தை சமர்ப்பிக்கத் தவறியமையால் எரிவாயுவை வழங்க நிறுவனம் தயக்கம் காட்டியதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் காலதாமதத்தினால் ஏற்பட்ட சூழ்நிலைக்குத் தீர்வாக சியாம் நிறுவனத்திடமிருந்து  இரண்டு வாரங்களுக்கு அவசியமான எரிவாயுத் தொகையான 15,000 மெற்றின்தொன்னை அவசர கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும், 6600 மெற்றிக்தொன் எரிவாயுவை மாத்திரமே விநியோகிக்க முடியும் என அவர்கள் பதில் வழங்கியதால் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லையென்றும் இங்கு புலப்பட்டது. அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் கீழ் ஒரு மெற்றிக்தொன்னை 129 அமெரிக்க டொலருக்கு வழங்க இணக்கம் தெரிவித்த ஓமான் நிறுவனம் மாதமொன்றுக்கு 25,000 மெற்றிக்தொன் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு இலட்சம் மெற்றிக்தொன் கேஸ் விநியோகத்தை வழங்க இணங்கியதாக  லிற்றோ நிறுவனம் தெரிவித்தது.

இதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயம் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டு சியாம் கேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய குறிப்பிட்ட காலத்துக்கான கேள்விப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு ஓமான் நிறுவனத்திடம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பதிரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்காக உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி மற்றும் லிற்றோ நிறுவனத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை வழங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவுசெய்யப்படவிருப்பதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எரிவாயுத் தேவை அத்தியாவசியமான அவசர தேவையாக இருக்கின்றபோதும் குறைந்த கேள்விப்பத்திரத்தை வழங்கிய சியாம் நிறுவனத்துக்குப் பதிலாக அதிக விலையில் ஓமான் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமையும் என்றும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர், கணக்காய்வாளர் திணைக்களத்துக்குத் தெரிவித்தார்.

இந்திய கடன் வசதியின் கீழ் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படாத எரிவாயுவை கொள்வனவு செய்வதே பிரச்சினை என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாக ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் நிதியமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.

லிற்றோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு தற்பொழுது 4 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சட்டரீதியாக ஐவர் இருக்க வேண்டும் என்பதும் இங்கு புலப்பட்டது. பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் நிதி அமைச்சின் ஊடாக நியமிக்கப்படுகின்றபோதும், தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியவாறு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் நிதி அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இரு பதவிகளையும் ஒரே நபர் வைத்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் பதவி மாறினாலும், நிறைவேற்று அதிகாரி பதவி நிரந்தரமாக இருப்பதுடன், நிறுவனம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அதற்காக விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு  பணிப்பாளர் சபை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு குழு பரிந்துரைத்தது.

லிட்ரோ கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய திறன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், அரச வங்கியில் சுமார் 5 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதன் காரணமாகவே கடந்த காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிந்தது என்றார்.

நிதி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி திறைசேரியின் உதவிச் செயலாளர் சமன் பெர்னாந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான விஜித ஹேரத், லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டிருந்ததுடன், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திசர ஜயவர்தன ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, அனுரகுமார திஸாநாயக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி சரத் வீரசேகர, ஜகத் புஷ்பகுமார, இந்திக்க அனுருத்த, எஸ்.எம்.மரிக்கார், ஜயந்த சமரவீர, கலாநிதி நாலக கொடஹேவா, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

5 3

8 7

 



தொடர்புடைய செய்திகள்

2026-01-09

தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தள மையமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது கோபா குழு

தகவல் தொழில்நுட்ப (IT) அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து குழு வலியுறுத்து தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியதுதொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழு 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி கூடியபோது நாட்டில் உள்ள அனைத்து தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்கள், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் வெற்றி தோல்விகள், அகழ்வாராய்ச்சிகள் தொடரப்பட வேண்டுமா, எவ்வாறான இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஒரு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்து அதனைப் பராமரிக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டமை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லையென்றும், அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதிகளை வழங்குவது தொடர்பான தரவுத்தளம் மாத்திரமே பராமரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மையப்படுத்தப்பட்ட தரவுத் தளமொன்றைத் தயாரித்து பராமரிப்பது முக்கியமானது என்றும், தேவைப்படும் பட்சத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன், குறித்த திணைக்களத்திற்கு மேலதிகமான தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பன்னிரண்டு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள போதும், தற்பொழுது ஒரு அதிகாரியே பணியில் இருப்பதாகவும், அவர் தலைமையகத்திற்கு இணைக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலவும் வெற்றிடங்களுக்குத் தேவையான அதிகாரிகளை விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் குறித்த அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளக் கட்டமைப்பொன்றுக்கான முன்மொழிவை மூன்று மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. குறிப்பாக, தொல்பொருளியல் திணைக்களத்தின் இணையதளத்தைப் புதுப்பிப்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மிகவும் முக்கியமானது என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இணையத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் தளங்களில் 48% வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.உலக மரபுரிமைகளாகப் பெயரிடுவதற்கு யுனெஸ்கோவினால் முன்மொழியப்படவிருக்கும் தளங்கள் மற்றும் அவை தொடர்பான வரைபுகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சுகத் திலகரத்ன, அரவிந்த செனரத், நளின் ஹேவகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, (மருத்துவர்) ஜனக சேனாரத்ன, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, லால் பிரேம்நாத், மஞ்சுள சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-01-08

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் அனுமதி

நாளை (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்", எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது. அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் 'ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்', என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.கடந்த குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, பாடசாலைகளை நடத்திச் செல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை கௌரவ ஜனாதிபதி வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு மேலதிகமானவர்களை அனுப்புவது போன்ற விடயங்கள் குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2025.01.08 ஆம் திகதி அங்கீகரிக்கப்படவுள்ள (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.அதற்கமைய, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2452/40 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம், ‘வீதியொன்றில் மோட்டார் வாகனமொன்றைச் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் எவரேனும் ஒருவர் போதைப்பொருள் பாவித்துள்ளதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நியாயமான சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அந்த நபரை மேலதிகப் பரிசோதனைக்காக அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலையினால் இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அதிகாரியிடமோ முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியின் மூலம், ‘அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொருவரும் பாதுகாப்பு ஆசனப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இந்தக்கூட்டத்தின் போது குழுவில் விளக்கமளித்தனர். அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 1,481 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட 287 வீதிப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 86 பில்லியன் ரூபா என அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அதேபோன்று, புகையிரதத் திணைக்களத்திற்கு சுமார் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 63 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், இலங்கையின் வீதிக் கட்டமைப்பில் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, https://road-lk.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சேதங்கள் குறித்துத் தெரியப்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில், குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks