பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-12-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கடந்த ஏப்ரலில் விதிக்கப்பட்ட அரிசி மீதான இறக்குமதித் தடையை மீண்டும் அனுமதிப்பதாயின், எதிர்வரும் சிறுபோக நெல் அறுவடை குறித்த முறையான முன்னறிவிப்பின் பின்னரே அதனை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் (01) பரிந்துரை செய்தனர்.
தற்போதைய விசேட சூழ்நிலையில், உள்நாட்டு நெல் விவசாயிகளின் அறுவடைகளுக்கு நியாயமான விலையையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான அரிசியை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தையும் வழங்குவதற்கு இந்த நிலைமையை தர்க்கரீதியாக ஆராய்ந்து மதிப்பிட வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய, எதிர்பார்க்கப்படும் சிறுபோக விளைச்சல் கடந்த முறையில் 2/3 பங்காக இருக்கும் என இறக்குமதி, ஏற்றுமதி பணிப்பாளர் நாயகம் குழுவில் தெரிவித்தார். இவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதிக்கு இடமளிப்பதால் இலங்கையின் நுகர்வுக்கு தேவையான அளவை விட அதிகளவு அரிசியை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் முயற்சிப்பதாகவும், அதனால் உள்நாட்டு விவசாயிகள் முகங்கொடுக்கும் சிரமங்களை நீக்க நிதி அமைச்சு தலையிட வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நளின் பிரனாந்து தெரிவித்தார். உதாரணமாக, இந்தியாவுடன் ஒப்பிடும் போது அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசி உள்நாட்டு சந்தையில் இருப்பது முக்கியமானது என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய பச்சை அரிசி, நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அரங்க நிதி பற்றிய குழுவில் வலியுறுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகையில், சரியான தர்க்க ரீதியான மதிப்பீடு இன்றி இவ்வாறான தீர்மானங்களுக்கு இணங்குவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அதிகாரிகள் இதனை விட விமர்சனரீதியாக செயற்படவேண்டும் என்றார்.
அதேபோன்று, அரிசி சந்தை தொடர்பான நுகர்வோர் உரிமைகள் தொடர்பில் செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இதனை விட வினைத்திறனாக செயற்படவேண்டியதன் அவசியம் மற்றும் உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர அரசி வர்த்தகர்களை வலுப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் அரச கொள்கைகளுடன் எந்தளவு இணங்குகின்றது என்பது தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட கணிப்புகளை நிறைவேற்ற முடிந்ததா என்பது தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கேள்வியெழுப்பினார். நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளுக்கு அமைய, அனைத்துக் கடன்களையும் மீளச் செலுத்துவதற்கு உள்நாட்டு நிதியை மாத்திரம் பயன்படுத்தினால், எதிர்வரும் காலங்களில் வட்டி வீதங்கள் அதிகரித்து உள்நாட்டு தனியார் துறைக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது குழுவின் அவதானிப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

