logo

E   |   සි   |  

2022-06-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நாட்டின் உணவு நெருக்கடிக்குத் தீர்வுகாண உணவுப் பாதுகாப்புக் குழுவை அமைக்க கோபா குழு பரிந்துரை

  • எதிர்காலத்தின் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் தேவை 800,000 மெட்றிக்தொன்
  • சார்க் உணவு வங்கி மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்வு

 

நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்து உணவுப் பாதுகாப்புக்கான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, விரைவான முடிவுகளை எடுப்பதற்கும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்தக் குழுவை அமைப்பது முக்கியம் என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற (10) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சார்க் உணவு வங்கி மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவது குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத நிலையில் அதிகரித்துள்ளதாக கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் உயர்ந்த விலையில் இருப்பதால் அரசாங்கத்தின் தலையீட்டில் நியாயமான விலையில் அவற்றை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். இதன்படி, உணவு ஆணையாளர் திணைக்களம், லங்கா சதோச நிறுவனம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்,  அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம், மற்றும் ஏனைய கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றம், ரஷ்ய - உக்ரைன் போர், உலக கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சோள உற்பத்தி, உர உற்பத்தியிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட உர நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு தொடர்பான கொள்கை சிக்கல்கள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இலங்கை சுங்க மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, சம்பா அரிசி, நாட்டு அரிசி, சீனி, சிகப்பு பருப்பு, கோதுமை மா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின் மீன், பால்மா, செத்தல் மிளகாய் கொண்டைக்கடலை, கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை உள்ளிட் 16 வகையான உணவுகள் வர்த்தக அமைச்சினால் அத்தியாவசிய உணவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் பெரும்போக மற்றும் சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவு மற்றும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கினர். புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குழு பிரதமர் அலுவலகத்தில் கூடி இது குறித்து ஆராயவிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாட்டின் காபோஹைட்ரேட், புரதம் மற்றும் ஏனைய எரிசக்தி தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் விவசாய அமைச்சு முறையான வேலைத்திட்டத்தை வகுத்துள்ளதாக அமைச்சின்  செயலாளர் தெரிவித்தார். இது அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவலுக்காக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ உதய கம்மன்பில, கௌரவ லசந்த அழகியவன்ன, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ நிரோஷன் பெரேரா ஆகியோரும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 6

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks