01

E   |   සි   |  

2021-11-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன் ரூபா உள்ளடக்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன் ரூபாய் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று, உயர்தர பெறுபேறுகளுடன் தொடர்புடைய Z Score தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு காணப்படும் நிலையில் க.பொ.த. (சாதாரண தர) பெறுபேறுகளை வெளியிடுவதில் இருந்த தடைகள் நீங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கொவிட் 19 தொற்று நோய் காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த. (உயர் தர) பரீட்சை,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைகளுக்கான தினங்கள் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, 2022 ஜனவரி மாதத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையையும், பெப்ரவரி முதலாம் வாரத்தில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையையும், மே மாதம் 23 ஆம் திகதி க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையையும் நடத்துவதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக உள்ளடக்குவது தொடர்பான பாராளுமன்ற உபகுழுவினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் ஆலோசனைக் குழுவின் அனுமதிக்க சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பாடசாலை பாடத்திட்டத்தில் தற்போது 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை கட்டாயப் பாடமாக உள்ள குடியுரிமைக் கல்வி பாடத்தை இந்த சீர்திருத்தங்களுக்குப் பிறகு சட்டம் மற்றும் குடியுரிமைக் கல்வியாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இத்தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பதன் மூலம், மாணவர்களிடையே சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்டத்துக்கு கீழ்ப்படியாமை மற்றும் தண்டனையின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல், சட்டம் இயற்றுதல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை தொடர்பில் புரிதலை ஏற்படுத்துதல், ஒரு நாகரிக சமுதாயத்தில் சட்டத்தால் நிறுவப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் போன்ற திறன்களை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களில், சிறுவயது முதல் உயர்தரம் வரை எதிர்பார்க்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள், தொழிற்கல்வி தொடர்பான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்கள் என மூன்று பகுதிகளாக தயாரிக்கப்பட்ட கொள்கைக் கட்டமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதில் பொதுக் கல்வி குறித்து எவரும் கருத்து தெரிவிப்பதற்கான டிஜிட்டல் தளம் 2021 மார்ச் 28ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள 2400 கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, தேசிய பல்கலைக்கழகம் இல்லாத ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள 1000 தேசிய பாடசாலை வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், குழுவின் தலைவர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, சீதா அரம்பெபோல, பியல் நிஷாந்த, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், டீ. கலையரசன், சுதத் மஞ்சுள, சாந்த பண்டார, எரான் விக்ரமரத்ன, பிரேம்நாத் சி. தொலவத்த, காதர் மஸ்தான், வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, யதாமினி குணவர்தன, அனுப பஸ்குவல், சார்ள்ஸ் நிர்மலநாதன், நிமல் பியதிஸ்ஸ, சாமர சம்பத் தசநாயக்க,  வீ. இராதாகிருஷ்ணன், உதயகாந்த குணதிலக, பேராசிரியர் சரித ஹேரத், மதுர விதானகே, மஞ்சுளா திசாநாயக்க, ரோஹன திசாநாயக்க, கோகிலா குணவர்தன ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட உரிய நிறுவங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5 6

7

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks