E   |   සි   |  

2021-11-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்துக்காக அர்ப்பணிக்கவும் –இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு

யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914  ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரியவந்தது.

நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு)  தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் பயணத்துக்குத் தடையாக அமையும் என நேற்று (16) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கவனக் குறைவாக மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேக்கோனுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிக்காமை குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் செயற்திறன் திட்டம் தயாரிக்கப்படாமை குறித்தும் வினவப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய இளைஞர் சேவை தனியார் நிறுவனம் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமை குறித்து கேள்வியெழுப்பினார். இந்த அறிக்கைகள் யாவற்றையும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்குக் கோப் குழு பணிப்புரை விடுத்தது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய மாத்தறை நில்வளா இளைஞர் பூங்காவை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படாமை குறித்தும் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு மற்றும் வட்டியாக 2014 டிசம்பர் 31ஆம் திகதி 142,810,543 ரூபா வழங்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு ஆலோசனைக்கான கட்டணமாக 7,657,349 ரூபா செலுத்தப்பட்டமை இங்கு கலந்துரையாடப்பட்டது.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட யொவுன்புர வேலைத்திட்டத்துக்காக அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை 350 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டபோதும், இதனைஞம் விஞ்சும் வகையில் 80,560,914 ரூபா செலவுசெய்யப்பட்டமை இங்கு புலப்பட்டது. அத்துடன், 2019ஆம் ஆண்டின் வேலைத்திட்டத்துக்கான களஞ்சியங்கள் இரண்டு வாடகைக்குப் பெற்றுக்கொண்டதுடன், குறிப்பிட்ட காலப்பகுதியையும் மீறிப் பயன்படுத்தியதாகக் கூறி இதற்காக 2,227,400 ரூபா மேதிகமாக அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யொவுன்புர தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவின் பணிப்புரை இன்றி, வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் 1773 டீஷேர்ட்களை வழங்குவதற்காக 1,932,500 ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மதிப்பாய்வு சபையின் அறிக்கைக்கு அமைய 2017ஆம் ஆண்டு 1,822,400 ரூபா செலவில் அச்சிடப்பட்ட 268,000 துண்டுப்பிரசுரங்களை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டமையும் இக்குழுவில் தெரியவந்தது.

இளைஞர் சேவை தனியார் நிறுவனம் 1981ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 98% பங்கின் கீழ் உருவாக்கப்பட்டபோதும் இணைந்த நிதிக் கூற்று தயாரிக்கப்படவில்லையென்பதும் கோப் குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 417 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளைச் செய்துள்ளது.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர்கள் ஊடாக பிரிவுகளின் தலைவர்களுக்குக் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி வெளியிட்ட உள்ளகச் சுற்றுநிருபத்தில் றுவனம் தொடர்பில் வெளிநபர்களுக்கு எவரும் தகவல்களை வழங்கக் கூடாது என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இங்கு தெரியவந்தது. இது கணக்காய்வு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்தது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள சிஸ்கோ கணினி வலையமைப்புப் பாடநெறிக்கான ஆரம்பகட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி 15,708,178 ரூபா செலவிட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கோப் குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.

இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1

2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகளை உள்ளடக்கிய இரண்டு வர்த்தமானிப் பத்திரிகைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் இக்குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நிதிக் கொள்கைகளை உருவாக்குதல் உட்பட அதன் பணிகளை நிறைவேற்றும்போது இலங்கை மத்திய வங்கிக்கு வெளித் தரப்பினரிடமிருந்து புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் திரட்டிக்கொள்வது அவசியமாகிறது. இப்புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை அறிக்கையிடுதல் தேவைப்பாடுகளுக்கு அமைந்தோராகவுள்ள ஆட்கள், அத்தேவைப்பாடுகளை மீறும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நிருவாக வழிமுறைகளை விதித்துரைப்பதற்காக, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 மார்ச் 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.இவ்விதிகளின் மூலம், புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களைக் கோருவதற்கான அறிவித்தல்களை வழங்கும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளான பிரதி ஆளுநர்கள், பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதானி மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரதானி ஆகியோருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், வழங்கப்படும் தகவல்கள் அதற்கே உரிய நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் இவ்விதிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கை மத்திய வங்கியினால் சில பொதுக் கடன் தரவுகள் வெளியிடப்படாமை குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய தகவல்கள் தற்போது பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் வசமுள்ளதாகவும், இதன் காரணமாக இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மாதிரிக்கு அமைவாக கடன் புள்ளிவிபரங்களை மீண்டும் தயாரிப்பதில் வரம்புகள் காணப்படுவதாகவும் குழுவினால் இங்கு அவதானிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளினூடாக பொதுக் கடன் தகவல்களை அணுகுவதற்கான இயலுமையைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குழு சுட்டிக்காட்டியதுடன், அரச பிணையங்களுக்கான இரண்டாம் நிலைச் சந்தை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கவனம் செலுத்தியது.மேலும், சுற்றுலாப் பயணிகளினால் பயன்படுத்தப்படும் பல்வேறு கட்டணச் செலுத்துகை முறைகள் காரணமாக, சுற்றுலா வருமானத்தை துல்லியமாகக் கணிப்பிடுவது சவாலாக அமைந்துள்ளதெனவும், இத்தகைய மதிப்பீடுகளின் துல்லியத்தன்மையை உயர்த்துவதற்காக தரவு சேகரிப்பு ஆய்வுகளை மேம்படுத்துவது அவசியமெனவும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதிய 2492/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள் தொடர்பாகவும் இக்குழுவில் ஆராயப்பட்டதன் பின்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதிகள்” என அழைக்கப்படும் இவ்விதிகள் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற விதி மேலும் திருத்தப்படுகின்றது.அதற்கமைய, ஏதேனும் ஒரு மாதத்தினுள் ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புகின்ற ஒவ்வொரு பொருள் ஏற்றுமதியாளரும், அவ்வருமானத்தை அனுமதிக்கப்பட்ட செலுத்தல்களுக்காக மாத்திரம் பயன்படுத்தி, எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும். இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம் வழங்கப்பட்டிருந்த 3 மாதக் கால அவகாசம், இவ்வாறு அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை குறைக்கப்பட்டுள்ளது.அந்நியச் செலாவணி வீதத்திலும் அந்நியச் செலாவணிச் சந்தையிலும் நிலவும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அந்நியச் செலாவணி திரவத்தன்மையின் பற்றாக்குறை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஏற்றுமதி வருவாயை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தைக் குறைப்பது அவசியமென இலங்கை மத்திய வங்கி இங்கு சுட்டிக்காட்டியது.இந்நடவடிக்கையானது சந்தை நம்பிக்கையைக் குறைவடையச் செய்தல், அந்நியச் செலாவணிச் சந்தையில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துதல் போன்ற நிலைமைகளை உருவாக்கக்கூடுமென குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அந்நியச் செலாவணி வீதத்தின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் தற்போதைய அந்நியச் செலாவணி விநியோகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கானதொரு குறுகிய காலக் கொள்கைக் கருவியாகவே இந்நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தை நிலவரங்கள் ஸ்திரமடைந்தவுடன் இது தளர்த்தப்படும் எனவும் மத்திய வங்கி அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.மேலும், NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பிலான இலங்கை மத்திய வங்கியின் பணிப்பொறுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது குறித்து மேற்கொள்ளப்படும் தடயவியல் கணக்காய்வின்  பின்னர் அது தொடர்பில் மீண்டும் பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன, கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரஊப் ஹகீம், ரவி கருணாநாயக்க, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் றாஜபக்ஷ, திலிண சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.அத்துடன், “பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார மதிப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தலைப்பின் கீழ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை மற்றும் காங்கிரஸ்  வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவிக் குழுவினரும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks