01

E   |   සි   |  

2021-08-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நீதிமன்ற கட்டமைப்பை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்ற மூன்று வருட விசேட திட்டம் – நீதி அமைச்சர் அலி சப்ரி

நீதிமன்ற கட்டமைப்பில் தற்பொழுது காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்து விரைவில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று வருட விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நேற்று (03) நடைபெற்ற நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்கும் தற்பொழுது காணப்படும் நீதிமன்றங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான மூன்று வருட விசேட திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, சாஹர காரியவசம், ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்ஹ, மர்ஜான் பளீல், சந்திம வீரக்கொடி மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 200ற்கும் அதிகமான நீதிபதிகள் காணப்படுவதாகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய நீதிபதிகளின் எண்ணிக்கையை 218 ஆக உயர்த்துவதற்கும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 245ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நீதிபதிகளுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், இதனை எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நீதிமன்றக் கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், E-Filing  முறைமை மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

மத்தியஸ்த சபையை பலப்படுத்தவும், இவற்றின் ஊடாக தீர்க்கப்படும் பிரச்சினைகளின் எண்ணிக்கையை அடுத்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி மத்தியஸ்த சபையை யாழ்ப்பாணம், அநுராதபும், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதித்துறையை மறுசீரமைப்பதற்கு நிபுணர்கள் குழுக்கள் சில அமைக்கப்பட்டிருப்பதுடன், உயர் நீதிமன்ற நீதிபதி சமயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய புதிய நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மேல் மாகாணத்தில் மஹர மாவட்ட நீதிமன்றம், மீரிகம மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம், வெலிசர மாவட்ட நீதிமன்றம், பேருவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம், களுத்துறை மீஹகத்தென்ன மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.

நீதிமன்றங்களில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை புனரமைப்பதற்கு இந்த மூன்று வருட விசேட திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாரிய நிதி மோசடி மற்றும் சிறிய நிதி மோசடி வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கு நிதி மோசடிகள் தொடர்பில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் போது 1.5 மில்லியன் ரூபா நிதி மோசடிகளுக்கான வழக்குகளுக்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தண்டனைக்கு பதிலாக செயல்படுத்தப்படும் சமூக சீர்திருத்த செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்றங்கள் பலவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து ஏற்கனவே கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் நீதிமன்ற வளாகத்தைப் பூர்த்தி செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்றங்களைக் கொண்டதாக இந்த நீதிமன்ற வாளாகம் அமைக்கப்படுகிறது. இதில் நீதி அமைச்சும் நிறுவப்படும் மற்றும் நீதிபதிகளுக்காக 50 வீடுகளும் கட்டப்படும். நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதியை புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் சுமார் 500 மில்லியன் யுவான் மானியம் வழங்கியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு முதல் தாமதமாகி வரும் பணியை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இங்கு விளக்கமளித்தார். பிரதம நீதியரசர் அண்மையில் இது தொடர்பில் விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருப்பதாகவும், இதற்கு அமைய சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுண்ண உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks