E   |   සි   |  

2021-09-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்ற மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.  

இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத்துக்கு இன்றைய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.

இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.    

மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும், அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.

எமது அண்டைய நாடான இந்தியா 1940 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக இலங்கைக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பாரிய நிறுவனங்கள் முன்வரவில்லை எனவும் அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரையை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, பல பில்லியன் டொலர்கள் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்த பாரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நீதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும் போது ஒன்று வெற்றிபெறுவதாகவும், நோர்வே நாட்டுக்கு முதலாவது வெற்றியடைவதற்கு 31 கிணறுகள் அகழ்வு செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 4 கிணறுகள் அகழ்வின் போதும் 3 கிணறுகள் வெற்றியடைந்தமை நல்லதொரு நிலைமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளுக்காக உலகம் பூராவும் உள்ள துறை சார்ந்த இலங்கை நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நளின் பண்டார, முதிதா பிரஷாந்தி, குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி. ரத்னசேகர, வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர். ஒல்கா ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

3 4

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-09

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்கு பாராளுமன்றம் அனுமதி

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (COPA) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றைய தினம் (ஜுன் 09) வழங்கப்பட்டது.இந்த அறிக்கை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இது 2025 ஜூலை 25 ஆம் திகதி வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 இன் கீழ் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, தொடர்புடைய அறிக்கை நிதி அமைச்சரினதும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் அவதானிப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவ்வமைச்சர்களின் பதில்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், 2026 மார்ச் 04 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இவ்விடயங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன.அதன்போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய, “அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய, 2025 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 ஐக் கொண்ட அறிக்கை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்” எனும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தினால் இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கையொன்று, இதற்கு முன்னர் சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்குமாக இவ்வாறு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், இத்தகையதொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


2026-06-08

நிதி (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2018ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நிதிச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான நிதி (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியதுடன், இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.இலங்கையில் தொலைத்தொடர்பு துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பது மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தியை மேம்படுத்துவது என்ற இலக்கை அடைவது இத்திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவில் புதிதாக அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அறவிடப்படும் வரியில் தற்காலிக நிவாரணம் வழங்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னல் அமுலுக்கு வரும் வகையில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு  ஐந்தாண்டு வரி விலக்கு அளிப்பது முக்கிய அம்சமாக உள்ளது.அத்துடன், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீடு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய வரி விகிதத்தை சட்டரீதியாக ஒழுங்குமுறைப்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது, வரி ஏய்ப்பின் போது (Bad Debts) பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை விளக்குவது மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி விகிதம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வரி முகாமைத்துவத்தை வெளிப்படைத்தன்மையாக முன்னெடுப்பது இதன் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு வரி விகிதத்தை முறைப்படுத்துவது மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான திருத்தத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டதுடன், செலுத்தப்படாத கட்டணங்கள் மீதான வரிகளைத் (Telecom Levy) குறைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய வாடிக்கையாளர்களினால் வரி செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் வரியைக் கணக்கிடுவது தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் இன்மையால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாத கட்டணங்களிலிருந்து வரிகளைக் கழிப்பதற்கு சேவை வழங்குனர்களுக்கு அனுமதி அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இருப்பினும், சிறு வணிகங்களுக்கு இதுபோன்ற நிவாரணம் கிடைக்காத சூழலில், ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிவாரணத்தை வழங்குவது நியாயமற்றது என்று குழு வலியுறுத்தியது. ஒரு பெரிய நிறுவனம் 2022-ஆம் ஆண்டிலிருந்து இந்த வரி நிவாரணத்தைக் கோரி வருவதாகவும், இது சந்தையின் ஒட்டுமொத்த நேர்மைக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. நுகர்வோரிடமிருந்து வரிகளை வசூலிப்பது நிறுவனங்களின் பொறுப்பு என்றும், அவர்கள் தவறுவது அரசாங்க வருவாயைக் குறைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது என்றும் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார். இதற்கமைய செலுத்தப்படாத கட்டணங்களுக்கான வரி விலக்கு அளிப்பது தொடர்பில் மேலும் விளக்கங்களைப்  பெறவேண்டியிருப்பதால் இது குறித்த விதியைப் எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அதேநேரம், இணையவழி கசினோ நடவடிக்கைகளுக்கு அரசாங்க முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் அரசாங்க முத்திரையைப் பயன்படுத்தி "உரிமம் பெற்றது" என்று குறிப்பிடும் இணையவழி கசினோ விளம்பரங்கள் குறித்து குழு விசாரணை நடத்தியதுடன், இதுவரை எந்தவொரு இணையவழி கசினோ நிறுவனத்திற்கும் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி குழுவிற்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் குழு முடிவெடுத்தது.அத்துடன், நிதி, வரி மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டதுடன், இவற்றுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வகைப்பாடு மற்றும் வரிவிதிப்பை நெறிப்படுத்தும் நோக்கில் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மற்றும் மதுவரியின் கீழ் ஒருங்கிணைந்த வகைப்பாட்டுக் குறியீடுகளுக்கு (HS குறியீடுகள்) புதிய தேசிய உப பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கான கட்டளைகளும் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், தேசிய ஆடை துறைக்கு நியாயமான போட்டிச் சந்தையை உருவாக்கும் நோக்கில் அறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு அறவிடப்பட்ட செஸ் வரியை நீக்கி 2026 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்18% பெறுமதி சேர் வரியை அறிவிடும் கட்டளையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்தின் காரணமாக இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய வரியின் அளவு அதிகரித்திருந்தாலும், சேர் பெறுமதி வரிக்கு (VAT) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அந்த வரித் தொகையை வரவுப் பற்றாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், இது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அதேநேரம், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனர்த்த நிவாரண பண ரசீதுகளுக்கு முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கும் கட்டளையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.


2026-06-08

அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கூடியது

அனுராதபுரம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் (05) கூடியது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைய செயற்படுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. அத்துடன், இவ்வழக்கிற்கான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய வைத்திய அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட சிறுமி தொடர்பில் தற்பொழுது அனுராதபுரத்திற்கு மேலதிகமாக அத்தனகல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துடன், இந்த வழக்கு மூன்று நீதிமன்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சிறுமி மேலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கப்பாட்டை வெளியிட்டது.சம்பந்தப்பட்ட சிறுமியின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒன்றியம் பரிந்துரைத்தது.அதேநேரம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், இது விடயத்தில் எதிர்கால நடவடிக்கைகளில் உரிய தலையீடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளை அறிக்கையிடும்போது சிறுவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் அவர்களின் கௌரவம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் ஊடக மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து வழிகாட்டல்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்ட உபகுழு தலையீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் ஏற்படுகின்ற சட்ட மற்றும் நடைமுறை ரீதியான தடைகளை தாண்டுவதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உபகுழு செயற்படும்.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன ஆகியோர் நிகழ்நிலை (சூம்) தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டனர்.


2026-06-03

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன

பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks