logo

E   |   සි   |  

2021-10-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து பெறப்படும் - கௌரவ நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

"இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைபு அறிக்கையை" மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெறுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுக்கு வழங்குமாறு கௌரவ நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.எம். அலி சப்ரி  பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) நடைபெற்ற நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். குற்றவியல் நீதி முறைமையை மறுசீரமைப்பதற்கான ஆரம்ப கட்டமாக இப்பணிப்புரையை வழங்கிய அமைச்சர், குறித்த அறிக்கை தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை கோருமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

நீதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு. ரொபர்ட் ஜுக்ஹாம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களைச் சீர்திருத்தத்துக்கு உட்படுத்தாமல் சிறைக்கு அனுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை மிகவும் பயனுள்ள முறையாக அமையும் என்பது அமைச்சின் கருத்தாக இருந்தது.  இதற்கமைய, இரண்டு வருடங்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட்டவர்களை சிறைத்தண்டனைக்கு  உட்படுத்தாமல் சமுதாய அடிப்படையில் சீர்திருத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.  

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் முன்னாள் மஜிஸ்திரேட்டுமான திரு. டிகிரி கே. ஜயதிலக்க அவர்களின் முன்வைப்பை அடுத்து சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. குற்றவியல் சட்டம் மற்றும் நீதி பற்றிய கருத்து என்பன ஒன்றுடனொன்று  பிணைந்து காணப்படுவதாகவும், ஒரு நபரை குற்றவாளியாக முத்திரை குத்துவதை விட பொறுப்பான பிரஜையாக சமுதாயத்திற்கு அனுப்புவதே முக்கியமானது என உதவிச் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஊடாக இதனை இரண்டு அடுக்குகள் மூலம் அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். அவை தேவையான மறுசீரமைப்புகளை நோக்கிய அரசியல் தலைமைகளை உள்ளடக்கிய அரசியல் அடுக்கு மற்றும்  தேவையான மறுசீரமைப்புகளை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்குமான பல்வேறு துறைகளில் தமது நிபுணத்துவத்தை வழங்கும் அதிகாரிகள் மற்றும் தொழில்வாண்மையானவர்களை உள்ளடக்கிய அடுக்கு என்பனவாகும்.

இந்த முறைமையை மேலும் விருத்தி செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது எனவும் உதவிச் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டி குற்றவியல் நீதி முறைமையை மறுசீரமைப்பதற்கான நீதி அமைச்சின் முயற்சிகளை பாராட்டினார். சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தம் ஒரு சில வேளைகளில் வன்முறையாகவும், பாதுகாப்பற்றதாகவும் உள்ள குற்றம் செய்தவர்கள் சிறைக்குள் வந்து செல்லும் சுழற்சியை ஏற்படுத்தும் சிறைச்சாலை நிலவரங்களுக்குள் உள்வாங்குவதை தடுக்கும் என வர மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, ஜீ.ஜீ. பொன்னம்பலம், சாகர காரியவசம், மதுர விதானகே, டயனா கமகே, காமினி வலேபொட, எஸ். கஜேந்திரன், அஜித் ராஜபக்ஷ, அகில எல்லாவல ஆகியோர் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1

2 3

5

6



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks