பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-09-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத்துக்கு இன்றைய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.
இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும், அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.
எமது அண்டைய நாடான இந்தியா 1940 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக இலங்கைக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பாரிய நிறுவனங்கள் முன்வரவில்லை எனவும் அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரையை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று, பல பில்லியன் டொலர்கள் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்த பாரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நீதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும் போது ஒன்று வெற்றிபெறுவதாகவும், நோர்வே நாட்டுக்கு முதலாவது வெற்றியடைவதற்கு 31 கிணறுகள் அகழ்வு செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 4 கிணறுகள் அகழ்வின் போதும் 3 கிணறுகள் வெற்றியடைந்தமை நல்லதொரு நிலைமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகளுக்காக உலகம் பூராவும் உள்ள துறை சார்ந்த இலங்கை நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நளின் பண்டார, முதிதா பிரஷாந்தி, குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி. ரத்னசேகர, வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர். ஒல்கா ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



