பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-06-09
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2019 ஆம் ஆண்டின் இறுதியின் புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரி மறுசீரமைப்புக் காரணமாக ஏறத்தாழ 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டது எனக் கூறுவது நியாயமற்றது. வாகன இறுக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் கொவிட் சூழலால் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம் என்பனவும் இந்த நிலைமைக்குக் காரணம் என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (08) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ 2019 டிசம்பர் 04 ஆம் திகதி முன்வைத்த முதலாவது அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க வரிக் கொள்கைகள் தொடர்பான இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், திறைசேரியின் முன்னாள் செயலாளருமான எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்போது அது தொடர்பில் பின்னணிக் குறிப்பு மற்றும் அறிக்கை காணப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளிடமே இதற்கான முழுப் பொறுப்பும் காணப்படுகிறது என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் முறையான ஆய்வுக்குப் பின்னரே அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்படுவதற்கு முன்னர், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாணயச் சபையின் தெளிவான முடிவுகள் அடங்கிய அறிக்கையை பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் யாராவது எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்களா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மேலும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர இதற்குப் பதிலளிக்கையில், இவ்வாறான தீர்மானங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அரசியல் அதிகாரிகளால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களில் குறைபாடுகள் காணப்படும்போது அப்போது பொறுப்புக்கூறவேண்டி அதிகாரிகள் என்ற ரீதியில் நிபுணர்கள் மற்றும் துறைசார் விற்பனர்களாக அவை குறித்து தமது உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அதுபற்றி தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மீண்டும் வினவினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் அரசியல் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உரிய முறையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கூறினார். அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தவாறாக இருக்கும்போது அவற்றைச் சுட்டிக்காட்டவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அவ்வாறான தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதுடன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அரசியல் அதிகாரிகளின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டே கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நந்தலால் வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான கொள்கைத் தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமும், அப்போதைய அரசியல் அதிகாரிகளிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தபோதும் எவரும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax) நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு வரியைக் குறைத்தமையால் 12.5 வீதமாகக் ஆகக் காணப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 8.7 வீதமாகக் குறைந்தது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அத்துடன், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் தொடர்பாடல்களை அதிகரிப்பதற்கு உரிய நடைமுறைகளை உருவாக்கி நாடு தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது உரிய வகையில் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ. எம்.ஏ.சுமந்திரன், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ காமினி வலேபொட, கௌரவ அனுப பஸ்குவர், கௌரவ விஜித ஹேரத், கௌரவ பிரமித பண்டார தென்னகோன், கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ இசுறு தொடங்கொட மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2026-03-30
2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-03-30
விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஒழுங்குவிதி 2026 ஜனவரி 16ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் பங்களிப்புடன் அண்மையில் (மார்ச் 20) இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-03-30
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-03-24
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் முதல் தடவையாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விசேட குழுவின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, தித்வா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதற்கு அமைய தேவையான அடிப்படை விழிப்புணர்வைப் பெறுவதற்காக, இந்த விசேட குழுவின் அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.அதேநேரம், இந்த விசேட குழு அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் செயற்படும் என்பதால் தேவைப்படும் சில சில தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட துறை தொடர்பில் நிபுணத்துவம் உள்ள அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அவ்ப்போது அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்த விசேட குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை குழுவின் முதலாவது கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதாவது 2026.06.19ஆம் திகதியாகும்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் விரைவில் கூட்டங்களை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் கூறினார். குழுவின் செயற்பாட்டு வரம்பு தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தித்வா புயல் போன்ற எதிர்கால நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இதில் உள்ளடக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியைப் பெற்று கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



