பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-11-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன் ரூபாய் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதேபோன்று, உயர்தர பெறுபேறுகளுடன் தொடர்புடைய Z Score தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு காணப்படும் நிலையில் க.பொ.த. (சாதாரண தர) பெறுபேறுகளை வெளியிடுவதில் இருந்த தடைகள் நீங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கொவிட் 19 தொற்று நோய் காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த. (உயர் தர) பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைகளுக்கான தினங்கள் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, 2022 ஜனவரி மாதத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையையும், பெப்ரவரி முதலாம் வாரத்தில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையையும், மே மாதம் 23 ஆம் திகதி க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையையும் நடத்துவதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டத்தை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக உள்ளடக்குவது தொடர்பான பாராளுமன்ற உபகுழுவினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் ஆலோசனைக் குழுவின் அனுமதிக்க சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பாடசாலை பாடத்திட்டத்தில் தற்போது 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை கட்டாயப் பாடமாக உள்ள குடியுரிமைக் கல்வி பாடத்தை இந்த சீர்திருத்தங்களுக்குப் பிறகு சட்டம் மற்றும் குடியுரிமைக் கல்வியாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பதன் மூலம், மாணவர்களிடையே சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்டத்துக்கு கீழ்ப்படியாமை மற்றும் தண்டனையின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல், சட்டம் இயற்றுதல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை தொடர்பில் புரிதலை ஏற்படுத்துதல், ஒரு நாகரிக சமுதாயத்தில் சட்டத்தால் நிறுவப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் போன்ற திறன்களை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச கல்விச் சீர்திருத்தங்களில், சிறுவயது முதல் உயர்தரம் வரை எதிர்பார்க்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள், தொழிற்கல்வி தொடர்பான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்கள் என மூன்று பகுதிகளாக தயாரிக்கப்பட்ட கொள்கைக் கட்டமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதில் பொதுக் கல்வி குறித்து எவரும் கருத்து தெரிவிப்பதற்கான டிஜிட்டல் தளம் 2021 மார்ச் 28ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள 2400 கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, தேசிய பல்கலைக்கழகம் இல்லாத ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள 1000 தேசிய பாடசாலை வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், குழுவின் தலைவர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, சீதா அரம்பெபோல, பியல் நிஷாந்த, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், டீ. கலையரசன், சுதத் மஞ்சுள, சாந்த பண்டார, எரான் விக்ரமரத்ன, பிரேம்நாத் சி. தொலவத்த, காதர் மஸ்தான், வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, யதாமினி குணவர்தன, அனுப பஸ்குவல், சார்ள்ஸ் நிர்மலநாதன், நிமல் பியதிஸ்ஸ, சாமர சம்பத் தசநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன், உதயகாந்த குணதிலக, பேராசிரியர் சரித ஹேரத், மதுர விதானகே, மஞ்சுளா திசாநாயக்க, ரோஹன திசாநாயக்க, கோகிலா குணவர்தன ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட உரிய நிறுவங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-16
இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks






