logo

02

E   |   සි   |  

2021-08-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நீதிமன்ற கட்டமைப்பை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்ற மூன்று வருட விசேட திட்டம் – நீதி அமைச்சர் அலி சப்ரி

நீதிமன்ற கட்டமைப்பில் தற்பொழுது காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்து விரைவில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று வருட விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நேற்று (03) நடைபெற்ற நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்கும் தற்பொழுது காணப்படும் நீதிமன்றங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான மூன்று வருட விசேட திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, சாஹர காரியவசம், ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்ஹ, மர்ஜான் பளீல், சந்திம வீரக்கொடி மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 200ற்கும் அதிகமான நீதிபதிகள் காணப்படுவதாகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய நீதிபதிகளின் எண்ணிக்கையை 218 ஆக உயர்த்துவதற்கும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 245ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நீதிபதிகளுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், இதனை எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நீதிமன்றக் கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், E-Filing  முறைமை மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

மத்தியஸ்த சபையை பலப்படுத்தவும், இவற்றின் ஊடாக தீர்க்கப்படும் பிரச்சினைகளின் எண்ணிக்கையை அடுத்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி மத்தியஸ்த சபையை யாழ்ப்பாணம், அநுராதபும், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதித்துறையை மறுசீரமைப்பதற்கு நிபுணர்கள் குழுக்கள் சில அமைக்கப்பட்டிருப்பதுடன், உயர் நீதிமன்ற நீதிபதி சமயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய புதிய நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மேல் மாகாணத்தில் மஹர மாவட்ட நீதிமன்றம், மீரிகம மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம், வெலிசர மாவட்ட நீதிமன்றம், பேருவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம், களுத்துறை மீஹகத்தென்ன மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.

நீதிமன்றங்களில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை புனரமைப்பதற்கு இந்த மூன்று வருட விசேட திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாரிய நிதி மோசடி மற்றும் சிறிய நிதி மோசடி வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கு நிதி மோசடிகள் தொடர்பில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் போது 1.5 மில்லியன் ரூபா நிதி மோசடிகளுக்கான வழக்குகளுக்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தண்டனைக்கு பதிலாக செயல்படுத்தப்படும் சமூக சீர்திருத்த செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்றங்கள் பலவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து ஏற்கனவே கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் நீதிமன்ற வளாகத்தைப் பூர்த்தி செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்றங்களைக் கொண்டதாக இந்த நீதிமன்ற வாளாகம் அமைக்கப்படுகிறது. இதில் நீதி அமைச்சும் நிறுவப்படும் மற்றும் நீதிபதிகளுக்காக 50 வீடுகளும் கட்டப்படும். நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதியை புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் சுமார் 500 மில்லியன் யுவான் மானியம் வழங்கியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு முதல் தாமதமாகி வரும் பணியை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இங்கு விளக்கமளித்தார். பிரதம நீதியரசர் அண்மையில் இது தொடர்பில் விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருப்பதாகவும், இதற்கு அமைய சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுண்ண உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-23

சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய முறைகேடு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


2026-07-22

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிக்குறிப்பு வரைவுக்கு அங்கீகாரம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு,  பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


2026-07-22

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வின் வழிமுறை தொடர்பில் கோப் உபகுழுவில் ஆராய்வு

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால்  (கோப்)  நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.


2026-07-22

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காணி, நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு தகவல்களை வழங்குவது குறித்து கோப் குழுவில் அவதானம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு  பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks