பார்க்க

01

E   |   සි   |  

2021-11-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பத்து வருடங்களாக காலதாமதமாகும் கல்பிட்டி தீவுகளை சுற்றுலாக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் - கோப் குழு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவிப்பு

கற்பிட்டியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 12 தீவுகளை சுற்றுலா கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவித்தார்.

2055 ஏக்கரைக் கொண்ட 12 தீவுகளில் 5 தீவுகளுக்காக 2011ஆம் ஆண்டு முதலீடு செய்ய முன்வந்தபோதும் நீர் பங்களா திட்டத்துக்கு (Water Bungalows) அனுமதி பெற்றுக்கொள்ள உரிய நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் இது காலதாமதமடைந்துள்ளது என்பது இங்கு தெரியவந்தது. மாலைதீவில் இந்த வகையிலான ஹோட்டல்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டாளருக்கு அனுமதியை வழங்காது 10 வருடங்கள் காலதாமதம் ஆகியிருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அழகிய தீவை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வடமேல் மாகாணசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவொன்றை அமைத்து பலமான சட்டக் கட்டமைப்பின் கீழ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (26) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் புலப்பட்டன.

அத்துடன், சில வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட 29 மில்லியன் ரூபாவில் 11 மில்லியன் ரூபா செய்யாத வேலைக்காக கொடுக்கப்பட்டமை குறித்த கணக்காய்வின் அவதானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மீண்டும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் ஊடாக இந்த 11 மில்லியன் ரூபாவின் பெறுமதி 4.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. மாறாக, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எச்சரிக்கைக் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியதோடு, இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், நீண்டகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றி, கணக்காய்வின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்பிட்டிய தோரையடி ஜெட்டி மற்றும் வன்னிமுந்தலம் களப்பு ஆகியவற்றை அண்மித்த பகுதியில் வீதியமைப்பதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பொறியியலாளரிடம் வினவியபோது உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை பதிலளித்தது. இது தொடர்பில் ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு கோப் குழு பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தபோதும், 2018 ஆம் ஆண்டிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் தலைவர், நாட்டின் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமிருக்கும் நிலையில் அதனால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

2018-2019 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்திக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து தெரிவித்தார். அதன்படி தற்போது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக தனித்தனியாக செயற்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவற்றை இணைத்து தனியான நிறுவனமொன்றை உருவாக்கவிருப்பதாகவும், ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை தனியாக செயற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள்  இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் வினைத்திறன் மிக்க பொறிமுறை தேவையென்றால், அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மாலைதீவு தற்போது சுற்றுலாத்துறையில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வரும் நிலையில் இந்நிலைக்கு இலங்கை செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.  இங்கு கிமாலி பெர்னாந்து கருத்துத் தெரிவிக்கையில், மாலைதீவு சுற்றுலாத்துறையில் அதிக விலையுள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே செயலில் உள்ளமை, உளகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்புகள் மூலம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல், சர்வதேச மட்டத்தில் 15 விசேட நிபுணர்களைக் கொண்ட சிறிய குழுவின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டு வருதல் போன்ற விடயங்களின் ஊடாக இத்துறையில் அவர்களால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது என்றார். கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.கொவிட் நிலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தமது நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது ஒன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பிரதேசங்களில் காணிகள் உட்பட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1

2

4

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks