பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-11-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
காணி கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, நேற்று (26) நடைபெற்ற காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் குறிப்பிடுகையில், உரிமம் பெற்ற காணிகளுக்கான உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்த திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்றார். பிம்சவிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சட்டத்தைத் திருத்துவதன் ஊடாக இப்பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் எனவும் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு காணித் துண்டுகளை வழங்கும் வேலைத்திடம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதற்காக ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விண்ணப்பங்களைக் கையளிப்பதற்கான காலம் கடந்த 15ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்ததாகவும், இதனை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
சட்டவிரோதமாக கணிகளைக் கையகப்படுத்துவது போன்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அரச உடைமையாக்கப்பட்ட காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கே பெற்றுக்கொடுப்பது சட்டவிரோதமானது என பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுண்ண தெரிவித்தார். புத்தளத்தில் காணி கொள்ளை இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணி தொடர்பில் விசேட சுற்றுநிருபமொன்றை தான் விரைவில் வெளியிடவிருப்பதாகவும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். குறித்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதை ஒழுங்கு முறைப்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் நியகம பிரதேசத்தில் உள்ள காணி கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல இங்கு சுட்டிக்காட்டியதுடன், இந்தக் காணியை மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் காணி அளவிடும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
எச்.நந்தசேன, அசங்க நவரட்ன, குணதிலக ராஜபக்ஷ, வசந்த யாப்பாபண்டார, சமன்பிரிய ஹேரத், உபுல் கலபதி, மிலான் ஜயதிலக, ஜே.சி.அளவத்துவல, கயந்த கருணாதில, சஞ்சீவ எதிரிமான உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks