E   |   සි   |  

2021-11-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின்றி 2018ஆம் ஆண்டு 214 பேரை பணியில் நிரந்தரமாக்கியமை கோப் குழுவில் தெரியவந்தது

  • 50 வருடங்களில் கையகப்படுத்தப்பட்ட மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் தகவல்கள் இல்லாமை பாரிய பிரச்சினை
  • கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பான 200க்கும் மேற்பட்ட கோப்புகள் காணாமல் போனதாகவும் தெரியவந்தது

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பத்துலட்சம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 2018ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட 214 பணியாளர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி சேவையில் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது. அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டபோதும், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய இவர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இங்கு புலப்பட்டது.

குறிப்பிட்ட திட்டமொன்றுக்காகப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி இவ்வாறு சேவையில் நிரந்தரமாக்குவதில் பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைகிறது என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் அமைச்சின் மட்டத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு முழுமையான அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த நிலைமையைத் திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க அவர்களுக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்றிறன் அறிக்கை குறித்து கடந்த 17ஆம் திகதி பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு ஆராய்ந்திருந்தது. இதன்போதே இவ்விடயங்கள் தெரியவந்தன.

1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணி மறுசீரமைப்புச் சட்டத்துக்கு அமைய அமைக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணிகளைக் கையகப்படுத்தும்போது கையகப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் அந்தந்த அரசாங்கங்களின் காலப் பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதுவரை ஏறழத்தாழ 17 இலட்சம் ஏக்கர் காணிகள் ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகவும், இவற்றின் மதிப்பு துல்லியமானதாக இல்லையென்பதும் இங்கு தெரியவந்தது. காணிகளைக் கையகப்படுத்தும்போதும், பல்வேறு அரசுகளின் கீழ் காணிகளைப் பெற்றுக்கொள்ளும்போது சரியான முறையில் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்படாமை இந்நிலைமைக்குக் காரணம் என காணி அமைச்சின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பிரதான சொத்துக்களான இந்தக் காணிகள் தொடர்பில் சரியான தகவல்களும், மதிப்பீடுகளும் ஆணைக்குழுவிடம் இருப்பது அவசியமானது என்றும், காணிகளை சரியான முறையில் அளவீடு செய்து, அதுபற்றிய திட்டவட்டமான அடிப்படை ஆவணத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவான வேலைத்திட்டத்தை தயாரித்து கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிலங்களின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய குழு, செயலாளரிடம் உடனடியாக தலையிடுமாறு பணிப்புரை விடுத்தது.

காணி கையகப்படுத்தல் தொடர்பான சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இது போன்று கிட்டத்தட்ட 200 கோப்புகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளிலிருந்து உரிய பலனைப் பெற்றுக் கொள்ள வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை தனிநபர்களுக்கு வழங்குவது பாரிய பிரச்சினையென்றும், இதனைச் சீர் செய்வது அவசியமானதாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் 1972-1974ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குத் திட்டங்கள் மற்றும் சாற்றுதல் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக 50 ஏக்கர் காணிகளை வழங்காத 260 காணிகள் காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இதனால் 50 வருடங்களாக காலதாமதமடைந்திருக்கும் இந்தச் செயற்பாடு வரலாற்றுப் பிரச்சினையாக இருப்பதால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட வழியொன்றை ஏற்படுத்த உரிய தலையீட்டை வழங்குமாறும் கோப் குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஆணைக் குழுவின் வசம் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் காணிகள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய அவற்றின் பெறுமதி 676 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு தற்போதைய காலத்துக்கு ஏற்ப சீர் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கரின் பெறுமதி சுமார் 500 ரூபாவாக உள்ளதால், இப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.

அத்துடன், ஆணைக்குழுவினால் காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்தக் காணிகளை வங்கிகளில் அடகுவைத்து கடன் பெறுவது சிக்கலானது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், சில காணிகள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஆணைக்குழுவின் வசமுள்ள பெறுமதியான காணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயனுள்ள விதத்தில் அபிவிருத்தி செய்வதற்கான மாதிரியைத் தயாரிப்பதே தற்போதைய அவசர தேவை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது தேசிய முக்கியத்துவம் மிக்கது என்பதால் நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து உரிய வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக மீண்டும் ஒருமுறை குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

12

3



தொடர்புடைய செய்திகள்

2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகளை உள்ளடக்கிய இரண்டு வர்த்தமானிப் பத்திரிகைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் இக்குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நிதிக் கொள்கைகளை உருவாக்குதல் உட்பட அதன் பணிகளை நிறைவேற்றும்போது இலங்கை மத்திய வங்கிக்கு வெளித் தரப்பினரிடமிருந்து புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் திரட்டிக்கொள்வது அவசியமாகிறது. இப்புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை அறிக்கையிடுதல் தேவைப்பாடுகளுக்கு அமைந்தோராகவுள்ள ஆட்கள், அத்தேவைப்பாடுகளை மீறும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நிருவாக வழிமுறைகளை விதித்துரைப்பதற்காக, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.இவ்விதிகளின் மூலம், புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களைக் கோருவதற்கான அறிவித்தல்களை வழங்கும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளான பிரதி ஆளுநர்கள், பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதானி மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரதானி ஆகியோருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், வழங்கப்படும் தகவல்கள் அதற்கே உரிய நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் இவ்விதிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கை மத்திய வங்கியினால் சில பொதுக் கடன் தரவுகள் வெளியிடப்படாமை குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய தகவல்கள் தற்போது பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் வசமுள்ளதாகவும், இதன் காரணமாக இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மாதிரிக்கு அமைவாக கடன் புள்ளிவிபரங்களை மீண்டும் தயாரிப்பதில் வரம்புகள் காணப்படுவதாகவும் குழுவினால் இங்கு அவதானிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளினூடாக பொதுக் கடன் தகவல்களை அணுகுவதற்கான இயலுமையைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குழு சுட்டிக்காட்டியதுடன், அரச பிணையங்களுக்கான இரண்டாம் நிலைச் சந்தை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கவனம் செலுத்தியது.மேலும், சுற்றுலாப் பயணிகளினால் பயன்படுத்தப்படும் பல்வேறு கட்டணச் செலுத்துகை முறைகள் காரணமாக, சுற்றுலா வருமானத்தை துல்லியமாகக் கணிப்பிடுவது சவாலாக அமைந்துள்ளதெனவும், இத்தகைய மதிப்பீடுகளின் துல்லியத்தன்மையை உயர்த்துவதற்காக தரவு சேகரிப்பு ஆய்வுகளை மேம்படுத்துவது அவசியமெனவும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் தொடர்பாகவும் இக்குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதிகள்” என அழைக்கப்படும் இவ்விதிகள் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதி மேலும் திருத்தப்படுகின்றது.அதற்கமைய, ஏதேனும் ஒரு மாதத்தினுள் ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற ஒவ்வொரு பொருள் ஏற்றுமதியாளரும், அவ்வருமானத்தை அனுமதிக்கப்பட்ட செலுத்தல்களுக்காக மாத்திரம் பயன்படுத்தி, எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும். இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம் வழங்கப்பட்டிருந்த 3 மாதக் கால அவகாசம், இவ்வாறு அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை குறைக்கப்பட்டுள்ளது.அந்நியச் செலாவணி வீதத்திலும் அந்நியச் செலாவணிச் சந்தையிலும் நிலவும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அந்நியச் செலாவணி திரவத்தன்மையின் பற்றாக்குறை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஏற்றுமதி வருவாயை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தைக் குறைப்பது அவசியமென இலங்கை மத்திய வங்கி இங்கு சுட்டிக்காட்டியது.இந்நடவடிக்கையானது சந்தை நம்பிக்கையைக் குறைவடையச் செய்தல், அந்நியச் செலாவணிச் சந்தையில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துதல் போன்ற நிலைமைகளை உருவாக்கக்கூடுமென குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அந்நியச் செலாவணி வீதத்தின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் தற்போதைய அந்நியச் செலாவணி விநியோகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கானதொரு குறுகிய காலக் கொள்கைக் கருவியாகவே இந்நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தை நிலவரங்கள் ஸ்திரமடைந்தவுடன் இது தளர்த்தப்படும் எனவும் மத்திய வங்கி அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.மேலும், NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பிலான இலங்கை மத்திய வங்கியின் பணிப்பொறுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது குறித்து மேற்கொள்ளப்படும் தடயவியல் கணக்காய்வின்  பின்னர் அது தொடர்பில் மீண்டும் பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன, கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரஊப் ஹகீம், ரவி கருணாநாயக்க, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் றாஜபக்ஷ, திலிண சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.அத்துடன், “பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார மதிப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தலைப்பின் கீழ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை மற்றும் காங்கிரஸ்  வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவிக் குழுவினரும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks