E   |   සි   |  

2021-02-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மார்ச் மாதமாகும் போது இலங்கையின் சனத்தொகையில் 57 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் கொவிட்-19 சமூகத்துக்குள் கொண்டுவரப்படுவதையும், சமூகத்தின் மத்தியில் உள்ள வைரஸ் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதற்கமைய எப்பொழுதும் சுகாதார விதிமுறைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமான செயற்பாடு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு முகங்கொடுப்பது மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்கு அதிக காலத்தை செலவுசெய்வது தொடர்பில் தனது கருத்தைத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதற்கமைய மார்ச் மாதமாகும்போது நாட்டின் சனத்தொகையில் 57 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

உடவளவை தேசிய சரணாலயம் மற்றும் போகஹாபிட்டிய உத்தேச அபயபூமிக்கு இடையில் அமைந்துள்ள தஹய்யகல யானைகள் சரணாலயம் யானைகளுக்கான வழிப்பதாதையாக இருப்பதால் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அந்தப் பகுதி சட்டவிரோதமாக அகற்றப்படுவதால் இங்குள்ள யானைகளுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக பாராளுமன்ற உறுப்பினர் வருன லியனகே சுட்டிக்காட்டினார்.

யானைகள் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சிறந்த வளமாகும் என்றும், சுற்றுலாத்துறையை வெற்றிகொள்வதற்கு வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட, இலங்கை தொடர்பான தகவல்களை சுற்றுலாப் பயணிகள் இணையத்தளங்களின் ஊடாகவே அதிகமாகப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் குறித்து இணையத்தளங்களில் காணப்படும் தகவல்கள்  தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளது. கவர்ச்சியரமான புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இணையத்தளங்களில் காணப்பட்டாலும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை இருப்பதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இவற்றை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை முன்வைத்தார்.

இந்த ஆலோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் தமது இணக்கத்தைத் தெரிவித்திருந்ததுடன், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களை விசாரித்த பின்னர் இது தொடர்பில் நம்பகத்தன்மை அல்லது உறுதிப்படுத்தலை வழங்குவதன் ஊடாக சுற்றுலாத்துறையை பலப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டனர்.

காலி மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, கீதா குமாரசிங்க, மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். காலி மாவட்டம் உள்ளிட்ட தென்மாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து சுற்றுலா அமைச்சர் வினவியிருந்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018ஆம் ஆண்டுக்கான  வருடாந்த அறிக்கை, சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் 2018ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை இங்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இவற்றை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வி.சானக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, மனுஷ நாணயகார, உதயன கிரிந்திகொட, ஜயந்த கெடகொட, டொக்டர் உபுல் கலப்பதி, எம்.உதயகுமார, டயானா கமகே, குணதிலக ராஜபக்ஷ, வீரசுமன வீரசிங்க, சம்பத் அதுகோரல, சிவஞானம் சிறிதரன் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks