பார்க்க

01

E   |   සි   |  

2021-11-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்துக்காக அர்ப்பணிக்கவும் –இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு

யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914  ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரியவந்தது.

நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு)  தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் பயணத்துக்குத் தடையாக அமையும் என நேற்று (16) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கவனக் குறைவாக மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேக்கோனுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிக்காமை குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் செயற்திறன் திட்டம் தயாரிக்கப்படாமை குறித்தும் வினவப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய இளைஞர் சேவை தனியார் நிறுவனம் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமை குறித்து கேள்வியெழுப்பினார். இந்த அறிக்கைகள் யாவற்றையும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்குக் கோப் குழு பணிப்புரை விடுத்தது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய மாத்தறை நில்வளா இளைஞர் பூங்காவை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படாமை குறித்தும் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு மற்றும் வட்டியாக 2014 டிசம்பர் 31ஆம் திகதி 142,810,543 ரூபா வழங்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு ஆலோசனைக்கான கட்டணமாக 7,657,349 ரூபா செலுத்தப்பட்டமை இங்கு கலந்துரையாடப்பட்டது.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட யொவுன்புர வேலைத்திட்டத்துக்காக அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை 350 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டபோதும், இதனைஞம் விஞ்சும் வகையில் 80,560,914 ரூபா செலவுசெய்யப்பட்டமை இங்கு புலப்பட்டது. அத்துடன், 2019ஆம் ஆண்டின் வேலைத்திட்டத்துக்கான களஞ்சியங்கள் இரண்டு வாடகைக்குப் பெற்றுக்கொண்டதுடன், குறிப்பிட்ட காலப்பகுதியையும் மீறிப் பயன்படுத்தியதாகக் கூறி இதற்காக 2,227,400 ரூபா மேதிகமாக அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யொவுன்புர தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவின் பணிப்புரை இன்றி, வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் 1773 டீஷேர்ட்களை வழங்குவதற்காக 1,932,500 ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மதிப்பாய்வு சபையின் அறிக்கைக்கு அமைய 2017ஆம் ஆண்டு 1,822,400 ரூபா செலவில் அச்சிடப்பட்ட 268,000 துண்டுப்பிரசுரங்களை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டமையும் இக்குழுவில் தெரியவந்தது.

இளைஞர் சேவை தனியார் நிறுவனம் 1981ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 98% பங்கின் கீழ் உருவாக்கப்பட்டபோதும் இணைந்த நிதிக் கூற்று தயாரிக்கப்படவில்லையென்பதும் கோப் குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 417 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளைச் செய்துள்ளது.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர்கள் ஊடாக பிரிவுகளின் தலைவர்களுக்குக் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி வெளியிட்ட உள்ளகச் சுற்றுநிருபத்தில் றுவனம் தொடர்பில் வெளிநபர்களுக்கு எவரும் தகவல்களை வழங்கக் கூடாது என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இங்கு தெரியவந்தது. இது கணக்காய்வு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்தது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள சிஸ்கோ கணினி வலையமைப்புப் பாடநெறிக்கான ஆரம்பகட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி 15,708,178 ரூபா செலவிட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கோப் குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.

இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1

2

3

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks