2021-08-12
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியன தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவுக்கு தமது முன்மொழிவுகளை எழுத்து மூலம் நேற்று (11) கையளித்தன.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் முன்மொழிவுகளை குழுவின் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அவர்களிடம் கையளித்தனர். இராஜங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் இதன்போது உடனிருந்தார்.
தற்பொழுது கலப்பு தேர்தல் முறைமையொன்று நாட்டுக்கு தேவை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் குழுவில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அத்தியாவசியம் எனவும், ஜனாதிபதியாக இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நியமிக்கப்படுவதை தடுப்பதற்கு உரிய முறைமை தயாரிக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை ஒரே தினத்தில் நடத்துவதற்கான சாத்தியம், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தலைகளையும் ஒரே தினத்தில் நடத்துவதன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விசேடமாக கண்டறிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாணசபை அதிகாரங்களை பரவலாக்கும் போது மாவட்ட சபை முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது அதனுடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கும் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேர்தல்களின் போது ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரச்சார வாய்ப்புக்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, புதிய மறுசீரமைப்பின் போது தேர்தல் பிரச்சார செலவுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார். பணத்தை செலவுசெய்து தேர்தலில் வெற்றிபெறும் போக்கொன்று தற்பொழுது ஏற்பட்டிருப்பதாகவும், அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு விரிவாக கவனம் செலுத்தவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
லங்கா சமசமாஜ கட்சி சார்பில் குழுவில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய தேர்தல் முறைமையொன்று நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டியது இந்நேரத்தில் தேவையானது என தெரிவித்தார். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதன் முக்கியத்துவத்தையும் பேராசிரியர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசியல் முறைமை இருக்கவேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்துவது முக்கியமானது என குழுவில் கருத்துத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியினர் தெரிவித்தனர். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கி, பாராளுமன்ற முறைமையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அருநலு மக்கள் முன்னணி ஆகியன குழு முன்னிலையில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தன.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களும் குழு முன்னிலையில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்ததுடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு புதிய மறுசீரமைப்பில் விரிவாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பல உலக நாடுகள் இலத்திரனியல் வாக்கெண்ணும் முறையை பயன்படுத்திவருவதுடன் பரீட்சார்த்த நடவடிக்கையாக இலங்கையிலும் அந்த முறையை முயற்சித்து பார்க்கவேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் ஓகஸ்ட் 18ஆம் திகதி நடைபெறவிருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.
இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், எம்.யு.எம். அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர்களும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
2026-09-03
பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது. குறித்த குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130% முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை 1,000cc இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96% ஆகும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-03
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் பொலிஸ் சேவையின் செயல்திறனை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அதன் தலைவர் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் கடந்த ஆக. 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில் இணையக் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. சட்டவிரோத சூதாட்டம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, குறித்த வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தை வலுப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளைப் பணியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சியுடன் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடனடியாகச் செயற்படுத்தக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை நிறுவுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கிரிப்டோ நாணயப் பயன்பாடு தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது காணப்படும் தடைகளை குறைப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை, அக்குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியில் கசியாமல் தடுப்பது மற்றும் சமூக பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் ஆதரவை மேலும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
2026-09-02
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்புரியையும், அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள “இன்சா” (InSA – Integrated Systematic Approach for the Family Development of Migrant Workers) திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், 2026 ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நிதி முகாமைத்துவம், சிறுவர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில் பயிற்சி, சிறுதொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி ஆகிய பிரதான துறைகளில் கவனம் செலுத்தி குடும்ப அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக, 2 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்லும் போது, அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் முறையான திட்டமொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குழுவில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இரண்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இதற்காக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மற்றும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் என மூன்று கட்டங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன்புரி தொடர்பில் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதன்படி, பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்படும் மாற்று பராமரிப்புத் திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துதல், ஆபத்தான நிலைமைகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் விசேட பராமரிப்புத் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் குடும்பங்களுக்கு குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், பிரதேச செயலக மட்டத்தில் “இன்சா குழுக்கள்” (InSA) அமைக்கப்படவுள்ளதுடன், உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது.சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை தயாரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொள்வதன் முக்கியத்துவமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது. சுற்றுலா விசா உள்ளிட்ட முறைசாரா வழிகளின் ஊடாக வெளிநாடு செல்லும் நபர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பங்களுக்கான நலன்புரி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் முறையான தரவுத் தொகுதியொன்றைப் பேணுவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, மாவட்ட மட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படவுள்ளதுடன், “இன்சா” (InSA) திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை 2027 பெப்ரவரி மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
2026-09-02
பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கப் பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி சட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்கேற்ற தேவைகளுக்கு அமைவாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.எனினும், நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தனியான அலுவலகமொன்றையோ பதவியொன்றையோ தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், தற்போது முன்னெடுக்கப்படும் முப்படைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், குறித்த ஒருங்கிணைப்புப் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, குறித்த அலுவலகத்தின் பணிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க முடியும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.