logo

02

E   |   සි   |  

2021-11-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பத்து வருடங்களாக காலதாமதமாகும் கல்பிட்டி தீவுகளை சுற்றுலாக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் - கோப் குழு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவிப்பு

கற்பிட்டியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 12 தீவுகளை சுற்றுலா கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவித்தார்.

2055 ஏக்கரைக் கொண்ட 12 தீவுகளில் 5 தீவுகளுக்காக 2011ஆம் ஆண்டு முதலீடு செய்ய முன்வந்தபோதும் நீர் பங்களா திட்டத்துக்கு (Water Bungalows) அனுமதி பெற்றுக்கொள்ள உரிய நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் இது காலதாமதமடைந்துள்ளது என்பது இங்கு தெரியவந்தது. மாலைதீவில் இந்த வகையிலான ஹோட்டல்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டாளருக்கு அனுமதியை வழங்காது 10 வருடங்கள் காலதாமதம் ஆகியிருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அழகிய தீவை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வடமேல் மாகாணசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவொன்றை அமைத்து பலமான சட்டக் கட்டமைப்பின் கீழ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (26) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் புலப்பட்டன.

அத்துடன், சில வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட 29 மில்லியன் ரூபாவில் 11 மில்லியன் ரூபா செய்யாத வேலைக்காக கொடுக்கப்பட்டமை குறித்த கணக்காய்வின் அவதானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மீண்டும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் ஊடாக இந்த 11 மில்லியன் ரூபாவின் பெறுமதி 4.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. மாறாக, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எச்சரிக்கைக் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியதோடு, இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், நீண்டகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றி, கணக்காய்வின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்பிட்டிய தோரையடி ஜெட்டி மற்றும் வன்னிமுந்தலம் களப்பு ஆகியவற்றை அண்மித்த பகுதியில் வீதியமைப்பதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பொறியியலாளரிடம் வினவியபோது உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை பதிலளித்தது. இது தொடர்பில் ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு கோப் குழு பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தபோதும், 2018 ஆம் ஆண்டிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் தலைவர், நாட்டின் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமிருக்கும் நிலையில் அதனால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

2018-2019 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்திக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து தெரிவித்தார். அதன்படி தற்போது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக தனித்தனியாக செயற்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவற்றை இணைத்து தனியான நிறுவனமொன்றை உருவாக்கவிருப்பதாகவும், ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை தனியாக செயற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள்  இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் வினைத்திறன் மிக்க பொறிமுறை தேவையென்றால், அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மாலைதீவு தற்போது சுற்றுலாத்துறையில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வரும் நிலையில் இந்நிலைக்கு இலங்கை செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.  இங்கு கிமாலி பெர்னாந்து கருத்துத் தெரிவிக்கையில், மாலைதீவு சுற்றுலாத்துறையில் அதிக விலையுள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே செயலில் உள்ளமை, உளகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்புகள் மூலம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல், சர்வதேச மட்டத்தில் 15 விசேட நிபுணர்களைக் கொண்ட சிறிய குழுவின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டு வருதல் போன்ற விடயங்களின் ஊடாக இத்துறையில் அவர்களால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது என்றார். கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.கொவிட் நிலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தமது நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது ஒன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பிரதேசங்களில் காணிகள் உட்பட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1

2

4

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-23

சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய முறைகேடு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


2026-07-22

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிக்குறிப்பு வரைவுக்கு அங்கீகாரம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு,  பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


2026-07-22

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வின் வழிமுறை தொடர்பில் கோப் உபகுழுவில் ஆராய்வு

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால்  (கோப்)  நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.


2026-07-22

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காணி, நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு தகவல்களை வழங்குவது குறித்து கோப் குழுவில் அவதானம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு  பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks