பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-08-04
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நீதிமன்ற கட்டமைப்பில் தற்பொழுது காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்து விரைவில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று வருட விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நேற்று (03) நடைபெற்ற நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்கும் தற்பொழுது காணப்படும் நீதிமன்றங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான மூன்று வருட விசேட திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, சாஹர காரியவசம், ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்ஹ, மர்ஜான் பளீல், சந்திம வீரக்கொடி மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 200ற்கும் அதிகமான நீதிபதிகள் காணப்படுவதாகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய நீதிபதிகளின் எண்ணிக்கையை 218 ஆக உயர்த்துவதற்கும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 245ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நீதிபதிகளுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், இதனை எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நீதிமன்றக் கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், E-Filing முறைமை மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
மத்தியஸ்த சபையை பலப்படுத்தவும், இவற்றின் ஊடாக தீர்க்கப்படும் பிரச்சினைகளின் எண்ணிக்கையை அடுத்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி மத்தியஸ்த சபையை யாழ்ப்பாணம், அநுராதபும், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதித்துறையை மறுசீரமைப்பதற்கு நிபுணர்கள் குழுக்கள் சில அமைக்கப்பட்டிருப்பதுடன், உயர் நீதிமன்ற நீதிபதி சமயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய புதிய நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மேல் மாகாணத்தில் மஹர மாவட்ட நீதிமன்றம், மீரிகம மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம், வெலிசர மாவட்ட நீதிமன்றம், பேருவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம், களுத்துறை மீஹகத்தென்ன மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.
நீதிமன்றங்களில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை புனரமைப்பதற்கு இந்த மூன்று வருட விசேட திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
பாரிய நிதி மோசடி மற்றும் சிறிய நிதி மோசடி வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கு நிதி மோசடிகள் தொடர்பில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் போது 1.5 மில்லியன் ரூபா நிதி மோசடிகளுக்கான வழக்குகளுக்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தண்டனைக்கு பதிலாக செயல்படுத்தப்படும் சமூக சீர்திருத்த செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
நீதிமன்றங்கள் பலவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து ஏற்கனவே கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் நீதிமன்ற வளாகத்தைப் பூர்த்தி செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்றங்களைக் கொண்டதாக இந்த நீதிமன்ற வாளாகம் அமைக்கப்படுகிறது. இதில் நீதி அமைச்சும் நிறுவப்படும் மற்றும் நீதிபதிகளுக்காக 50 வீடுகளும் கட்டப்படும். நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதியை புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் சுமார் 500 மில்லியன் யுவான் மானியம் வழங்கியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு முதல் தாமதமாகி வரும் பணியை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இங்கு விளக்கமளித்தார். பிரதம நீதியரசர் அண்மையில் இது தொடர்பில் விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருப்பதாகவும், இதற்கு அமைய சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுண்ண உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

