பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-06-09
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2019 ஆம் ஆண்டின் இறுதியின் புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரி மறுசீரமைப்புக் காரணமாக ஏறத்தாழ 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டது எனக் கூறுவது நியாயமற்றது. வாகன இறுக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் கொவிட் சூழலால் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம் என்பனவும் இந்த நிலைமைக்குக் காரணம் என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (08) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ 2019 டிசம்பர் 04 ஆம் திகதி முன்வைத்த முதலாவது அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க வரிக் கொள்கைகள் தொடர்பான இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், திறைசேரியின் முன்னாள் செயலாளருமான எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்போது அது தொடர்பில் பின்னணிக் குறிப்பு மற்றும் அறிக்கை காணப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளிடமே இதற்கான முழுப் பொறுப்பும் காணப்படுகிறது என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் முறையான ஆய்வுக்குப் பின்னரே அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்படுவதற்கு முன்னர், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாணயச் சபையின் தெளிவான முடிவுகள் அடங்கிய அறிக்கையை பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் யாராவது எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்களா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மேலும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர இதற்குப் பதிலளிக்கையில், இவ்வாறான தீர்மானங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அரசியல் அதிகாரிகளால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களில் குறைபாடுகள் காணப்படும்போது அப்போது பொறுப்புக்கூறவேண்டி அதிகாரிகள் என்ற ரீதியில் நிபுணர்கள் மற்றும் துறைசார் விற்பனர்களாக அவை குறித்து தமது உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அதுபற்றி தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மீண்டும் வினவினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் அரசியல் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உரிய முறையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கூறினார். அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தவாறாக இருக்கும்போது அவற்றைச் சுட்டிக்காட்டவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அவ்வாறான தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதுடன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அரசியல் அதிகாரிகளின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டே கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நந்தலால் வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான கொள்கைத் தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமும், அப்போதைய அரசியல் அதிகாரிகளிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தபோதும் எவரும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax) நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு வரியைக் குறைத்தமையால் 12.5 வீதமாகக் ஆகக் காணப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 8.7 வீதமாகக் குறைந்தது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அத்துடன், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் தொடர்பாடல்களை அதிகரிப்பதற்கு உரிய நடைமுறைகளை உருவாக்கி நாடு தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது உரிய வகையில் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ. எம்.ஏ.சுமந்திரன், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ காமினி வலேபொட, கௌரவ அனுப பஸ்குவர், கௌரவ விஜித ஹேரத், கௌரவ பிரமித பண்டார தென்னகோன், கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ இசுறு தொடங்கொட மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



