logo

02

E   |   සි   |  

2022-02-11

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன

எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலைக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். நேற்றையதினம் (10) நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டளவில் மொத்த தேயிலை உற்பத்தி 21 மில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். இரசாயன உரத் தட்டுப்பாட்டினால் மாத்தறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமண வீரசிங்ஹ குறிப்பிட்டார். இரசாயன உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையை அரசாங்கம் ஒழுங்குமுறைப்படுத்துவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வீரசுமண வீரசிங்க, தேயிலை பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இரசாயன உரங்களில் சில ஏனைய பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக் கூறினார். சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கூட்டுறவு முகாமைத்துவ திட்டத்தின் ஊடாக தேயிலை தோட்டங்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான செலவில் 50 வீதத்தை அரசாங்கம் வழங்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் கேட்டறிந்தார். இது தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள பிரச்சினை என்பதால் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துள்ள போதிலும், தம்மைப் பொறுத்தவரை, இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு கூட்டொப்பந்தம் வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமாரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்காக எந்தவொரு முறைகேடுகளையும் தடுப்பதற்கு தமது அமைச்சு முடிந்தளவு முயற்சியை எடுக்கும் என்றும், அத்துமீறி நடந்துகொள்ளும் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் தென்னங்கன்று நாற்றுக்களை உருவாக்கும் திட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அவர்கள் முன்வைத்த முன்மொழிவின் பேரில் தேங்காய் எண்ணெய் அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் துருவல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாத்தறை நில்வலா பிரதேசத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் நெல் வயல்களில் தென்னை உற்பத்தியை துரிதப்படுத்தும் திட்டம் போன்ற யோசனைகளுக்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்  தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, சிவஞானம் சிறிதரன், பழனி திகம்பரன், எம். ராமேஸ்வரன், சம்பத் அத்துகோரல, வீரசுமண வீரசிங்க, அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

2 3

5

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-21

இயலாமையுடைய நபர்களுக்கான ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் தூதுக்குழுவுடன் கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தல்களை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுஇயலாமையுடைய நபர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சே அவர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை நிறுவியமைக்காக பாராளுமன்றத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன், இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய அபிவிருத்தியை அனைத்து துறைகளிலும் தேசிய முன்னுரிமையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சட்ட மறுசீரமைப்பு, அணுகல் வசதிகள், கல்வி, வேலைவாய்ப்புகள், சமூக மட்டத்திலான புனர்வாழ்வு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் நிறுவன ரீதியான ஆதரவையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி பெகோனா அரெலானோ அவர்கள் குறிப்பிடுகையில், விசேடமாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இயலாமையுடைய சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய கொள்கைகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ள கண்காணிப்புப் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், UNFPA, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர் விவகாரங்கள், கல்வி, இயலாமை நிலையிலுள்ள நபர்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்தைத் தெளிவுபடுத்தினர்.கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலமும் சைகை மொழி தொடர்பான சட்டமூலமும் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டமூலங்களை 2026 செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், அரசாங்க நிறுவனங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல், ஊனமுற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்த வருடத்திற்குள் ஊனமுற்ற சிறார்களுக்காக பத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேபோன்று, அரசாங்க அமைச்சுக்களின் ஊடாக ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், தேசிய ஊனமுற்றோர் தரவுத் தொகுதியை நிறைவு செய்தல் மற்றும் ஊனமுற்ற நபர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை ஊக்குவிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துதல் உள்ளிட்ட எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.கலந்துரையாடலின் நிறைவில், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், ஒன்றியத்தின் கருப்பொருளான “தடையற்ற சமூக வாழ்க்கை” என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்வில், ஒன்றியத்தின் கௌரவ பிரதித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க மற்றும் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், UNFPA, UNICEF, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-07-20

மாகாணசபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கை விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.மாகாண சபை மற்றும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது. இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, சட்டத்தரணி சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 


2026-07-20

அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான விவசாயத் தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்து

நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு  ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-07-16

கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்

இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks