01

E   |   සි   |  

2020-11-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி இறக்கும் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு

மின்சார சபையின் மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் இறப்புக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை தயாரிக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

திடீர் மின் தடை காரணமாக வீட்டு உபகரணங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மின்சக்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நேற்று (30) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மின் தடை ஏற்படுத்தும் போது அதனை ஒரு வாரத்திற்கு முன்னர்  பாவனையாளர்களுக்கு அறியப்படுத்துவதற்கான நடைமுறையொன்றை ஆரம்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளில் வீதி மின்விளக்கு வழங்கும் செயன்முறையை முறைமைப்படுத்தவும் அவ்வாறு வழங்கப்படும் வீதி விளக்குகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. வீதி விளக்குகளுக்கு ஒரு வருடத்துக்கு மின்சார சபையினால் இரண்டு பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்படுகிறது. மின்சக்தியினால் இயங்கும் வீதி விளக்குகளை பொருத்துவதற்கு முடியாத பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள் பொருத்தும் அவசியம் பற்றியும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மின்னல் தாக்கும் பகுதிகளில் மின்னல் காரணமாக ஏற்படும் பாரிய அளவிலான சொத்து சேதங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பாக இடர்முகாமைத்துவ திணைக்களத்துடன் கலந்தாலோசித்து தீர்வுகாண முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் சூரிய மின் கலங்களை (Solar Panel) பொருத்தும் போது உரிய பொறிமுறையொன்றை உருவாக்குதல் மற்றும் பாவனையாளர்களை அசௌகரியப்படுத்தாத முறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்காக நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக ஒழுங்குபடுத்தும் முறைமையொன்றை உருவாக்குவதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, அரச நிறுவனங்களுக்கு சூரிய மின் கலங்களை வழங்குவதற்கும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய் நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்மூலம் அரச நிறுவனங்களின் மின்சார கட்டணங்களுக்காக செலவு செய்யப்படும் பாரிய நிதியை படிப்படியாக குறைக்க முடியும். இதேவேளை, அரச நிறுவனங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை பொருத்துவதற்கு வாடகைக்கு வழங்குவதன் ஊடாக இலாபமீட்டும் வேலைத்திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதீ துஷ்மந்த, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, சமன்பிரிய ஹேரத், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-01-09

தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தள மையமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது கோபா குழு

தகவல் தொழில்நுட்ப (IT) அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து குழு வலியுறுத்து தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியதுதொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழு 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி கூடியபோது நாட்டில் உள்ள அனைத்து தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்கள், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் வெற்றி தோல்விகள், அகழ்வாராய்ச்சிகள் தொடரப்பட வேண்டுமா, எவ்வாறான இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஒரு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்து அதனைப் பராமரிக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டமை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லையென்றும், அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதிகளை வழங்குவது தொடர்பான தரவுத்தளம் மாத்திரமே பராமரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மையப்படுத்தப்பட்ட தரவுத் தளமொன்றைத் தயாரித்து பராமரிப்பது முக்கியமானது என்றும், தேவைப்படும் பட்சத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன், குறித்த திணைக்களத்திற்கு மேலதிகமான தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பன்னிரண்டு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள போதும், தற்பொழுது ஒரு அதிகாரியே பணியில் இருப்பதாகவும், அவர் தலைமையகத்திற்கு இணைக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலவும் வெற்றிடங்களுக்குத் தேவையான அதிகாரிகளை விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் குறித்த அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளக் கட்டமைப்பொன்றுக்கான முன்மொழிவை மூன்று மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. குறிப்பாக, தொல்பொருளியல் திணைக்களத்தின் இணையதளத்தைப் புதுப்பிப்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மிகவும் முக்கியமானது என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இணையத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் தளங்களில் 48% வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.உலக மரபுரிமைகளாகப் பெயரிடுவதற்கு யுனெஸ்கோவினால் முன்மொழியப்படவிருக்கும் தளங்கள் மற்றும் அவை தொடர்பான வரைபுகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சுகத் திலகரத்ன, அரவிந்த செனரத், நளின் ஹேவகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, (மருத்துவர்) ஜனக சேனாரத்ன, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, லால் பிரேம்நாத், மஞ்சுள சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.கடந்த குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, பாடசாலைகளை நடத்திச் செல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை கௌரவ ஜனாதிபதி வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு மேலதிகமானவர்களை அனுப்புவது போன்ற விடயங்கள் குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2026-01-08

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கூடியது

டித்வா காரணமாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காக 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் - நிதி அமைச்சின் செயலாளர்நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (ஜன. 07) கௌரவ ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு நிதி வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காகப் பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் ஆகியவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு ஏற்கனவே ஒரு பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் இன்னும் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.மேலதிக நிதியை வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கு முன்னதாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிதியை முறையாகப் பயன்படுத்துவதற்கான முறையான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வணிகத்தையும் பதிவு செய்வதற்கான பொறிமுறையின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து வர்த்தகச் சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.அதற்கமைய, கடந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.அதேபோன்று, அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-01-08

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் அனுமதி

நாளை (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்", எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது. அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் 'ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்', என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks