E   |   සි   |  

2022-06-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்கத்தின் வரி மறுசீரமைப்பைவிட வாகன இறக்குமதி நிறுத்தம், கொவிட் சூழ்நிலைகள் உள்ளிட்டவை நாட்டின் பொருளாதாரவீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன – நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல

2019 ஆம் ஆண்டின் இறுதியின் புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரி மறுசீரமைப்புக் காரணமாக ஏறத்தாழ 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டது எனக் கூறுவது நியாயமற்றது. வாகன இறுக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் கொவிட் சூழலால் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம் என்பனவும் இந்த நிலைமைக்குக் காரணம் என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (08) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ 2019 டிசம்பர் 04 ஆம் திகதி முன்வைத்த முதலாவது அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க வரிக் கொள்கைகள் தொடர்பான இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர,  நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், திறைசேரியின் முன்னாள் செயலாளருமான எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்போது அது தொடர்பில் பின்னணிக் குறிப்பு மற்றும் அறிக்கை காணப்பட வேண்டும் என்றும்,  குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளிடமே இதற்கான முழுப் பொறுப்பும் காணப்படுகிறது என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் முறையான ஆய்வுக்குப் பின்னரே அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்படுவதற்கு முன்னர், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாணயச் சபையின் தெளிவான முடிவுகள் அடங்கிய அறிக்கையை பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் யாராவது எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்களா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மேலும் கேள்வியெழுப்பியிருந்தனர்.

முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர இதற்குப் பதிலளிக்கையில், இவ்வாறான தீர்மானங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகாரிகளால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களில் குறைபாடுகள் காணப்படும்போது அப்போது பொறுப்புக்கூறவேண்டி அதிகாரிகள் என்ற ரீதியில் நிபுணர்கள் மற்றும் துறைசார் விற்பனர்களாக அவை குறித்து தமது உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அதுபற்றி தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மீண்டும் வினவினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் அரசியல் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உரிய முறையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கூறினார். அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தவாறாக இருக்கும்போது அவற்றைச் சுட்டிக்காட்டவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அவ்வாறான தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதுடன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அரசியல் அதிகாரிகளின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டே கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் நந்தலால் வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான கொள்கைத் தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமும், அப்போதைய அரசியல் அதிகாரிகளிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தபோதும் எவரும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax)  நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு வரியைக் குறைத்தமையால் 12.5 வீதமாகக் ஆகக் காணப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 8.7 வீதமாகக் குறைந்தது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் தொடர்பாடல்களை அதிகரிப்பதற்கு உரிய நடைமுறைகளை உருவாக்கி நாடு தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது உரிய வகையில் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ. எம்.ஏ.சுமந்திரன், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ காமினி வலேபொட, கௌரவ அனுப பஸ்குவர், கௌரவ விஜித ஹேரத், கௌரவ பிரமித பண்டார தென்னகோன், கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ இசுறு தொடங்கொட மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

1

3 4

6



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks